ஒரு நேர்மையான் நீதிபதியின் கதை!

''லட்சுமண ரேகை என்பது அப்படி ஒன்றும் புனிதமானது அல்ல. லட்சுமண ரேகையை சீதை கடந்திருக்கா விட்டால், ராவண வதம் நடந்து இருக்காது!''

- கடந்த ஆண்டு அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் விமர்சனங்களைச் சந்தித்த மன்மோகன் சிங் அரசு, ''உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையைத் தாண்டக் கூடாது!'' என்று சொன்னபோது, அதற்கு அசோக் குமார் கங்குலி கொடுத்த பதிலடி இது!
உச்ச நீதிமன்ற நீதிபதி பணியில் இருந்து ஓய்வுபெற்ற அன்று கிட்டத்தட்ட 'அலைக்கற்றை ராவண வத’த்தை முடித்துவிட்டுதான் சென்று இருக்கிறார் கங்குலி. ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 122 அலைக்கற்றை உரிமங்களையும் ரத்துசெய்து உத்தரவிட்டதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய ஊழலைத் துவம்சமாக்கியிருக்கிறார் கங்குலி.


''இந்த ஒதுக்கீடு, முழுக்க முழுக்க அரசியல் சட்டத்துக்கும் பொது நலனுக்கும் விரோதமானது. தேசத்தின் அரிய வளங்கள் பொதுமக்கள் நலனுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, சில பெருநிறுவனங்களுக்கு அல்ல'' என்று நீதிபதி ஜி.எஸ்.சிங்வியுடன் இணைந்து கங்குலி அளித்து உள்ள தீர்ப்பு, ''அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழலே நடக்கவில்லை. இந்த ஒதுக்கீட்டில் அரசுக்கு ஒரு பைசா இழப்பு இல்லை!'' என்று கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் பேசிவந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் ஆட்சியாளர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்டம்போடும் பெருநிறுவனங்களுக்கும் முகத்தில் விழுந்து இருக்கும் அறை
உச்ச நீதிமன்றத்துக்கு 2010, அக்டோபரில் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான முதல் வழக்கு வந்தபோது, அது நாட்டின் மிகப் பெரிய ஊழல் என்பதோ, ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தும் என்பதோ பலருக்கும் தெரியாதது. ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து இருந்த நிலையில், இந்த வழக்கு எவராலுமே பொருட்படுத்தப்படவில்லை. கங்குலியும் சிங்வியும் இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு, மத்திய அரசுக்கும் ராசாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட பின்தான் இந்த ஊழலின் வீரியம் உறைத்தது. ஒருகட்டத்தில், எதற்குமே அசைந்து கொடுக்கா மல் விசாரணை அமைப்புகளை முடக்கிப் போட்டு இருந்த மன்மோகன் அரசைப் பார்த்து, ''அரசு இயங்குகிறதா, அந்த அமைச்சர் இன்னும் பதவியில் நீடிக்கிறாரே... அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று விளாசித் தள்ளினார் கங்குலி. ராசா பதவி விலக நேர்ந்ததும் சிறைக்குச் செல்ல நேர்ந்ததும் அதற்குப் பின்தான்!

இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் சிங்வியுடன் சேர்ந்து கங்குலி அளித்த ஒவ்வோர் உத்தரவும் முக்கியமானது. குறிப்பாக, ஆ.ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கேட்ட சுப்பிரமணியன் சுவாமியை இழுத்தடித்த பிரதமர் அலுவலகத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ஜனவரி 31-ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் - ஊழலுக்கு எதிரான - முக்கியமானத் தீர்ப்புகளில் ஒன்று. ''பொதுப் பணியில் உள்ளவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் விஷயத்தில் ஒரு காலவரையறை வேண் டும். எந்தப் புகார்கள் தொடர்பாக அனுமதி கேட்டாலும், அதிகபட்சம் நான்கு மாதங்களுக்குள் அரசு அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அளிக்கப்படாவிட்டால், அரசு அனுமதி கொடுத்துவிட்டதாகவே கருதப்படும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வது என்பது மக்களின் அடிப்படை உரிமை. இதில் அரசு தாமதம் செய்வதை ஏற்கவே முடியாது'' என்றது அந்தத் தீர்ப்பு.
அலைக்கற்றை ஊழல் வழக்கு என்று இல்லை. பல தருணங்களில் அதிரடியான கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார் கங்குலி. ஒருமுறை தொலைபேசி ஒட்டுக்கேட்புத் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, அரசு வழக்கறிஞரைப் பார்த்துக் கேட்டார்: ''எந்த அரசுமே வலுவான நீதித் துறையை விரும்புவது இல்லை, அப்படித்தானே?''
சில மாதங்களுக்கு முன் மரண தண்டனை தொடர்பான ஒரு கருத்தரங்கில் கங்குலி தெரிவித்த கருத்துகள் பலரை ஆச்சர்யத்தில் உறையவைத்தவை. ''நம் நாட்டில் அரிதினும் அரிதான வழக்குகளிலேயே மரண தண்டனை வழங்கப்படுவதாகக் கூறிக்கொள்கிறோம். ஆனால், இந்த 'அரிதினும் அரிதான’ என்பதற்கு என்ன வரையறை? 'அரிதினும் அரிதான’ என்பது குற்றத்தைப் பொறுத்ததா? காலத்தைப் பொறுத்ததா? நீதிபதிகளைப் பொறுத்ததா? நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் வாழ்வதற்கான உரிமையை அளிக்கிறது. ஆனால், மரண தண்டனையோ அதைக் கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டத்தின்படிதான் வழங்கப்படுகிறது என்றாலும், மரண தண்டனைக் காட்டுமிராண்டித்தன மானது. ஜனநாயக விரோதமானது. பொறுப்பற்றது'' என்றார் கங்குலி.
அலைக்கற்றை வழக்கில் ''நாட்டின் அரிய வளங்களை தங்களுடைய சுயவிருப்பங்களின் அடிப்படையிலோ, சட்டத்துக்குப் புறம்பாகவோ ஒதுக்கீடு செய்ய எவருக்கும் உரிமை இல்லை. இத்தகைய ஒதுக்கீடுகள் அரசுக்கு நஷ்டம் விளைவிக் கும் வகையிலோ, தனிநபர்கள் ஆதாயம் அடையும் வகையிலோ, திருட்டுக்குத் துணைபோகும் வகையிலோ இருக்கக் கூடாது என்பதை நீதி வழங்குவதற்கு இணையானதாக அரசு கொள்ளவேண்டும்'' என்று அவர் பிறப்பித்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு அலைக்கற்றைக்கு மட்டுமல்ல... எரிவாயு, கனிமச் சுரங்கங்கள் என இனி எந்த ஓர் இயற்கை வளத்தை ஒதுக்கீடு செய்யும்போதும் அரசு எப்படிப்பட்ட கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு வெளிப்படையான வழி முறையைக் காட்டியிருக்கிறது.

பணி ஓய்வுபெறும் நாள் அன்று பிரிவு உபசார விழாவில், ''இந்திய நீதிமன்றங்களுக்கு ஒரு மனிதன் கருவாவதில் தொடங்கி அவன் இறுதிச் சடங்கு வரை எல்லாப் பிரச்னைகளும் வருகின்றன. நாங்கள் தீர்க்கும் பல பிரச்னைகள் இந்த அரசாங்கம் தீர்க்க வேண்டிய - ஆனால் - தீர்க்க விரும்பாத பிரச்னைகள்'' என்று பேசிய கங்குலிக்குத் தன்னுடைய பணிகள்குறித்து பெரிய பெருமிதங்கள் இல்லை. நல்ல கிரிக்கெட் ரசிகரான அவர், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் க்ராம்டன் எழுதிய 'எண்ட் ஆஃப் அன் இன்னிங்ஸ்’ நூலை மேற்கோள் காட்டிப் பேசினார்: ''ஒரு நீதிபதியாக என்னுடைய இன்னிங்ஸ் முடிந்துவிட்டது. நான் எப்படி ஆடியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எல்லாத் தருணங்களிலும் நேரான (நேர்மையான) பேட்டைக் கொண்டே ஆடினேன். நான் எப்படி ஆடினேன் என்பதைச் சொல்ல வேண்டிய நீதிபதிகள் இனி நீங்கள்தான்!''
நீங்கள் ஆடிய ஆட்டம் உங்கள் விளையாட்டையே கௌரவப்படுத்தி இருக்கிறது கங்குலி!


- ஆனந்த விகடன்

சாமி :நீதி நிமிர்ந்தது

இந்தியக் குடியரசு எதிர்கொள்ளும் மிகப் பெரிய பின்னடைவு, நமது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல் இருப்பதுதான். கண்கொத்திப் பாம்புகளாக இருந்து ஆட்சியில் இருக்கும் தவறுகளை அவர்கள் துணிவுடன் சுட்டிக் காட்டவும் தட்டிக் கேட்கவும் தலைப்பட்டாலே, இந்தியாவில் நல்லாட்சி நிலைபெற்றுவிடும். அவர்கள் தங்களது கடமையைச் சரிவர நிறைவேற்றாத நிலையில் நீதிமன்றங்களாவது தலையிட்டு நிலைமை வரம்பு மீறிவிடாமல் பாதுகாக்கின்றனவே என்பது சற்று ஆறுதல்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வியும், ஏ.கே. கங்குலியும் சுப்பிரமணியன் சுவாமியின் தனிநபர் வழக்கில் வழங்கி இருக்கும் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மிகப்பெரிய பலத்தை வழங்கி இருக்கிறது. இரண்டு நீதிபதிகளுமே ஒத்த கருத்தினராக வெளியிட்டிருக்கும் தீர்ப்பின்படி இனிமேல் தவறிழைக்கும் அரசுப் பணியாளர்கள் - அதிகாரிகளோ, அமைச்சர்களோ யார் எந்த அரசுப் பதவி வகித்தாலும் - மீதான வழக்குகளில் அனுமதி வழங்குவதற்குக் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 19வது பிரிவின்படி அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் - அமைச்சரோ, அதிகாரியோ, வாரியத் தலைவர்களோ யாராக இருந்தாலும் - மீதான குற்றச்சாட்டை அரசின் அனுமதி பெறாமல் விசாரிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை இல்லை. அதேபோல, குற்றவியல் நடைமுறை விதிகளின் 197வது பிரிவின்படி முன்அனுமதி பெறாமல் ஒரு அரசுப் பணியாளரைத் தண்டிக்கவும் முடியாது.
அரசுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர் நேர்மையாகப் பணியாற்றுவது தடுக்கப்படக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்டவைதான் இந்த இரண்டு சட்டப் பிரிவுகளும். ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறைகளைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சட்டத்தின் கரங்கள் தங்களைத் தீண்டிவிடாமல் அரசுப் பணியாளர்கள், குறிப்பாக உயர் அதிகாரிகளும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களும் குற்றங்களை இழைத்துவிட்டுத் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
தனிநபரான சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையான அன்றைய மத்தியத் தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்
ஆ. ராசாவின் மீது வழக்குத் தொடர்வதற்கான அனுமதியை அங்கீகரித்திருப்பதன் மூலம், இந்தியக் குடியரசின் எந்தவொரு குடிமகனும் ஊழலிலும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடும் அரசுப் பணியாளர் மீது வழக்குத் தொடுப்பதில் இருக்கும் மிகப்பெரிய தடையை உச்ச நீதிமன்றம் உடைத்தெறிந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, ஊழல்வாதியான அரசு ஊழியருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கேட்டு விண்ணப்பித்த நான்கு மாதங்களுக்குள், பதிலளிக்கப்படாவிட்டால், அனுமதி வழங்கப்பட்டதாகப் பொருள் கொள்ள வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்திவிட்டது.
மூன்று மாதத்திற்குள் வழக்குத் தொடர்வதற்கான அனுமதிக் கோரிக்கைக்கு பதிலளித்தாக வேண்டும். தேவைப்பட்டால், தலைமை அரசு வழக்குரைஞரின் பரிந்துரைக்காகக் கூடுதலாக ஒரு மாத அவகாசம் கோரலாம். அதற்கு மேல் பதிலளிப்பதில் தாமதம் இருக்கக் கூடாது என்பது இந்தியக் குடிமகனுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டுப் பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி நவம்பர் 2008ல் கடிதம் எழுதினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்தப் பிரச்னையை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்து வருவதால் இப்போது அனுமதி வழங்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் பதிலளித்து விட்டது. தொடர்ந்து நீதிமன்றப் படியேறி இப்போது ஒரு மிகப்பெரிய வெற்றியை இந்தியக் குடிமகனுக்குப் பெற்றுத் தந்திருக்கும் சுப்பிரமணியன் சுவாமியைப் பாராட்ட வேண்டும்.
""சுவாமியின் கோரிக்கைக்கு உடனடியாக அனுமதி அளித்திருந்தால் வழக்குத் தொடர்வதில் காலவிரயம் தடுக்கப்பட்டிருக்கும்'' என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தெரிவித்திருக்கிறார். ""இதுபோன்ற காலதாமதங்கள் வழக்கின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கின்றன என்பது ஒருபுறம். இன்னொரு புறம், தங்களுக்குச் செய்திருக்கின்ற அல்லது செய்யப் போகின்ற உதவிகளுக்காகத்தான் அனுமதி வழங்கத் தேவையில்லாத காலதாமதத்தை ஏற்படுத்துகிறார்களோ என்கிற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரும் உயர் பதவி வகிப்பவர்களும் (ஆட்சியாளர்களும்) குற்றத்தில் கூட்டாளிகளோ என்கிற சந்தேகத்துக்குக் காலதாமதம் இடமளிக்கிறது'' என்று தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார் ஏ.கே. கங்குலி.
ஒரு அரசுப் பணியாளர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்குத் தொடுப்பதற்கு அனுமதி கோரப்பட்டால், அந்தக் குற்றச்சாட்டில் வலு இருக்கிறதா என்பதைப் பார்ப்பது மட்டுமே அனுமதி அளிப்பதற்குத் தேவையான காரணமாக இருக்க முடியுமே தவிர, குற்றச்சாட்டின் மீது தீவிரப் புலன்விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்குவது அரசின் வேலை அல்ல. அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.
இந்தியாவில் நடக்கும் பல ஊழல்கள் மேலதிகாரிகள், அமைச்சர்கள், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் போன்றவர்களின் ஆசியுடனும், ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. எந்தவொரு குற்றச்சாட்டு எழுந்தாலும் அனுமதி அளிக்காமல் காலதாமதம் செய்யப்பட்டு குற்றச்சாட்டின் தீவிரம் குறைக்கப்படுகிறது அல்லது குற்றச்சாட்டே மறக்கப்பட்டு விடுகிறது. இனிமேல் அதற்கான வாய்ப்பை இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அடைத்துவிட்டது.
சுப்பிரமணியன் சுவாமி மீது பல விமர்சனங்கள் எழுப்பப்படலாம். ஆனால், ஒரு தனி மனிதரின் முயற்சியால்தான் பல ஊழல்வாதிகள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அதேபோல, பதவி ஓய்வுபெறும் நாளில் இந்தியக் குடியரசுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி இருக்கும் நீதிபதி அசோக்குமார் கங்குலியையும் நாம் நன்றி கூறிப் பாராட்ட வேண்டும்.

Thanks :