சச்சின் 100 சல்யூட் 100

1.சச்சினுடைய அப்பாவுக்கு எழுபதுகளில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் (எஸ்.டி.பர்மன்!) என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தன் பிள்ளைக்கு சச்சின் என பெயரிட்டார்.

2.அதிவேக கார்கள் மீது அளவிளாத ஆர்வம் கொண்டவர். அதிகாலை நான்கு மணிக்கு மும்பையின் சாலைகளில் தன்னதனியாக கார் ஓட்டிக்கொண்டிருப்பாராம்.
3.சச்சின் பள்ளியில் படிக்கும்போது சுனில் கவாஸ்கர் கால்களுக்கான பேட்கள் ஒன்றை பரிசாக கொடுத்தார். சச்சின் 1989ல் தன் முதல் டெஸ்ட் போட்டியில் அந்த பேட்களை அணிந்துகொண்டுதான் களம் இறங்கினார்.
4.சிறுவயதில் டென்னிஸ் வீரர் ஜான் மெக்கென்ரோவின் தீவிர விசிறியாக இருந்தார் சச்சின். மெக்கென்ரோவைப்போலவே தானும் குடுமி வைத்துக்கொண்டு சுற்றுவாராம். அதனாலேயே அவருடைய நண்பர்கள் அவரை மேக் என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.
5.டெஸ்ட் போட்டிகளில் தன்னை அவுட் செய்கிற ஒவ்வொரு பந்துவீச்சாளரின் பெயரையும் அவர் எப்படி தன்னை அவுட் செய்தார் என்பதையும் மறக்கவே மாட்டார். தூங்கும்போது எழுப்பிக்கேட்டாலும் டான் என்று சொல்லிவிடுவாராம்.
6.பள்ளி அணிக்காக ஆடும்போது ஒரு ரப்பர் பந்தை தண்ணீரில் நனைத்து அதை பந்துவீச்சாளரிடம் கொடுத்து பந்துவீச சொல்லி பயிற்சி எடுப்பாராம். பந்து பேட்டின் எந்த இடத்தில் படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை சரிசெய்து கொள்ள இந்த உத்தியாம்.
7.1987ஆம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளிடையேயான அரையிறுதிப்போட்டியில் பவுண்டரியில் நின்று பந்து பொறுக்கிப்போடும் பால் பாயாக பணியாற்றினார் சச்சின்..
8.ரன்அவுட் ஆகும் போது தேர்ட் அம்பயர் (டிவிஅம்பயர்) மூலமாக முதன் முதலாக அவுட் ஆனவர் நம்ம சச்சின்தான்!
9.1998ல் ஆஸ்திரேலியாவோடு இந்தியா விளையாடியது. அப்போது வார்னே ஒருபேட்டியில் ‘’அந்தாளு கனவுல கூட டார்ச்சர் குடுக்கறார்ப்பா.. நான்போடற எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்கறமாதிரி கனவு வந்து தூக்கத்தை கெடுக்குது’’ என கூறியிருந்தார்.
10.நிறைய உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுள்ளவர் சச்சின்!
11.சச்சினுடைய முதல் பேட்டினை பரிசளித்தவர் அவருடைய அக்கா! காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர் அங்கிருந்த வாங்கிவந்த பேட்டு உடையும் வரை உபயோகித்தாராம் சச்சின்.
12.1983 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி. அதன் நான்காவது டெஸ்ட்போட்டிதான் முதன்முதலாக சிறுவன் சச்சின் மைதானத்தில் பார்த்த நிஜ கிரிக்கெட்! அவர் மைதானத்திற்கு சென்ற நாளில் விவியன் ரிசர்ட்ஸ் செஞ்சுரி அடித்தார்.
13.சச்சின் குட்டிப்பையனாக இருந்தபோது குறும்புத்தனம் தாங்கமுடியாதாம். மாங்காய் பறிக்கப்போய் தவறிவிழுந்தவருக்கு தண்டனையாக கிரிக்கெட் கோச்சிங் பயிற்சியில் சேர்த்துவிட்டார் அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர். அதுதான் சச்சினின் வாழ்க்கையையே மாற்றியது.
14.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் சர்.டான் பிராட்மேனுக்கு, அடுத்த இடம் நம்ம சச்சினுக்குத்தான்!
15.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த ஒருநாள் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் விவியன் ரிசர்ட்ஸ், இரண்டாமிடம் நம்மாளு!
16.பள்ளிக்காலத்திலேயே சச்சின் மும்பையில் இருந்த பதிமூன்று அணிகளுக்காக விளையாடினார்..
17.17 வயதிற்குட்பட்டோருக்கான ஹாரிஷ் ஷீல்ட் என்னும் உள்ளூர் போட்டியில்தான் சச்சின் தன் முதல் கிரிக்கெட் சதத்தினை அடித்தார்!
18.மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழ் சச்சினின் முதல் பேட்டியை பிரசுரித்தது. அப்போது அவருக்கு வயது 12! பேட்டியின் பல கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவர் அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர்.
19.சச்சினும் காம்ப்ளியும் பள்ளி அணிக்காக ஆடி இருவருமாக சேர்ந்து எடுத்த 664 ரன்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
20.1988ல் குஜராத் அணிக்கு எதிராக தன் முதல் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார் சச்சின். தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்து இளம்வயதில் முதல் போட்டியில் சமடித்த வீரர் என்கிற சாதனையை செய்தார்.
21.சர்.டான் பிராட்மேன் தன்னுடைய ‘’உலக டெஸ்ட் அணிக்கான பட்டியலில் சேர்த்துக்கொண்ட ஒரே இந்தியர் சச்சின் மட்டும்தான்.
22.தனது பத்தொன்பதாவது வயதில் 1992ஆம் ஆண்டு தன் முதல் உலக கோப்பை போட்டிகளில் விளையாடினார் சச்சின்.
23.சச்சினுடைய மனைவி பெயர் அஞ்சலி, சச்சின் தம்பதிகளுக்கு ஒரு மகள் ‘’சாரா’’,ஒருமகன் ‘அர்ஜூன்’. அப்பாவோடு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகிறார் ஜூனியர் சச்சின்.
24.சச்சின் தனது முதல் எழுபது ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்ஸ்மேனாகவே விளையாடினார்!
25.130ஆண்டுகால பாரம்பரியமிக்க இங்கிலாந்தின் கவுண்டி அணியான யார்க்சயர் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் சச்சின்தான். வெளிநாட்டு அணிக்காக ஆடுவதா வேண்டாமா என கவாஸ்கரிடம் சென்று அனுமதிவாங்கிவிட்டுத்தான் விளையாடினார் சச்சின்.
26.1995ல் மும்பையில் நடந்ததது சச்சினின் திருமணம். அவருடைய மனைவி அஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அஞ்சலி ஆங்கிலோ இந்தியப்பெண். அவருக்கு சச்சினை விட ஐந்து வயது அதிகம்.
27.தன் மனைவி அஞ்சலியை திருமணத்திற்கு முன் தீவிரமாக காதலித்தார் சச்சின். அப்போது ஓரளவு பிரபலமாகிவிட்டதால் ஒட்டுதாடி தொப்பி கண்ணாடி சகிதம் காதலியோடு பார்க்,பீச்,தியேட்டர்களில் சுற்றுவாராம்!
28.சச்சினின் குழந்தை முகம்தான் குழந்தைகள் டாக்டரான அஞ்சலியை கவர்ந்திருக்க வேண்டும் என கவாஸ்கர் ஒருபேட்டியில் கிண்டலாக கூறியுள்ளார்.
29.இந்தியாவின் முக்கிய உள்ளூர் போட்டிகளான ரஞ்சிக்கோப்பை, துலீப் டிராபி, இரானி டிராபி என மூன்று போட்டிகளிலும் தன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் மட்டும்தான்.
30.சச்சின் உலக கிரிக்கெட்டின் வரலாற்றில் தன் முதல் சதத்தினை பதிவு செய்த போது அவருக்கு வயது பதினேழுதான்! இங்கிலாந்து மான்செஸ்டர் ஓல்ட் டிரப்ஃபோர்ட் மைதானத்தில் 1990ல் தொடங்கியது செஞ்சுரிவேட்டை.
31.சுதீர் குமார் கௌதம் சச்சின் தெண்டுல்கரின் நம்பர் ஒன் ரசிகர் என அழைக்கப்படுபவர். சச்சின் விளையாடுகிற எல்லா ஆட்டங்களில் கலந்துகொள்ளும் இவருக்கு சச்சினே தன் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் கொடுத்துவிடுகிறார்.
32.சென்னையை சேர்ந்த 87வயது சரஸ்வதி என்கிற பாட்டிதான் சச்சினுடைய வயதில் மூத்த ரசிகர் என சொல்லப்படுகிறது. சச்சினை பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறார் இந்த சச்சின் பாட்டி!
33.டுவிட்டர் இணையதளத்திலும் சச்சின் அவ்வப்போது ரசிகர்களோடு உரையாடுகிறார். அவருக்கு டுவிட்டரில் 23 லட்சம் ரசிகர்கள்! https://twitter.com/sachin_rt
34.விளம்பரங்களில் நடிப்பதிலும் செஞ்சுரி அடித்து சாதனை படைத்தவர் சச்சின். நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருட்களுக்கான விளம்பரங்களில் நடித்திருக்கிறார் ச்ச்சின்.
35.சச்சினின் செல்லப்பெயர் டென்ட்லியா! அதுபோக லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் சாம்பியன், கிரிக்கெட்டின் கடவுள் என்றெல்லாம் கூட அவருடைய ரசிகர்கள் அழைக்கின்றனர்.
36.சச்சின் ஒரே ஒரு பாலிவுட் படத்தின் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் பெயர் ஸ்டம்ப்ட்!
37.திகார் ஜெயிலில் இருக்கிற இரண்டு வார்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. ஒன்று வினோத் காம்ப்ளியின் பெயரில் இன்னொன்று சச்சினின் பெயரில்!
38.இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பதவி வழங்கிய ஒரே விமான பயிற்சி பெறாத ஆள் சச்சின் மட்டும்தான்.
39.ஹாக்கி வீரர் தியான் சந்துக்கு பிறகு இந்தியாவில் விளையாட்டுக்காக தரப்படுகிற எல்லா விருதுகளையும் வென்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான்.
40.சச்சின்தான் உலகிலேயே அதிக எடைகொண்ட கிரிக்கெட் பேட்டினை பயன்படுத்துகிறார். அவருடைய பேட்டின் எடை 1.42 கிலோ! சாதாரண பேட்டின் எடை ஒருகிலோதான்!
41.சச்சின் பந்துவீசுவதற்கும் பேட்டிங் செய்வதற்கும் வலது கையையே பயன்படுத்தினாலும் அவர் எழுதுவதும்,சாப்பிடுவதும் இடதுகையில்தான்!
42.பத்துவயதில் வேகப்பந்துவீச்சாளர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் சென்னை எம்ஆர்எஃப் பேஸ் பவுண்டேஷனில் செலக்சனுக்காக வந்து டென்னிஸ் லிலியின் அறிவுரையால் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
43.சச்சினுக்கு காயமெல்லாம் கமர்கட் மாதிரி! சின்ன வயதில் அவருடைய உடம்பில் பேன்ட் எய்ட் எப்போதுமே இடம்பிடித்திருக்குமாம். அவர் முதன்முதலாக நடித்த விளம்பரமும் பேன்ட் எய்ட்தான்!
44.ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுபெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின்தான்.
45.டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் முத்தையா முரளீதரன்தான் சச்சினை அதிக முறை அவுட்டாக்கிய பெருமையை பெற்றவர். (எட்டு முறை)
46.ஒருநாள் போட்டிகளில் சச்சினை அதிகமுறை அவுட்டாக்கியவர் ஆஸ்திரேலியாவின் அதிவேக பந்துவீச்சாளர் பிரட்லீ (9முறை)
47.ஏகப்பட்ட மேட்ச்கள் ஆடியிருந்தாலும் சச்சின் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2006ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக!
48.டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே இரட்டைசதமடித்தவர் சச்சின்! ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் ஆளும் அவர்தான்.
49.ஒருநாள் போட்டிகளில் ஆறு முறை 200க்கு அதிகமான பார்ட்னர்ஷிப்களில் பங்குபெற்றுள்ளார். அவரோடு ஆடியவர்கள் இரண்டே பேர் ஒருவர் கங்கூலி இன்னொருவர் டிராவிட்.
50.மற்ற எந்த அணிகளையும் விட ஆஸ்திரேலியாவோடு விளையாடும்போது சச்சினுக்கு ஆக்ரோஷாம் அதிகமாகிவிடுகிறது. அவர் அடித்த நூறு நூறுகளில் இருபது ஆஸியுடன்தான்.
51.கிரிக்கெட் புத்தகத்தின் எல்லாவகை ஷாட்டுகளும் விளையாடினாலும் சச்சினுக்கு பிடித்தது ஸ்ட்ரைட் டிரைவ்தானாம்! (எங்களுக்கும்தான்!)
52.சச்சினுக்கு பிடித்த கிரிக்கெட் மைதானம் மும்பை வான்கடேவும் ஆஸ்திரேலியாவின் சிட்னி எஸ்சிஜி யும்தான்.
53.கடல் உணவுகளை விரும்பி உண்பாராம் சச்சின்! அதிலும் நண்டு மற்றும் மீன் என்றால் ஒரு பிடிபிடிப்பது சச்சினின் வழக்கம்.
54.சச்சினிடம் ராசியான பேட் ஒன்று இருந்தது. அதை வைத்து 14நான்கு செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். அது உடைந்துபோக வல்லுனர்களை வைத்து சரிசெய்து கடந்த உலக கோப்பை போட்டிகள் வரைக்குமே அதை உபயோகித்தாராம்!
55.சச்சின் கிரிக்கெட்டுக்கு வெளியே இரண்டு உணவகங்களை மும்பையிலும் பெங்களூருவிலும் நடத்தி வருகிறார்.
56.சச்சின் தன் பள்ளிப்படிப்பை தொடங்கியது நியூ இங்கிலான்ட் ஸ்கூலில்தான் என்றாலும் கிரிக்கெட்டுக்காக அவருடைய பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் உத்தரவின்படி சரதாஸ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தார்.
57.உலகம் முழுக்க இருக்கிற 90 கிரிக்கெட் மைதானங்களில் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார் சச்சின்!
58.சச்சின் கிரவுண்டில் விளையாடும் போது எதையும் சாப்பிடவோ குடிக்கவோ மாட்டார் அவருடைய மனைவி அஞ்சலி! திருமணமானதிலிருந்து இதை விரதமாகவே கடைபிடிக்கிறார்.
59.நிறைய சென்டிமென்ட் பார்ப்பாராம் சச்சின், எப்போதும் தன்னுடைய இடதுகால் பேடையே முதலில் அணிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
60.மேடம் டுசாட்ஸ் என்கிற பிரபலமான மெழுகு சிலை மியூசியத்தில் அவரைப்போலவே ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் இடம்பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர் சச்சின்தான்!
61.கங்கூலியோடு இணைந்து ஆறாயிரம் ரன்களை ஒப்பனிங் இறங்கி குவித்தது கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்திடாத சாதனையாக கருதப்படுகிறது!
62.சச்சினை சூப்பர் ஹீரோவாக்கி மாஸ்டர் பிளாஸ்டர் என்கிற பாத்திரத்தை உருவாக்கி காமிக்ஸ் ஒன்றை வெளியிட்டது விர்ஜின் காமிக்ஸ் என்னும் நிறுவனம்.
63.சச்சின் சிறந்தபேட்ஸ்மேனாக இருந்தாலும் இக்கட்டான சூழல்களில் இந்தியாவுக்காக பந்துவீசி அசத்தியுள்ளார். டெஸ்டிலும் ஒருநாள்போட்டிகளிலும் 199 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்!
64.பத்தாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தபோது மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சச்சினுக்கு பத்துகிலோ எடையுள்ள வெள்ளி பேட் ஒன்றை பரிசாக கொடுத்தது!
65.டைம் இதழ் சச்சினை ஆசியாவின் ஹீரோ என புகழ்ந்து எழுதியது!
66.உலக கோப்பைப்போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்கிற சாதனை செய்துள்ளவர் சச்சின்.
67.சச்சினுக்கும் சென்னைக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் செஞ்சுரி சென்னை சேப்பாக்கத்தில்தான்! (இங்கிலாந்துக்கு எதிராக 165 ரன்கள்!)
68.1995ல் சச்சின் ஐந்தாண்டுக்கான விளம்பரம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்த தொகை என்ன தெரியுமா? 30கோடி!
69.டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிற எல்லா அணிகளோடும் இரண்டுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்திருக்கிறார்.
70.2006ல் விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்த தொகை 180கோடி! இதன்மூலம் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கிற விளையாட்டு வீரராக உயர்ந்தார்,
71.சச்சின் மூன்று முறை 99 ரன்களுக்கு அவுட்டாகியிருக்கிறார். 90-99 ரன்களுக்குள் அவுட்டானது 28 முறை!
72.2008ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் சச்சினுக்கு சர் பட்டம் கொடுக்க பரிந்துரைத்தார். ஆனால் வழங்கப்படவில்லை.
73.இதுவரை ஒருநாள் போட்டிகளில் 56முறை ஆட்டநாயகன் விருதுபெற்றுள்ள சச்சின் இந்திய அணி தோற்றபோதும் 5 முறை
இவ்விருதினை பெற்றுள்ளார்!
74.மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர் சச்சின். புட்டபர்த்தி சத்யசாயிபாபா கோவிலுக்கு அடிக்கடி போய்வருகிறவர். மேட்ச் இல்லாத காலங்களில் சச்சினை இந்தியாவின் பிரபல கோவில்களில் அடிக்கடி பார்க்கலாம்.
75.அண்மையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி கேட்டு டுவிட்டர் இணையதளத்தில் வேண்டுகோள் விடுத்தார் சச்சின். குவிந்தது ஒருகோடி!
76.சின்ன பையன் வேணாம்ப்பா என பலர் தடுத்தும் சச்சினை 1989ல் இந்திய அணிக்காக தேர்ந்தெடுத்தவர் ராஜ் சிங் துங்கர்பூர்!
77.கிரிக்கெட் மதமாக இருந்தால் சச்சின்தான் கடவுள் என்கிற வாக்கியம் கிரிக்கெட் உலகில் மிகப்பிரபலம். ஒருமுறை ஆஸி அணி முன்னாள் வீரர் மேத் ஹெய்டன் ஒருபேட்டியில் நான் கடவுளை பார்த்திருக்கிறேன் அவர் இந்திய அணியில் விளையாடுகிறார் என்றார்
78.திரைப்படங்கள் பார்ப்பது சச்சினுக்கு பிடித்த பொழுதுபோக்கு. அவருக்கு பிடித்த நடிகர் அமிதாப் பச்சன்! படம் பார்க்க தியேட்டருக்கு செல்லும்போது விக்குவைத்துக்கொண்டு மாறுவேடத்தில் செல்வாராம்.
79.சச்சின் தன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது பாகிஸ்தானுடன் என்பது தெரியும்.. அந்த மேட்ச்சில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தவர் யார் தெரியுமா? நம்மூர் ஸ்ரீகாந்த்!
80.எந்த நாட்டிற்கு விளையாட சென்றாலும் அதற்கு முன் தன்னுடைய குரு ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசிபெற்றுவிட்டுத்தான் செல்வார்.
81.மல்யுத்தம் என்றால் சச்சினுக்கு உயிர். இந்திய அணியில் புதிதாக நுழைந்த போது திலிப் வெங்சர்க்கார்,அங்கோலா,மனோஜ் பிராபகரோடெல்லாம் ஜாலியாக மல்யுத்தம் போட்டு ஜெயிப்பாராம். அவருடைய கைகள் மிகவும் வலுவானவை என்று ஒருபேட்டியில் கூறுகிறார் திலீப் வெங்சர்க்கார்.
82.சச்சின் பேட்டிங்கில் மட்டுமல்ல சமையலிலும் கில்லாடி, வீட்டில் இருக்கும்போது கத்திரிக்காய் ரோட்டி , சப்ஜியெல்லாம் செய்து அசத்துவாராம்.
83.மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள எப்போதும் சச்சின் காதுகளில் இசை ஒலித்துக்கொண்டேயிருக்கும். பாப் இசையும் கிசோர் குமார் பாடல்கள் என்றாலும் உயிர்.
84.சச்சின் தன்னால் விளையாடவே முடியாத ஒரு பந்துவீச்சாளர் என குறிப்பிடுவது மறைந்த தென்னாப்பிரிக்க அணியின் ஹன்சி குரோன்யேவையே!
85.சச்சினுக்கு இரண்டு முறை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால் இரண்டுமுறையும் இந்தியா அதிக போட்டிகளில் தோல்வியடைந்தது. அந்த சமயத்தில் தானாகவே தன் கேப்டன் பதவியை துறந்தார் சச்சின்.
86.டான் பிராட்மேனின் 29டெஸ்ட் சத சாதனையை சச்சின் முறியடித்தபோது ஃபார்முலா ஒன் ஃபெராரி நிறுவனம் ரேஸ் சாம்பியன் மைக்கேல் சூமேக்கர் கையால் அதிநவீன கார் ஒன்றை பரிசளித்தது.
87.1999ல் சச்சினின் உருவம் பொறித்த 24 காரட் தங்கநாணயங்களை இந்தியாவின் கார்ப்பரேஷன் பேங்க் வெளியிட்டது
88.சச்சினுடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் பள்ளி அணிக்காக கிரிக்கெட் ஆடிவருகிறார். அப்பாவை போல இல்லாமல் இவர் ஒரு
ஆல்ரவுண்டர். இடது கை ஆட்டக்காரர்!
89.சச்சினின் ரத்தத்துளியில் அச்சிடப்பட்ட (ஒருதுளிதான்) அவருடைய வாழ்க்கை வரலாற்றுப்புத்தகம் ஒன்றை இங்கிலாந்து பதிப்பகம் வெளியிட்டது. அதில் சச்சினின் டிஎன்ஏ வடிவமும் வெளியிடப்பட்டது. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி ஒரு புத்தகத்தின் விலை முப்பது லட்சம் ரூபாய்! இந்தப்பணம் இந்தியாவில் ஏழைகளுக்கான பள்ளி ஒன்றை கட்ட செலவிடப்பட்டது.
90.சச்சின் வசித்த காலனியின் வாட்ச்மேன் பையன் ரமேஷ். சச்சினின் இளம்வயது தோழன். இருவரும்தான் எப்போதும் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். இப்போது அவர்தான் சச்சினின் பர்சனல் செக்ரட்டரியாக இருக்கிறார். இப்போதும் நண்பர்களாக!
91.சொந்தவீட்டுக்கனவு அனைவருக்கும் உண்டு. மும்பையிலிருக்கும் பாந்த்ராவில் அண்மையில் சச்சின் தன் 5 அடுக்குகள் கொண்ட 40கோடியில் கட்டப்பட்ட புதியவீட்டில் குடியேறினார்.
92.சச்சின் விளையாடுவதை கிரவுண்டிற்கு சென்றோ டிவியிலோ லைவ்வாக பார்க்க மாட்டாராம் அவருடைய அண்ணன் அஜித். ரெகார்ட் செய்துதான் பார்ப்பது வழக்கமாம்! அவர் பார்த்த ஆட்டங்களில் சச்சின் சரியாக ஆடுவதில்லை என இப்படி ஒரு நம்பிக்கை!
93.மும்பையில் மேட்ச் நடந்தால் போட்டிக்கு முன்னால் தன் வீட்டுக்கு சென்று பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்ற பின்பே ஆட்டத்திற்கு கிளம்புவார் சச்சின்.
94.டெல்லியின் முக்கிய பகுதியான சாந்த்னி சவ்க்கில் ஒரு சாலைக்கு சச்சின் பெயர் சூட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
95.கொலவெறி பாடல் ஹிட்டான கையோடு நடிகர் தனுஷை அழைத்து அதே பாணியில் சச்சினுக்கும் ஒரு பாட்டு போட்டு ஹிட்டடித்தது பூஸ்ட் நிறுவனம்! அது சச்சின் ஆன்த்தம் (கீதம்) என அழைக்கப்பட்டது.
96.2008ஆம் ஆண்டு பத்மவிபூசன் விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் விருது தரப்படவில்லை.
97.ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் உலக அளவில் டாப்50 கிரிக்கெட் வீரர் பட்டியல் ஒன்றை உருவாக்கினார். அதில் சச்சினுக்கே முதலிடம்.
98.சச்சினுக்கு புகைப்பழக்கமோ குடிப்பழக்கமோ கிடையாது. அதோடு சிகரட்,குடி மாதிரியான விளம்பரங்களிலும் நடிப்பதில்லை.
99.20 கோடிரூபாய் தருவதாக கூறிய ஒரு பீர் கம்பெனியின் ஆஃபரை வேண்டாம் என நிராகரித்தார் சச்சின். காரணம்.. என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.. அவர்களை தீயப்பழக்கங்களுக்கு இட்டுச்செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என்றார்.
100.ஆண்டுதோறும் 200 குழந்தைகளின் கல்விக்கு அப்னாலயா என்னும் அமைப்பின் மூலமாக உதவி வருகிறார் சச்சின்.


(நன்றி - புதியதலைமுறை வார இதழ்)
Copied from :http://www.athishaonline.com/2012/04/100-100.html

பெண்ணின் பெருமை

பெண் குழந்தைகள் குடும்பத்துக்குச் சுமை என்ற கருத்து இந்த கணினி யுகத்திலும் நீடித்திருப்பது வியப்பாகத்தான் இருக்கின்றது.

பெங்களூரில், சொந்தத் தந்தையால் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று மாதப் பெண் குழந்தை அஃபிரீன் இரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. பெண் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை அதன் தந்தை அன்பு செலுத்தாமல் வெறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்ய முயன்ற அன்றைய தினம், "நானே பால் புகட்டுகிறேன்' என்று மனைவியைக் கடைத்தெருவுக்குப் போய்வரச் சொன்னபோது, குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் போன தாய் ரேஷ்மா பானு தனது கணவர் சொந்த மகளை அடித்துக் கொல்வார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குவாலியரில் இதேபோன்று ஒரு தந்தை, தன் பெண் குழந்தைக்கு அதிகளவு புகையிலையைப் புகட்டிக் கொலை செய்தார். இந்த வழக்குத் தொடர்பாக அவரை அண்மையில் குவாலியர் போலீஸ் கைது செய்துள்ளனர். வரதட்சிணை கொண்டுவராத உன் குழந்தைக்கு நான் வரதட்சிணை கொடுக்க வேண்டுமா? என்பதுதான் இந்தத் தகராறின் அடிப்படைக் காரணம்.
பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தைதான் என்று ஜோதிடத்தை நம்பி, பெண்ணை அடித்து உதைத்து கருக்கலைப்பு செய்த சம்பவம் ஆந்திர மாநிலம், குண்டூரில் மார்ச் 31-ஆம் தேதி நடந்தது. முன்னி என்ற அந்தப் பெண்மணி மணமான பத்து ஆண்டுகளில் தற்போது ஆறாவது முறையாகக் கருவுற்றிருந்தார். ஆனால் ஜோதிடரோ, அந்தப் பெண்ணுக்கு ஏழாவது குழந்தைதான் ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்று அறிவித்தார். அதனால்தான் இந்த சித்திரவதை.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்தப் பெண்மணிக்கு, கருப்பை பாதிக்கப்பட்டுள்ளதால் இனி குழந்தைப் பேறுக்கே வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதற்காக ஜோதிடரை கட்டி வைத்து அடிக்க நினைத்தாலும் முடியாதபடி அனைவரும் சிறையில் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ ஆய்வுக் கழக மருத்துவமனைக்கு (எய்ம்ஸ்) உடல் முழுதும் காயங்களுடன் கொண்டுவரப்பட்ட குழந்தை பாலக், சிகிச்சை பலனின்றி இறந்தது. அந்தக் குழந்தையைக் கொண்டுவந்த வளர்இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணின் தாய் உள்பட சிலர் பல மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு, பலரால் சீரழிக்கப்பட்ட அவலம் தெரியவந்தது. இப்போது 13 பேரை கைது செய்திருக்கிறது புது தில்லி போலீஸ்.
சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில், இந்தப் பெண் குழந்தை என் குழந்தையே இல்லை. செவிலியர்கள் மாற்றிவிட்டார்கள் என்று மருத்துவமனையில் தகராறு செய்த ஒரு தந்தையை சமாதானப்படுத்தி உட்கார வைத்து, குழந்தையின் டிஎன்ஏ சோதனை மூலம் அது அவருடைய குழந்தைதான் என்று நிரூபித்துக் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.
பிளஸ்-2 தேர்விலும், கல்லூரி பட்டமளிப்பு விழாக்களிலும் பரிசும் பாராட்டும் அள்ளிக்கொண்டு வருவது பெண் குழந்தைகள்தான். வயதான பெற்றோர்களை, மகன்களைவிடப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வது யார் என்று கணக்கெடுத்தால், அதிலும் பெண்கள்தான் முன்னிலை வகிப்பார்கள். வயதான அப்பா, அம்மாக்கள் தங்களோடு வசிக்காவிட்டாலும், அவர்களுக்கு மகன்கள் கொடுக்காத அளவுக்கு கணிசமான பாக்கெட்மணி கொடுப்பதும் மகள்களே!
இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் வந்தாயிற்று. குடியரசுத் தலைவர், முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் என அரசியலில் ஆணுக்கு இணையாகச் செயல்படுகிறார்கள். அதிகாரிகள் என்று எடுத்துக்கொண்டாலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நிறைய பேர் பெண்கள். இருந்தும்கூட, பெண் குழந்தை என்றால் குடும்பத்துக்குச் சுமை என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை. பெண்களின் இந்தச் சாதனைகளை நம் வீட்டுக் குழந்தைகள் செய்யாது என்கின்ற அவநம்பிக்கைதான் இந்த பிற்போக்குத்தனத்துக்குக் காரணம்.
பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பிரச்னை தமிழகத்தில் இன்று பெருமளவு நீங்கிவிட்டது எனலாம். சாதனைக்குப் பாலினம் தடையல்ல எனும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பெண்சிசுக் கொலைகளைத் தடுக்க முடிந்திருக்கிறது என்பதற்கு தமிழகமே சாட்சி. இப்போது தமிழகத்தில் பெண்சிசுக் கொலை என்ற பேச்சே இல்லை. அரசு அமைத்த தொட்டில் குழந்தை திட்டத்துக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது. இதற்காகத் தமிழக அரசை மனமாரப் பாராட்டலாம்.
பெண்சிசுக் கொலை போய், இப்போது தமிழகத்தில் இளவயது திருமணம் மிகப் பெரும் பிரச்னையாக வடிவெடுத்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பூப்பெய்தியவுடன் பெண்ணுக்கு மணம் முடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பெற்றோர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றாலும் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.
இதற்குக் காரணம், பெண்கள் பிளஸ்-2 படிக்கும்போதே காதல் பிரச்னையில்-உபயம் தமிழ்ச்சினிமா, டிவி சீரியல்கள்- சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே, "கல்யாணத்தை முடி, கணவன் விரும்பினால் தொடர்ந்து படி' என்று இளவயது திருமணங்களை நடத்தத் துணிகிறார்கள் பெற்றோர். இப்பிரச்னையில் விழிப்புணர்வு தேவைப்படுவது பெற்றோருக்கு அல்ல. இளவயது பெண்களுக்குத்தான்!
காதலிப்பதும், காதலித்தவர்களையே திருமணம் செய்துகொள்வதும் தவறில்லை. ஆனால், முறையற்ற காதலும், ஏதோ கவர்ச்சியால் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்று கைக்குழந்தையுடன் குடும்ப நீதிமன்றப் படிகளில் விவாகரத்துக்கு ஏறி இறங்குவதும் எவ்வளவு முட்டாள்தனம்.
""முதலில் கல்வியை நேசி, காதலைப் பிறகு யோசி'' என்று இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தமிழகத்தில் உருவாகியுள்ளது

ஏன் இந்தத் தற்கொலை வெறி ?

“காதல் வந்தால் சொல்லியனுப்பு…. உயிரோடிருந்தால் வருகிறேன்”, என்று ஒரு பிரபலமான சினிமாப் பாடலின் வரிகள் சொல்கின்றன. காதலுக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்புதான் இந்த வாரம் என் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அடுத்து ஐ.ஐ.டியிலும் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்களில் காதல் பிரச்சினையும் ஒன்று என்று செய்திகள் சொல்கின்றன. காதல் ஏன் எப்படி பிரச்சினையாகிறது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
என் காதல் அனுபவங்களைப் பற்றிப் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு கட்டுரையில் ஒருபகுதி இப்படிப்போகிறது – ” சிறந்த காதலர்களால்தான் சிறந்த நட்பைப் புரிந்து கொள்ளமுடியும். காதலைக் கண்டு பயப்படுகிறவர்கள்தான் ஆண்- பெண் நட்பைக் கண்டும் அஞ்சி அஞ்சிச் சாவார்கள். எல்லா நட்பும் காதலாக மலரவேண்டியது இல்லை என்பது அவர்களுக்குப் புரியாது. எல்லா ஆண்- பெண் நட்பும் காமத்திலேயே சென்று முடியும் என்பது அவர்களின் நிரந்தர பயம். உறவுகளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பது நம் சமூகத்தில் புரையோடியிருக்கிற நோய். செக்ஸ்,காதல் பற்றியெல்லாம் ஆரோக்கியமான சூழல் இல்லாமல் வக்கரிப்பான சினிமாக்களே இதற்கு ஆசானாக விளங்குவது இந்த நோயின் இன்னொரு அறிகுறி”
படிப்பறிவு இல்லாத அரைகுறை எழுத்தறிவு உள்ள இளைஞர்களும் காதல் ‘தோல்வி’யில் தற்கொலை செய்கிறார்கள், உயர் படிப்பு படிக்கும் அறிவார்ந்த இளைஞர்களும் அதையே செய்கிறார்கள். எனவே காதல் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இரு சாராருக்கும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
காதலில் ‘தோல்வி’ என்பது என்ன ?
ஒருதலைக் காதலை தோல்வி என்கிறார்கள். எனக்குப் பிடித்த பெண்ணுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் அது காதல் தோல்வியாம். உடனே தற்கொலை செய்கிறார்கள். இந்த ‘தோல்வி’ லாஜிக்படி பார்த்தால் காதலிக்காமல், ஏற்பாடு செய்யும் திருமணமுயற்சிகளில் பெண் பார்க்கப் போகிறவனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அவன் தற்கொலை செய்துகொள்ளவேண்டுமா? அல்லது எப்படியாவது அவளுக்குத் தன்னைப் பிடிக்கச் செய்யவேண்டும் என்று டார்ச்சர் செய்யமுடியுமா?
காதல் ஹார்மோன்களின் தூண்டுதலினால், உடலின் தேவைகளுடன் மனதின் தேவைகளும் சேர்ந்துகொண்டு உசுப்பிவிடும் ஓர் உணர்வு. இதைப் பக்குவமாக வசப்படுத்தத் தவறினால் பழத்தை வெட்டுவதற்கு பதில் கையை வெட்டும் கத்தியாகிவிடும்.
காதலில் இறுதி வெற்றி என்பது என்ன ?
அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்லத் தோன்றுகிறது. “காதலின் இயல்பான முற்றுப் புள்ளி காமம்தான் என்றே பொதுவாக நம்பப்படுகிறது. கல்யாணத்தில் முடிவதுதான் நிஜக் காதல் என்றும் சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் காதலின் இறுதி வெற்றி என்பது அதில் வயப்பட்டிருந்த இருவருக்குமே அந்த அனுபவம் எந்த காலத்தில் நினைத்துப் பார்த்தாலும், துளியும் வலிகளற்ற இனிமையாக்வே இருக்கமுடியுமானால் அதுதான் வெற்றி பெற்ற காதல்.இந்த இனிமையைத்தொடர்ந்து நீடிப்பதற்கான கருவியாக திருமணமும் அமைந்தால் அது போனஸ் வெற்றி. திருமணத்துக்குப் பிறகு காதலைத் தொலைத்துவிட்டவர்கள் வாய்ப்பை நழுவவிட்ட முட்டாள்கள்; சபிக்கப்பட்டவர்கள்.”
ஆனால் நம் சமூகத்தில் இன்று காதல் என்பது ஆணும் பெண்ணும் சாமர்த்தியமாகத் தனக்கான , தன் இச்சைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தோதான அடிமையை வடிவமைத்து வசப்படுத்தும் சூழ்ச்சியாக மாற்றப்பட்டிருக்கிறது. காதல் என்றால் என்ன என்று புரியாத மனநிலையே இதற்குக் காரணம். காதல் ஒருவர் தன்னையும் அழித்துக் கொள்ளாமல், எதிர் நபரையும் அழிக்காமல் இருவரையும் வளப்படுத்தும் பகிர்தல். ஆனால் இன்னொரு நபரைத் தன் விருப்பப்படி மாற்றியமைத்து தன் உடமையாக்கிக் கொள்ளும் மனநிலையாகவே காதல் பயன்படுத்தப் படுகிறது. அப்படி உடமையாக்கிக் கொள்ளமுடியாவிட்டால், இருவரில் ஒருவர் மற்றவரை அழிப்பதாகவோ தன்னையே அழித்துக் கொள்வதாகவோ முடிகிறது.
தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றும் ஒருவனை எப்படி காதலன் என்று சொல்ல முடியும் ? அதில் எங்கே இருக்கிறது காதல் ? தன் அன்பை ஒருவர் ஏற்காவிட்டால், அந்த அன்பை இனி யாருக்குமே காட்டமுடியாது என்று சொல்லி தன்னையே அழித்துக் கொள்ளும் மனதில் ஏது காதல் ? என்னைக் காதலிக்க மறுத்தால் நான் கையைக் கிழித்துக் கொள்வேன், சாவேன் என்று மிரட்டி எதிராளை அன்பு செலுத்தக் கட்டாயப்படுத்துவது எப்படி காதலாகும் ? அது வெறும் பிளாக்மெயில்தானே ?
ஆனால் காதல் என்பது என்னவென்றே தெரியாமலே தாங்கள் காதலிலிருப்பதாக நம்பும் பலரை சினிமாவும் ஊடகங்களும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. உடல்முதிர்ச்சியை மட்டும் பயன்படுத்துவது காமம். அத்துடன் மனமுதிர்ச்சியும் இணைந்தால்தான் காதல்.
இன்றைய வாழ்க்கை முறையின் விளைவாக உடல் முதிர்ச்சி பத்து பதினோரு வயதிலேயே ஏற்படத் தொடங்கிவிடுகிறது. பெண்கள் பருவமெய்தும் வயது 14லிருந்து இன்று பத்தைத் தொட்டுவிட்டது.
ஆனால் மன முதிர்ச்சிக்குக் குறைந்தபட்ச வயது தேவை. கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடி அலைந்து ஒரு வேலை கிடைத்து அதில் பல மனிதர்களுடன் உறவாடும் வேளையில்தான் மனப் பக்குவம் தொடங்குவது சாத்தியமாகிறது. இது பொதுவிதி. விதிவிலக்குகள் மிகக் குறைவாக எப்போதும் இருப்பார்கள். சுமார் 22, 23 வயதுக்குப் பிறகு தோன்றும் காதலில்தான் உடல் தேவையும் மனத் தேவையும் இணைந்த தேடல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதற்கு முன்பு நம் மனதின் தேவைகள் என்ன என்று யோசித்து தேர்ந்தெடுத்து தொகுத்து வாழ்க்கையின் குறிக் கோள்களை வகுத்துவிடும் வாய்ப்பு குறைவு. உடலின் தேவைகள் மட்டுமே உறைக்கக்கூடிய வயதாகவும் மனம் எப்போதும் குழம்பிக் குழம்பித் தெளிவைத் தேடும் முயற்சியிலுமாக இருக்கும்.
ஆனால் நம் சினிமாகாரர்கள் எந்த சமூகப் பொறுப்பும் இல்லாதவர்கள். அறியாத வயசு, புரியாத மனசு., ரெண்டும் சேர்ந்து காதல் செய்யும் நேரம் என்று நட்பையும் காதலையும் குழப்பியடித்து தங்கள் கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். சுமார் இருபது வருடம் முன்னர், பள்ளி இறுதி வகுப்பிலேயே கமர்ஷியலாக நுழைத்த காதலை இப்போது எட்டாங்கிளாசுக்குக் கொண்டு போய்விட்டார்கள்.
பொறுக்கியாக இருந்தால்தான் பெண்கள் விரும்புவார்கள் என்று ஒரு சூத்திரத்தை சினிமா விடாப்பிடியாகக் கையாண்டு வருகிறது. இதன் நீட்சியாக, என்ன பொறுக்கித்தனம் செய்தாவது ஒரு பெண்ணை தன்னைக் காதலிக்க வைப்பது காதல் தர்மம் என்று கதை பின்னப்படுகிறது.
அசல் வாழ்க்கையில் காதல் இப்படியெல்லாம் இல்லை. இவனை நியாயமாக வெறுப்பதற்கு பதிலாக, ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியாமலே மயங்கும் பெண்களும் ஏன் இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவே கஷ்டப்படும் பையன்களும் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு பள்ளி மாணவன் ‘காதல் தோல்வியால்’ தற்கொலை செய்துகொண்டபோது அவன் ஒரு தலையாக காதலித்த மாணவியிடம் விசாரித்தார்கள். “நிறைய பசங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காங்க. நான் எல்லார் கிட்டயும் நோதான் சொல்லியிருக்கேன். மத்தவங்கள்லாம் ஒண்ணும் செத்துப் போகலே. இவன் செத்துப் போனா அதுக்கு நான் என்ன செய்யமுடியும் ?” என்று அந்த மாணவி கேட்ட நியாயத்தை யாரும் பரிசீலிப்பதில்லை.
காதலை விடலைப்பருவத்திலிருந்து மழலைப் பருவத்துக்கு எடுத்துப் போய் கமர்ஷியலாக்கும் சினிமாவைப் பின்பற்றி விளம்பரக்காரர்களும் குழந்தைகளை பெரியவர்கள் போல நடக்கச் செய்யும் உத்திகளை கமர்ஷியல் விளம்பரங்களில் புகுத்த ஆரம்பித்து விட்டார்கள். குழந்தைகள் சைட்டடிப்பது, பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக நெருக்கமாக உட்கார்ந்து கிசுகிசுப்பது என்று விடலைச் செயல்களை செய்வதை கமர்ஷியல் விளம்பரங்கள் பாலியல் தொனியுடன் காட்ட ஆரம்பித்துவிட்டன. சினிமாவை முன்தணிக்கை செய்யும் அரசு டி.வி விளம்பரங்களுக்கு முன்தணிக்கை பற்றி யோசிப்பது கூட இல்லை. வணிக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவேண்டிய அரசின் பிரதமர், கொலை வெறிப் பாட்டின் கமர்ஷியல் வெற்றியையடுத்து அதன் நடிகரை சர்வதேச பிரமுகருடன் விருந்து சாப்பிட அழைப்பதென்பது அரசு வணிகத் துறையின் தரகராக மாறிவிட்ட சூழலின் அடையாளம்தான். இந்தச் சூழலில் சராசரி இளைஞர்கள் எப்படி தங்களுக்கான பக்குவத்தை அடைவார்கள் ?
தேர்வுக்கான பாடங்கள், அவற்றை வசப்படுத்துவதற்கான உத்திகள் இவற்றையெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நேர்த்தியாகவும் திறமையாகவும் சொல்லித் தர ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஆனால் விடலைப் பருவத்து பெண்ணுக்கோ ஆணுக்கோ தன் உடலையும் தன் மனதையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பதற்கான கல்வி இல்லை.
அதற்கான வழிகாட்டுதல் இன்று குடும்பத்திடம் கிடைப்பது இல்லை. மிடில் க்ளாஸ் குடும்பமும் அரசைப் போலவே பன்னாட்டு கம்பெனிகள் சார்ந்த கனவுலகில் திளைத்துக்கொண்டிருக்கிறது.
படிப்போடு சேர்த்து வாழ்க்கைக்கான திறன்களையும் வளரிளம் பருவத்திலேயே நம் சிறுவர்களுக்கு தரத் தவறினால் அதிகம் படித்தவன், கொஞ்சம் படித்தவன் என்று எல்லா தரப்பு இளைஞர்களிடையிலும் காதல் தோல்வி தற்கொலைகள், பரீட்சை தோல்வி தற்கொலைகள் பெருகுவது உறுதி.
பள்ளிப்படிப்போடு முடித்துவிட்டு மேலே படிக்க வசதியில்லாமல், குடும்பச் சூழலினால் வேலைகளுக்குச் செல்லும் இளைஞர் கூட்டம் இன்று மிகப் பெரிது. டீன் ஏஜில் இருக்கும் அந்தப் பிரிவினர் வாழ்க்கை என்பது கையில் கொஞ்சம் காசு புரள்வதாகவும், அன்றாட அலுவல் நிமித்தம் ஆண் பெண் சேர்ந்து உறவாடும் சூழலுடையதாகவும் இருக்கிறது. ஆனால் மனப்பக்குவம் இன்னும் வரப்பெறாத நிலையில் அந்த உறவுகளில் கடும் சிக்கல்கள் உருவாகின்றன. காத்திருக்கின்றன.
இனி தாமதிக்காமல் பள்ளிப்பருவத்திலேயே வாழ்க்கைத் திறன்களுக்கான கல்வியை தினசரி பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்காவிட்டால், நாம் பல அருமையான உயிர்களை அபத்தமான காரணங்களுக்காக பலி கொடுக்கும் சமூகமாகிவிடுவோம். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் உளவியல் ஆலோசகர்களை நியமிப்பது என்பது தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாகவே மாறும். ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தன் உடலையும் மனதையும் புரிந்துகொண்டு தன்வசத்தில் வைத்திருக்கும் சமூகமே நம் கனவாக இருக்கவேண்டும். அது நனவாக பள்ளிக் கூடத்திலேயே பணிகளைத் தொடங்க வேண்டும். ஆரோக்கியமான இளம் மனங்களை சிதைத்து நச்சாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள், விளம்பரங்கள், சினிமாக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் வேண்டும். சில கோடி ரூபாய் லாபங்களுக்காக பல கோடி மனிதர்களை பலி கொடுக்க முடியாது.

Source and Thanks : Gnani