பாரக் ஒசாமா (அ) ஒபாமா பின்லேடன் என்கிற அமெரிக்க அதிபருக்கு ஒரு மடல் ...


அன்புள்ள அமெரிக்க  பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம். 

தாங்கள் எப்போதும் நலம் என அறிவேன்.   கடந்த சில தினங்களாக தாங்கள் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் சூப்பர் மேன் அளவுக்கு புகழப்படுவது அளவுக்கு அதிகமாகவே நடக்கிறது. ஒசாமா பின்லேடனை கொலை செய்யும் பத்திரத்தில் தாங்கள் கையெழுத்திட்டதன் விளைவு இது. ஏதோ ஒசாமாவை கொலை செய்ததுடன் உலகில் இனி தீவிரவாதமே நடக்காது என்பதாக பிரச்சாரம் முழுவீச்சில் நடந்துவருகிறது. 

பின்லேடன் கொலையை தாங்கள்  தங்கள் அமைச்சரவை சகாக்களுடன் நேரடி ஒளிபரப்பில்  பார்த்ததை எங்கள் ஊர் பத்திரிகைகள் பிரசுரம் செய்திருந்தன. உங்களுக்கே அதிர்ச்சியான செய்தி ஒன்று சொல்கிறேன். பின்லேடனின் கடைசி நிமிடம் என எங்கள் பத்திரிகைகள் பிரசுரம் செய்ததை படித்திருந்தால் உங்களுக்கு மயக்கமே வந்திருக்கும். அந்த அளவு புலனாய்வு புலிகள் எங்கள் ஊரில் இருக்கின்றனர். இது இருக்கட்டும்.      

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் நாட்டில் அடுக்கடுக்காக மூடப்பட்ட நிதி நிறுவனங்கள், வங்கிகள், இதையொட்டி எழுந்த வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்சனைகளில் சரிந்திருந்த உங்கள் செல்வாக்கு இந்த கொலையின் மூலமாக உயர்ந்திருப்பதாக உங்கள் ஊர் ஊடகங்கள் அறிவிக்கின்றன. அதை அப்படியே எங்கள் ஊர் ஊடகங்களும் வாந்தி எடுக்கின்றன. இதுவெல்லாம் உண்மைதானா ஒபாமா? உங்கள் நாட்டில் அதற்குள்  அடுத்த தேர்தலில் உங்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு நடக்கிறதாமே? ஒசாமாவை வைத்துதான் நீங்கள் பிழைப்பு நடத்துகிறீர்கள், அவர் இருந்தாலும், இறந்தாலும்.      

இரட்டை கோபுர கொடூரத்திற்கு நீங்கள் பதிலடி கொடுத்திருப்பதாக பலர் சந்தோஷ கூச்சலிடுகின்றனர். கைத்தட்டி சந்தோஷம் அடைகின்றனர்.  இல்லை அதிபரே! திட்டமிட்டு இன்னும் ஒரு வினையை விதைக்கிறீர்கள் என்பது என்னை போல உங்களுக்கும் தெரியும். ஒசாமாக்களை உருவாக்கும் நீங்கள் ஏன் அவரை கொலை செய்யப் போகிறீர்கள்? 

உங்களுக்கு நஜிபுல்லாவை நினைவிருக்கிறதா அதிபரே? முற்போக்கு சிந்தனை கொண்ட ஆப்கானிஸ்தானின் மக்கள் அதிபர் நஜிபுல்லாவை கொலை செய்யத்தானே தாலிபான்களையும் ஒசாமாக்களையும் உருவாக்கினீர்கள். நடுரோட்டில் அந்த அதிபரின் உடல் தூக்கில் தொங்கியதை வரலாறு அவ்வளவு எளிதிலா மறந்துவிடும். ஆப்கானிஸ்தான் துவங்கி இராக் வழியாக உங்கள் அத்துமீறல் கொஞ்சமா? ஒசாமாவை பிடிக்க பாகிஸ்தானில் நீங்கள் அத்து மீறி  நுழைந்தது சரியா? எந்த நாட்டுக்குள்ளும் புகுந்து அந்த நாட்டிலுள்ளோர் அனுமதி பெறாமல் யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளுவது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா? நாளை நீங்கள் வேறு ஒருவனை பிடிக்க இந்தியாவுக்குள்ளும் நுழை வீர்கள்தானே?

இரட்டைகோபுர தாக்குதல் நடந்தவுடன் உங்கள் நாட்டின் அன்றைய அதிபர் ஜூனியர் புஷ், பின்லேடனை பிடிக்க உத்திரவிட்டார். ஒன்று அமெரிக்கா பக்கம் நில்லுங்கள் அல்லது நீங்கள் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என கொக்கரித்தார்! பின்லேடனை பிடிக்க புறப்பட்ட உங்கள் நாட்டின் படைகள் அவரது சிகையைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் தாலிபான்களை வீழ்த்துவதும், அங்குள்ள பெண்களை பர்தாவுக்குளிருந்து பாதுகாப்பதுமே எங்கள் கடமை என்றார். அன்று ஆப்கானுக்குள் நுழைந்தீர்கள்.. இன்று பாகிஸ்தான்.

அமெரிக்கா அத்துமீறி நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தால், ஒரு சர்வதேச குற்றவாளியை கொன்றதற்கு ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறீர்கள். கேள்வி, ஒசாமாவை கொன்றதல்ல, அத்துமீறி ஒரு நாட்டில் நுழைவதுதான். சரி உங்கள் நாடு செய்திருக்கிற படுகொலைகளை பட்டியல் போட்டு உங்கள் நாட்டுக்குள் கைது செய்ய புகுந்தால் அதிகாரத்தில் இருப்போரில் எத்தனை பேர் மிஞ்சுவீர்?

1991 ஆம் ஆண்டு சீனியர் புஷ் இராக்கில் நடத்திய தாக்குதலில் 1 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதற்கும், அமெரிக்க சி.ஐ.ஏ விடம் பயிற்சி பெற்றவர்களால் கொல் லப்பட்ட 1,50,000 ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது வீசிய அணு குண்டுகளால் கொடூரமாக அழித் தொழிக்கப்பட்ட மூன்று லட்சம் ஜப்பானிய மக்களுக்கும், வியட் நாமில் நேபாம் குண்டுகளுக்கு இரை யான அப்பாவி மக்களுக்கும், 1989ல் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்படு அகதிகளாக்கப்பட்ட பனாமா மக்களுக்கும், உங்களை ஆதரிக்கவில்லை என்ற ஒரே கார ணத்திற்காக இராக், கியூபா போன்ற நாடுகளுக்கு உணவும், மருந்தும் கிடைப்பதை தடைசெய்து அதனால் உயிரிழந்த குழந்தைகளுக்கும் நீதி வேண்டும் என்று எல்லோரும் புறப் பட்டால் உங்கள் கதி என்னாகும் அதிபரே!

இவற்றையெல்லாம் விடுங்கள், இப்போது உங்கள் நாட்டின் முக்கிய அலுவலகங்கள் இருக்கிற சான் டாஃபே நகரத்தின் கதை தெரியுமா? அங்கு இருந்த பல லட்சக்கணக் கான அமெரிக்க பூர்வகுடி மக்களின் மீது குண்டு வீசி தாக்கி அவர்களது சடலத்தில் எழுந்த நகரம் இது என நீங்கள் அறிவீர்களா? இப்போது தெரிகிறதா உலகில் மிகப்பெரிய பயங் கரவாதிகளின் தலைவன் நீங்கள் என உங்களுக்கு இன்னும் உங்கள் பூர்வீகம் தெரிய வேண்டுமெனில் தென் அமெரிக்காவின் சிலி மட்டு மல்ல, குவாதிமாலா, ஈக்வடார், பிரே சில், பெரு, டொமினிக் குடியரசு, பொலிவியா, நிக்கரகுவா, ஹோண்டு ராஸ், பனாமா, எல்சால்வடார், மெக் ஸிகோ, கொலம்பியா போன்ற நாட் டின் மக்களைக் கேளுங்கள்.

இவை போதாது எனில் நைஜீரிய ஆற்றுப் படுகைகளில் வழிந்தோடும் நைஜீரிய மக்களின் உதிரம் உங்களுக்கு பதில் சொல்லும். ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் டாலர்கள் உங்களை வளப்படுத்த அந்த இரத்தம் பயன்படுவதை அறிவீர்கள்தானே. உலகின் மிக நீளமான நதியான நைல் நதியும் அமேசான் காடுகளும் உங்கள் லாப வேட்டையின் பொருள் கூறும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியப் படைகள் உங்கள் இராணுவ டாங்கிகளின் குழாய் வழியேதான் அம்மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறது என தெரியாமலா நீங்கள் அமெரிக்காவின் அதிபர் ஆனீர்கள்?  ஒரு காலத்தில் வர்த்தகம் என்று சொல்லிக்கொண்டு பல நாடுகளுக்குள்ளும் ஊடுருவி மக்களை அடி மைப்படுத்தி அந்த நாட்டின் வளங் களைக் கொள்ளை அடித்தார்கள். இன்று தீவிரவாதம் என்று சொல்லிக் கொண்டு பல நாடுகளுக்குள் ஊடு ருவி மக்களை அடிமைப்படுத்தி அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கிறீர்களே! இது தொடர் கதையாவது உங்கள் வியா பார உத்திதானே? தீவிரவாதம், பயங்கரவாதம், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல், மக்கள் பாதுகாப்பு போன்ற பூச்சாண்டிகளைக் காட்டிக் காட்டியே லத்தீன் அமெரிக்கா துவங்கி பல உலக நாடுகளில் கொடூரமான அத்துமீறல்களை செய்தீர்கள்.

உங்களால் ஒசாமாவை உயிரோடு பிடித்திருக்க முடியும்தானே. இருந்தாலும் நீங்கள் உயிரோடு அவரை பிடிக்காமல் இருந்த காரணம் தெரியும். இது ஒன்றும் புதிதல்ல. எங்கள் ஊரில் சந்தன வீரப்பன் என்ற ஒருவர் இருந்தார். சாதாரண திருடனை சந்தனக் கட்டை திருட வைத்து அவர் மூலம் சம்பாதித்த வட்டங்கள், மாவட்டங்கள் துவங்கி பல அரசியல்வாதிகளும், அதிகாரபலத்தை கையில் வைத்திருந்த பலர் அவனை வளர்த்தனர் வீரப்பனால் அவர்களும் வளர்ந்தனர். இனி அவர் பேசினால் பிரச்சனை என்றதும் அவரை என் கவுண்டரில் முடித்தார்கள். அதுபோல ஒசாமா வாயை திறந்தால் உங்களது உண் மைகள் வெளியே வரும் என்பதால் உயி ருடன் பிடிக்க வாய்ப்பி ருந்தும் கொலை செய்தீர் கள் என்ற குற்றச்சாட்டு உண்மைதானா? எதுவா கினும் எங்கள் ஊர் இலக்கிய பாடலை உங்களுக்கு சொல்லி முடிக்க விரும்புகிறேன்.
காரியசான் எழுதிய சிறுபஞ்ச மூலம் என்ற நூலில் ஒரு பாடல் உள்ளது.

சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; 
நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம்; 
மயிர்தான் வலம் படாமாவிற்குக் கூற்றம் ஆம்; 
ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை. 

இந்த பாடலின் அர்த்தம் இது தான். சிலந்திக்கு அதன் முட்டையும், விலங்குகளுக்கு அவற்றின் கொம்புகளும் எமனாகும். கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டிற்கு அதன் குஞ்சுகளும், ஒருவனுடைய நாவிற்கு நன்மையில்லாத வசை மொழிகளும் எமனாகும். அது போல உங்கள் நாட்டிற்கு உங்கள் கொள்கைகளே ஆபத்தை உருவாக்கும் என்பதை அறியாமல், உங்கள் வேட்டை நாய்களில் ஒன்றை கொன்றழித்துவிட்டு தீவிரவாதத்தை அழித்ததாக காட்சிப்படுத்துவது உலகை மட்டுமல்ல, உங்களையும் ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.

அமெரிக்க வரலாற்றில் அதிபரான முதல் கருப்பர் என்ற பெருமை மட்டும் உங்களுக்கு போதுமெனில் இந்த கொள்கையை தொடருங்கள். அமெரிக்காவில் ஆபிரகாம்லிங்க னுக்கு பிறகு ஒரு மனிதன் அதிபரானது இதுதான் முதல் முறை என பெயரெடுக்க வேண்டுமெனில்.. கொஞ்சம் யோசியுங்கள். நன்றி அதிபரே.
 

திருப்பூரில் இரண்டு ஆண்டுகளில் 980 பேர் தற்கொலை

ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை திருப்பூர் நகரில் 980 பேர் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக மேற்கு மண்டல ஐ ஜி சிவனாண்டி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களில் இருந்து வேலை தேடி வந்த 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்கள்.

குறிப்பாக ஜாதி, மத பிளவுகளை மீறி கலப்பு மணம் புரிந்த ஆண்கள் சமூக அழுத்தங்களை சந்திக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சமயமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனால் ஊதியப் பற்றாக் குறையாலும், கடன் தொல்லையாலும் பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தொழற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இக்கூற்றை ஏற்றுமதியாளர்கள் மறுக்கின்றனர்.

பத்து பிரச்னைகளை பத்துப் பேர் அலசுகிறார்கள்!

விவசாயி கையில் விவசாயம் இல்லை!" -நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி

''தமிழக விவசாயிகளைப் பொறுத்த அளவில், தொடர்ந்து அமையும் எல்லா அரசாங்கங்களாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள், பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இந்த ஆட்சியிலும் அது தொடர் கதை தான்!
ஜீவாதார நதி நீர்ப் பிரச்னைகளை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இருக்கும் நீர்நிலைகளும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில், அரசாங்கம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள் என்ற பெயரில் மேற்கொண்டு வரும் ராட்சசத் திட்டங்களுக்காக ஏரி, குளங்களைக் காவு வாங்கிவிட்டார்கள். சாலை ஓரம் இருந்த விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் ஆசாமிகளால் சூறையாடப்பட்டு, வடிநிலங்களான தரிசுகளும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,737 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி. ஆனால், அரசாங்கம் இந்த எண்ணிக்கையை வெறும் '3’ என்று சொல்கிறது. எண்ணிக்கையை மறைக்கலாம்... பிரச்னையை?
எந்த விஷயத்தையும் இந்த அரசாங்கம் விவசாயிகள் நலக் கண்ணோட்டத்தோடு பார்க்காது என்பதற்கு பனையேறிகள் பிரச்னையே உதாரணம். கோடிக்கணக்கான தென்னை, பனை மரங்கள் இருக்கின்றன தமிழகத்தில். தென்னம்பால், பனம்பால் (கள்) எடுக்க அனுமதித்தால், லட்சக்கணக்கான விவசாயிகள், பனையேறிகள் பயனடைவார்கள். ஆனால், விவசாயிகளின் நலனைவிட, சாராய அதிபர்களின் நலன்தான் முக்கியமாகப் படுகிறது ஆட்சியாளர்களுக்கு!
இயற்கைச் சீற்றங்களில் பறிகொடுத்து, உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்கும் பறிகொடுத் தது போக, இப்போது நிலத்தையும் பறி கொடுத்துக்கொண்டு இருக்கிறான் விவசாயி. போராடிப் போராடி அவன் ஓய்ந்துவிட்டான். இப்போது அவன் மௌனமாக இருக்கிறான். அது புரட்சியாக வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை!''


"இலவசங்கள் இழுக்கு!"
எம்.ஆர்.வெங்கடேஷ்,  தணிக்கையாளர் மற்றும்  பொருளாதாரக் கொள்கை ஆய்வாளர்.

''அத்தியாவசியப் பொருட்களை வாங்க வழியின்றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு அரசு அளிக்கும் ஒரு ரூபாய் அரிசியோ அல்லது கலர் டி.வி-யோ, பெரிய உதவியாகத் தான் இருக்கும். நல்லாட்சிக்கு இடையே இலவசங்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். 'இலவசம்’ என்ற போர்வை யில் ஜனநாயகத்தையே பாழாக்கிவிட்டது அரசு. 4,000 கோடிகளை கலர் டி.வி-க்கென ஒதுக்கி இருக்கிறார்கள். அந்தப் பணத்தை நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி இருந்தால், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வேனும் எட்டப்பட்டு இருக்கும்.
ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குகிறது அரசு. சுதந்திரத்துக்குப் பிறகு, 65 ஆண்டுகளாக இன்னும் தங்களை ஏழைகளாகவே வைத்திருப்பதால் மக்களின் கோபம் அரசின் மேல் திரும்பி விடாமல் இருக்க, வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த இப்படியான திட்டங்களைச் செயல்படுத்துகிறது அரசு. இதனால் நிகழ்ந்த தீமையின் விளைவு... வாக்களிப்பதற் குக்கூடப் பொதுமக்கள் அன்பளிப்பை எதிர்பார்க்கிறார்கள். தேசத்தை சுபிட்சம் ஆக்குவதில் இவர்களுக்கு அக்கறை இல்லை. சட்டம் - ஒழுங்கு, விவசாயம், தொழில், உற்பத்தி, சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கு இடம் இல்லாத தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் மட்டுமே பிரதான இடம் பிடித்து இருப்பதைச் சாபக்கேடு என்று சொல்லாமல், வேறு என்ன சொல்வது?
2007 தேர்தலின்போது குஜராத்தில் காங்கிரஸ் கட்சி இலவசத் திட்டங்களை வைத்தே தனது தேர்தல் அறிக்கை யைத் தயாரித்து இருந்தது. ஆனால், அங்கே மக்கள் தெளிவாக காங்கிரஸுக்கு வாக்களிக்காமல் மண்ணைக் கவ்வவைத்தார்கள். அந்தத் தெளிவு இங்கே தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறதா? தொலை நோக்குடன் மக்களின் துயர் துடைப்பதற்கென அறிவிக் கப்படும் திட்டமாக இருந்தால், பொருளாதாரச் சுமையையும் கருதாமல், அதை வரவேற்கலாம். ஆனால், வாக்குகளை மட்டுமே குறி வைத்து அளிக்கப்படும் இலவசங் களால் ஜனநாயகத்தின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுவதோடு, அந்தப் பொருளாதாரச் சுமை பிற்காலத்தில் பொதுமக்களின் மீதேதான் சுமத்தப் படுகிறது.
ஆட்சியாளர்கள் ஊழல் செய்கிறார்கள். அதிகாரிகள் ஊழல் செய்கிறார்கள். அரசிடம் இலவசம் பெற்ற 'நன்றி உணர்ச்சி’யினால், மக்களும் ஊழல்வாதிகள் ஆவது, தேசத்துக்கே பெரும் அவமானம்!''