அப்பா .... அப்பா ... அப்பா

அயல்தேசத்திலிருந்து...
அப்பாவுக்காய் ஓர் கடிதம்...

இதய தேசத்தில் உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும்
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள் !

அப்பா செளக்கியமா...?

நீ -என் தேவைகளை நிறைவேற்ற
தகுதியை மீறி உழைத்தாய்!
நானோ தியேட்டர் சுவரை மீறி செலவழித்தேன்

அப்பா! நான் கேட்கத் தயங்குவேனெனத்
தெரிந்து எனக்குத் தெரியாமல் ...
என் பாக்கெட்டில் பணம் வைப்பாய் !
ஆனால் நான் அதிகம் செலவழிப்பதாய் ...
அம்மாவைத் திட்டுவாய்!
நீ கோடையில் நின்றாலும் –
எனக்கு குடை வாங்கிக் கொடுத்தாய்...
உன் வியர்வை விற்ற காசில் –
எனக்கு குளிர்சாதனப் பெட்டி!

உன் சைக்கிள் சுழற்சி தான் –
எனக்கு பைக் வாங்கிக் கொடுத்தது...
நீ மிதித்த சுவடுகள் சைக்கிள்
பெடலில் அல்ல !
என் இதயத்தில்தான் அதிகமாய்
பதிந்திருக்கிறதப்பா..

வேலைசெய்து பணம் அனுப்புகிற வயசில்
நான் வேலை தேட ..
.வேலை தேடிய எனக்கு நீ
பணம் அனுப்பினாயே ?

இப்படி இதய தேசத்தில்
உன் நினைவுகள் நிறைய இருந்தாலும் ...
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!
உன் பாக்கெட்டில் பணம் திருடியது
நான் தான் என தெரிந்தும் ...
இதுவரை எனைக் காட்டிக் கொடுக்காமல்
பணம் தொலைந்ததாய் நீ செய்த பாசாங்கு!
இது போல கடிதம் சுமக்காத பல நிகழ்வுகள்
உன்னுள்ளும் .........என்னுள்ளும் .........
நிச்சயமாய் சொல்கிறேனப்பா!
உன்வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது ·பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...

ஒரே ஒரு வேண்டுகோள் அப்பா ?
வீடு...
நிலம் ...
பணம் ...
சொந்தம்...
உலகக் காரணிகள்
எவையும் நம்மைப் பிரித்துவிடக் கூடாது
இறைவனுக்கு மட்டும் விதிவிலக்கு!

-ரசிகவ் ஞானியார்

நீ எனக்கு வேண்டாமடி

சைனாவுக்கு போக வேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர் சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும்
ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
நான்
செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே
அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவகை;கும்
நீ எனக்கு
வேண்டாமடி!

- ரசிகவ் ஞானியார்

திருக்குறள்

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக


மு.வ உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.



சாலமன் பாப்பையா உரை:
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க

கலைஞர் உரை:
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்


விளக்க உரை

கற்க - நல்ல கற்க வேண்டும் . கல்வி அனைவருக்கும் அவசியம் அதனால் கற்க வேண்டும் .

கசடற - சந்தேகங்களை களைத்து அல்லது சந்தேகங்கள் இல்லாமல் தெளிவாக முழுமையாக கற்க வேண்டும். சந்தேகங்களோடு கற்றால் அந்த கல்வி வீண் . ஆகையால் சந்தேகங்கள் இல்லாமல் கற்க வேண்டும்.

கற்பவை கற்றபின் - கற்க வேண்டியவைகளை கற்க வேண்டும். இந்த நேரத்தில் எதை கற்க வேண்டுமோ அதை கற்க வேண்டும் .

நிற்க அதற்குத் தக - படித்த பின் படித்துக்கு கருத்துக்கு ஏறார் போல் வாழ வேண்டும் அல்லது படித்த கருத்தை அல்லது செயலை பயன்படுத்தி பார்க்க வேண்டும் .