சமம் இல்லாத கல்வி சமச்சீர்க் கல்வி ஆகுமா?

சமச்சீர் கல்வி பற்றிய சர்ச்சைகள் தமிழகத்தில் தூள் பறக்கிறது! 'அது தேவையா, இல்லையா... நடைமுறைப்படுத்தப்படுமா, படாதா... புத்தகங்கள் அச்ச​டிக்கச் செலவான 200 கோடிக்கு யார் பொறுப்பு...அந்தப் பாடத் திட்டம் உண்மை​யாகவே சமச்சீர் கல்விக்கு உத்தரவாதமானதா... சென்ற அரசின் திட்டங்களில் ஒன்றான இதை, இந்த அரசைத் தொடரச் சொல்லி வற்புறுத்துவது நியாயமா?'' - இப்படி ஏகப்பட்ட கேள்விகள்!


ஆனால், இந்த மேலோட்டமான விவாதங்களில் எல்லாம் உண்மையான சமச்சீர் கல்வி அமிழ்ந்து, ஆழப் போய்விட்டதே நிஜம்! எது சமச்சீர் கல்வி? அது எந்த வகையில் தேவை?


முதலில், பள்ளிகள். அடிப்படை வசதிகள் இல்லாத, எட்டாம் வகுப்பிலும் எழுத்துக் கூட்டிப் படிக்கிற நிலையில் மாணவர்களை வைத்திருக்கிற, சரியான கழிப்பறைகளோ, விளையாட்டு மைதானங்களோ இல்லாத, அதன் அவசியத்தைக்கூட உணராத, 'வேறு கதியற்ற கடைக்கோடி மக்களின் கனவுகளுக்கு ஒரே புகலிடம்’ என்ற அளவில் மட்டுமே உயிர்த்திருக்கும் அரசுப் பள்ளிகள் ஒரு புறம்...
எவ்வித விதிகளுக்கும் உட்படாமல் அலட்சியப்​படுத்தி, முறையான கட்டடங்களோ, தகுதியான ஆசிரியர்களோ இல்லாத, அப்படி இருந்தாலும் அவர்களை ஈவிரக்கம் இல்லாமல் சுரண்டுகிற, புற்றீசல்போல் பெருகும் ஆங்கிலப் பள்ளிகள் மறு புறம்!
பள்ளி வளாகத்தில் தாய்மொழியில் பேசினாலே அபராதம் விதிக்கிற, 10, 12-ம் வகுப்புப் பாடங்களை 8-ம் வகுப்பில் இருந்தே சொல்லித்தருகிற அதீதப் பொறுப்பு உணர்வு மிகுந்த, அதற்கு விலையாகப் பெற்றோர்களின் ரத்தத்தையே உறிஞ்சுகிற ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்னொரு புறம்!


இதுதான் இன்றைய தமிழகம்!
கல்வி பற்றிய ஏராளமான கனவுகளோடு நம்​முடைய குழந்தைகள் வளர்கிறார்கள். அந்தக் கனவுகள்தான் நாளை நம் தேசத்தை வழிநடத்தப்​போகிறது. அவர்களுக்குப் பள்ளிகளின் இன்றைய நிலை பெரும் ஏமாற்றமே. உண்மை இப்படி இருக்க, 'பாடத் திட்டத்தை மாற்றுவதால் மட்டுமே சமச்சீரான கல்வியைக் கொண்டுவந்துவிட முடியுமா?’ என்பதுதான் இன்று தலைதூக்கும் அடிப்​படையான கேள்வி.
தரமான, தொலைநோக்குப் பார்வைகொண்ட, வேகமாக மாறி வரும் காலத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய, அறிவியல்பூர்வமான, நமது தாய்மொழி - பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்ட, அனை​வருக்கும் சம வாய்ப்பு வழங்குகிற ஒரு கல்விக் கொள்கைதான் இன்றைய முதல் தேவை. அதுதான் முழுமையான சமச்சீர்க் கல்வியாக இருக்க முடியும். அப்படிப்பட்ட கல்வியைக் கொண்டுவந்தார்களா என்றால் இல்லை!
கல்வி, சமூக முன்னேற்றத்தின் முக்கியஅங்கம். தலித்துகள், பெண்கள், மலை சாதியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினரின் முன்னேற்​றமும், தரமான கல்வியின் மூலம்தான் சாத்தியம். அதை இலவசமாகப் பெறுவது, அனைவரது உரிமை. அதைத் தருவதுதான் அரசின் கடமை!
பெருந்தலைவர் காமராஜர் இதை நன்கு உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையோடு இலவசக் கல்விக்கு அடிப்படையான ஆரம்பப் பள்ளிகளைத் திறந்தார். கல்விக்கு வறுமையும் பசியும்கூட தடைஎன்பதை உணர்ந்து, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு​வந்தார்.
அன்றும் தனியார் பள்ளிகள் இருந்தன. ஆனால், கல்வியை வியாபாரமாக மாற அனுமதிக்கவில்லை. பணப் புழக்கம் அதிகம் இல்லாத அன்றைய சூழலில், தரமான கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. அன்றைய தனியார் பள்ளிகளும் சமூகத்துக்கான அறப் பணியாகவே திகழ்ந்தன.
துரதிர்ஷ்டவசமாக, அடுத்தடுத்து வந்த அரசுகள் கல்வி வியாபாரமாக மாறியதைத் தடுக்கத் தவறி​விட்டன, நியாயமான கட்டுப்பாடுகளையும் விதிக்க​வில்லை. மேலும், அரசுப் பள்ளிகளில் கவனம் செலுத்தாமல், அதன் தரம் நாளுக்கு நாள் குறைந்து வந்ததையும் தடுக்கவில்லை. அதனால்தான் இன்று, எப்பாடு பட்டாவது தன் குழந்தைகளை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற பெற்றோர், இரக்கமற்ற தனியார் பள்ளிகளிடம் சிக்கிக் கண்ணீர் சிந்துகின்றனர்!
அதற்கும் வழி இல்லாத பெற்றோர்கள்தான் அரசுப் பள்ளியை அண்டுகிறார்கள். இப்படி, வசதியானவர்கள் மட்டுமே தரமான கல்வியையும், நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும் என்பது அநீதியானது, ஆபத்தானது!
இந்த நிலையை மாற்ற, உடனடி முயற்சி எடுத்தே ஆக வேண்டும். இப்போதைக்கு பாடத் திட்டத்தையாவது மாற்றுவோம் என்கிற சமாதானம், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது ஆகும். மற்ற சீரழிவுகளை எப்போது மாற்றுவது? முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்​டுள்ள மற்ற சீர்திருத்தங்களையும் உடனடியாகப் பரிசீலித்து அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு எதிராகச் சொல்லப்படுகிற எந்த சமாதானமும் ஏற்கக்கூடியது அல்ல.
கல்வி, தனி மனித வாழ்விலும் சமூகத்தின் முன்னேற்றத்திலும் மிக முக்கியமான ஒரு காரணி. அதில் அரசியல் மாச்சரியங்களுக்கு எந்த இடமும் இருக்கக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசும் அனைத்துக் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து, ஒரு புதிய கல்விக் கொள்கையை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உருவாக்குவதும், செயல்​படுத்துவதும் இந்தத் தருணத்தில் மிகவும் முக்கியம். இதில் மேலும் ஏற்படுகிற தாமதம், மக்களுக்குக் கஷ்டத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் மோசமான பின்விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.
நல்லோர் எல்லோர் கவனத்துக்கும்!


Source : Vikatan.com

யாருடைய எலிகள் நாம்?

கடந்த வாரம் பலராலும் கண்டுகொள்ளப்படாத செய்திகளில் ஒன்று... நாட்டின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் சுரேந்தர் சிங் மருந்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள 9 மருந்து நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பி உள்ள கடிதம்!
ஜனநாதன் இயக்கத்தில், மனிதர்களை எலி களைப்போல மருத்துவப் பரிசோதனையில்பயன் படுத்தும் 'ஈ’ படம் பார்த்திருப்பீர்களே? அதே மாதிரி கடந்த ஆண்டு இந்தியாவில் மனிதர்களைப் பயன்படுத்தி நடந்த மருத்துவப் பரிசோதனைகளில் (உடல்கூறு) ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளில், 670 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்களில், இழப்பீட்டுத் தொகை வெறும் 8 பேருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதேபோல், மருந்துகளுக்காக நடந்த பரிசோதனையில் இறந்த 25 பேரில் 5 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. 'எப்போது மற்றவர்களுக்கான இழப் பீட்டுத் தொகையை வழங்குவீர்கள்?’ என்பதுதான் சுரேந்தர் சிங்கின் கடிதம். இந்தக் கடித விவரம் பத்திரிகைகளில் வெளியாகிவிட்டதால், பாதிக்கப்பட்டோருக்கான தொகையை விரைவில் அளித்துவிடுவதாக அறிவித்து இருக்கின்றன மருந்து நிறுவனங்கள்!


கோடிகள் புரளும் துறை!
 ஒரு புதிய மருந்து, சந்தையை வந்தடைய சராசரியாக .3,600 கோடி வரை செலவா கிறது. இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம், மனிதர்கள் மீதான பரிசோதனை. புதிதாக உருவாக்கப்படும் மருந்து, மனிதர்கள் மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று சோதிக்க வேண்டும்.


வளர்ந்த நாடுகளில், இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குக் கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு. தவிர, நோயாளிகளின் பாதுகாப்புக்கான செலவும் அதிகம். மூன்றாம் உலக நாடுகளில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது, செலவில் 60 சத விகிதம் வரை குறையும். மேலும், ஏழை மக்களின் அறியாமை, எளிதில் வளையக் கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பு இன்மை ஆகியவற்றின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பரிசோதனையை நடத்த ஆரம்பித்தன மருந்து கம்பெனிகள்.


அபாயத்தின் வளர்ச்சி!
இந்தியாவில் மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு தொடங்கும் உயிர்த் தொழில்நுட்பவியல் பூங்காக்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சாவி. 2005-ல் 100 பரிசோதனைகள் நடந்த நிலை மாறி, இப்போது குறைந்தபட்சம் இந்தியா வில் 1,000 பரிசோதனைகள் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தப் பரிசோதனைகளில் இறந்தவர்கள் 132 பேர். இப்போது 670 பேர்.


அறியாமையும் சுய லாபமும்!
இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமை யையும் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகள் தொடர்பான விதிகள் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம், நோயாளிகளுக்கு நோயாளி மாறுபடுகின்றன. இதனால் மருந்து நிறுவனங்களால் சட்டத் தில் இருந்து எளிதாகத் தப்ப முடிகிறது. ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப் பரிசோதனையின் ஒரு கட்டமாக மேற்கொள்ளப் பட்ட மருந்து ஆராய்ச்சியில், 14 ஆயிரம் சிறுமி கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தச் சிறுமிகளில் பெரும்பான்மையினர் பழங்குடியினர். அவர் களுக்கோ, அவர்களுடைய பெற்றோருக்கோ இப்படி ஒரு பரிசோதனை மேற்கொள்ளப் படுவதே தெரியாது. இந்தக் குழந்தைகளில் 6 குழந்தைகள் உயிர் இழந்ததைத் தொடர்ந்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.


நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இப்படி நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் 49 குழந்தைகள் உயிர் இழந்தது கடந்த ஆண்டு தெரியவந்தது. சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 4,142 குழந்தைகளில் 2,728 குழந்தைகள் ஒரு வயதுக்கும் உட்பட்டவர்கள்!
புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனை கள் நடத்த அனுமதி அளித்துள்ளது அமெரிக்க அரசு. இனி, இந்தியாவில் உள்ள குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் களம் இறங்கப்போகின்றன என்பதே இதன் நேரடியான பொருள்!


எத்தகைய அற உணர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சியாளர்களையும் வழிநடத்துகிறது! யாருடைய எலிகள் நாம்?


Source : Vikatan.com
 
More details :http://www.cchr.org/videos/marketing-of-madness.html
 

கங்கையை காக்க காலவரையற்ற உண்ணாவிரதம்: 115-வது நாளில் சுவாமி நிகாமானந்த் மரணம்!

கங்கை நதியைக் காப்பதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி, ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் போராட்டம் மேற்கொண்டிருந்த சுவாமி நிகாமானந்த் மரணம் அடைந்தார்.

சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்து கங்கை நதியை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியான ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சுவாமி நிகாமானந்தின் உயிர், டெரேடூனில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை பிரிந்தது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி, பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 9-வது நாளில் போராட்டத்தை கைவிட்ட பாபா ராம்தேவ் ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய அதே மருத்துவமனையில் தான் சுவாமி நிகாமானந்தின் உயிரும் பிரிந்தது.
புனிதமான கங்கை நதி மாசுபடுத்தப்படுவதற்கு எதிராக பிப்ரவரி 19-ல் ஹரித்வாரில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய சுவாமி நிகாமானந்த் மொத்தம் 73 நாட்கள் தனது போராட்டத்தை கைவிடாமல் நடந்தி வந்துள்ளார்.
இதுகுறித்து அவரது ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "சுவாமி நிகாமானந்த் தனது ஆசிரமத்தில் 68 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆலைக் கழிவுகள் கலப்பதில் இருந்தும், ஆற்றுப் படுகையில் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்தும் கங்கையை மீட்க வேண்டும் என்பதாக அவர் போராடினார்," என்றார்.

காலவரையற்ற உண்ணாவிரத்தால் உடல் நிலை மோசமடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 27-ல் வலுக்கட்டாயமாக ஹிமாலயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், நிகாமானந்த். கோமா நிலைக்குச் சென்ற அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், எவ்விதப் பலனும் இன்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.
"மாஃபியா கும்பலை காப்பதில் அரசுக்கும் பங்குண்டு. நிகாமானந்த் உண்மையிலேயே தனது நோக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்துள்ளார். இதுவரை எந்த மீடியாவும் அவர் விரிவான செய்தியினை வெளியிடவில்லை," என்று வருத்தம் தொய்ந்த குரலுடன் பேட்டியளித்திருக்கிறார், சக சாதுவான சுவாமி கைலாஷ்நாத்