இதுவா கூட்டாட்சி?

மேற்கு வங்க மாநிலத்துக்கு நிதியுதவி அளிப்பதில் மத்திய அரசின் தயாள குணத்துக்கு அளவே இல்லை. இந்த முறை ரூ.16,000 கோடி சிறப்பு நிதி அளிக்கவிருக்கிறது.
 குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோடு விவாதிப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவைவிட்டுக் கிளம்பியபோது, அங்குள்ள பத்திரிகைகள் இதைப்பற்றித்தான் எழுதின. "குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து விவாதிப்பதோடு, மத்திய அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் 4 தவணைகளில் வழங்கவுள்ள ரூ.16,000 கோடி குறித்தும் பேசுவார். இந்த சிறப்புநிதியை அமைச்சரவை விரைவில் அங்கீகரிக்கவுள்ளது' என்றுதான் மேற்குவங்கப் பத்திரிகைகள் எழுதின.
 சென்ற ஆண்டுதான் ரூ. 8,750 கோடியைப் பின்தங்கிய மண்டலங்களுக்கான சிறப்பு நிதி என்ற பெயரில் மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு அளித்தது. பிரதமர் கிராம சடக் யோஜனா திட்டங்களுக்காக ரூ. 2,000 கோடி கொடுத்தார்கள். இப்போது மூன்று ஆண்டுகளில் நான்கு தவணைகளில் ரூ. 16,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருக்கிறது.
 மேற்கு வங்கத்துக்கு எப்படிக் கரங்கள் சிவக்கச் சிவக்க அள்ளிக் கொடுக்கின்றீர்களோ அதேபோன்று உத்தரப் பிரதேச மாநிலத்துக்கும் தர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கேட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள மாநிலமும் கேட்டிருக்கிறது. நிச்சயம் இவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
 அவர்களுக்கு ஏன் அள்ளிக் கொடுக்கிறீர்கள் என்று நாம் கேட்கவில்லை. ஆனால், தமிழகத்தின் கோரிக்கைகள் மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என்று கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. இப்போது, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்பதுகூடக் காரணமாக இருக்குமானால் இந்திய யூனியன், கூட்டாட்சித் தத்துவம் என்கிற வார்த்தைகளுக்கே அர்த்தமில்லாமல் அல்லவா இருக்கிறது.
 வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ஒரு பக்கம் இருக்கட்டும். "தானே' புயல் நிவாரணத்தில் மத்திய அரசு காட்டிய அக்கறை என்ன? தமிழகத்தில் "தானே' புயல் தாக்கியபோது, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்களைச் சாய்த்து, வீடுகளை வீழ்த்திப் பெரும் நாசம் செய்தது. 2004-டிசம்பரில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும், 2011 டிசம்பரில் "தானே' புயல் ஏற்படுத்திய பாதிப்பும் பெருநாசமும் மிக அதிகம் என்று மதிப்பிடப்பட்டது.
 தமிழக அரசு ரூ. 5,000 கோடி சேத மதிப்பீடு செய்து, உடனடியாக மத்திய அரசிடம் நிவாரண நிதியுதவி கேட்டது. ஆனால், கிடைக்கவில்லை. ""தமிழக அரசு ரூ.850 கோடி நிவாரண நிதியுதவியை அறிவித்த பின்னர், அதேநாளின் பிற்பகலில் மத்திய அரசு ரூ.500 கோடி நிவாரண நிதியை அறிவித்தது. ஒருவேளை வெட்கப்பட்டு அறிவிக்க நேர்ந்ததோ தெரியாது'' என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடும் நிலைமைதான் இருந்தது.
 மேற்கு வங்கத்துக்கு மட்டும் அதிமுக்கியத்துவம் கொடுத்து திட்டக் கமிஷனில் அதிக நிதி ஒதுக்குவதும், சிறப்பு நிதியைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிக்கு அளிப்பதும், மேற்கு வங்கம் பெற்றுள்ள கடன்தொகைக்கு வட்டி செலுத்தாமல் இருக்க அனுமதிப்பதும் என எத்தனை எத்தனை சலுகைகள்!
 நியாயமான ரயில் பயணக் கட்டணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடுத்த நாளே அமைச்சரை மாற்றினார் மம்தா. மத்திய அரசு சம்மதித்தது. இப்போது எல்லோருடைய எதிர்ப்புக்கும் இடையில் ரயில்வே சரக்குக் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளார் புதிய ரயில்வே அமைச்சர். மத்திய அரசு இதற்கும் சம்மதிக்கிறது.
 தமிழகம் மட்டுமல்ல, பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களும் மத்திய அரசின் பாரபட்சமான போக்கை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றன. அவர்களுக்கும் கேட்ட நிதியுதவி கிடைப்பதில்லை. மேற்கு வங்க மாநிலத்துக்குக் காட்டப்படும் மிகையான சலுகைகள் திரிணமூல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய அங்கம் என்பதால் மட்டுமல்ல. தங்கள் ஆதரவில்தான் மத்திய அரசே ஆட்சியில் இருக்கிறது என்பதைத் துணிந்து உணர்த்தித் தனது மாநிலத்தின் வளர்ச்சிக்கு வேண்டியதை எல்லாம் கேட்டுப் பெறுகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி என்பதாலும்கூட!
 இதேபோலக் கேட்கும் துணிவு மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிக்கும் இருந்திருக்குமேயானால், தமிழினப் படுகொலையே நேர்ந்திருக்காது என்பதை நாம் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.
 இத்தகைய பாரபட்சமான நிலைமைகளைக் கடந்து, 2011-12 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே வளர்ச்சி விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக பிகார் (13.1%) உள்ளது. தென்னிந்தியாவில் சிறப்பான வளர்ச்சி அடைந்த மாநிலமாகத் தமிழகம் (9.39%) திகழ்கிறது. ஒருவேளை, "தானே' புயல், மின்பற்றாக்குறை ஆகிய பிரச்னைகள் இல்லாதிருந்தால், பிகாரைப்போல மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) பிகார் மாநிலத்தை விஞ்சியதாக தமிழகம் இருந்திருக்கக்கூடும்.
 மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும்கூட, தமிழகத்தை ஜெயலலிதா ஆளும் மாநிலமாகப் பார்க்கின்ற போக்குதான் இருக்கிறதே தவிர, தமிழர் வாழும் மாநிலமாகப் பார்க்கவில்லை என்பதால்தான் மத்திய அரசு இவ்வளவு வெளிப்படையாகத் தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்பதா, அல்லது கூட்டணியில் இருக்கும் மம்தா விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதைப்போல கூட்டணியில் இருக்கும் தமிழகக் கட்சியின் விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றுகிறது என்பதா?
 அடுத்த பொதுத்தேர்தலில் யார் வேண்டுமானாலும், எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்கள்தான் இருப்பார்கள். தமிழகத்தின் வளர்ச்சி தமிழர் வளர்ச்சியாகத்தான் பார்க்கப்படும். இந்த உணர்வு தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகளுக்கும் இருந்தால் மட்டுமே, தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே!



ஏமாற்றப்படுகிறோம்

பதினோரு முட்டாள்கள் விளையாடுவதைப் பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்த்து ரசிக்கும் விளையாட்டு என்று கிரிக்கெட் விளையாட்டைப்பற்றி ஆங்கில நாடக ஆசிரியரும், சிந்தனையாளருமான பெர்னாட்ஷா கூறியது சரியோ, தவறோ. ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்கிற பெயரில் பல லட்சம் கிரிக்கெட் ரசிகர்களை முட்டாள்களாக்கிக் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும், சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது. அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கும்கூட. ஆனால், இந்தக் கிரிக்கெட் போட்டிகளால் அந்த விளையாட்டுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ என்ன பயன் என்கிற கேள்வி கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு எரிச்சலைக் கொடுக்கின்றது. கொடுக்காதா பின்னே? மக்களின் முட்டாள்தனத்தில் கோடிக்கணக்கில் லாபம் கொழிக்கும்போது அதை விமர்சித்தால் பயனாளிகளுக்குக் கோபமும் எரிச்சலும் வரத்தானே செய்யும்?

ஐபிஎல் விளையாட்டில் கறுப்புப் பணம் இறக்கப்பட்டு வெள்ளைப்பணமாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தந்திருக்கும் விசித்திரமான பதில்: இது தொடர்பாக வருவாய்த்துறை செயலருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்குப் பதில் கிடைத்தவுடன் இதுபற்றி விவாதிப்போம்.

வருவாய்த் துறை செயலர் தில்லியில்தானே இருக்கிறார்? ஏதோ சுவிட்சர்லாந்து அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதைப்போல அமைச்சர் சொல்லிக்கொண்டிருக்கிறார். நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டம்போல அதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு தொடங்கின. தொடங்கிய ஆண்டு முதல் தொடர்ந்து பணத்தை அள்ளியெடுக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு இந்த ஆட்டங்களின் மூலம் 102 மில்லியன் டாலர் கிடைத்தது. ஆண்டுதோறும் 20 மில்லியன் டாலர் அதிகரித்துக் கொண்டே வந்தது. 2011 ஆம் ஆண்டில் (4-வது பருவம்) 160 மில்லியன் டாலர்கள் ( சுமார் ரூ.900 கோடி)கிடைத்தது. ஆனால், 2012 இல் இதுவரை 159 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்திருப்பதாக சலித்துக் கொள்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,077 கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாக ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அமலாக்கப் பிரிவு இதுவரை 19 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. இதுகுறித்து அரசின் எந்தத் துறையும், வருமானவரித் துறை உள்பட, நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்குக் காரணம், பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அரசியல்வாதிகள். மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா ஐபிஎல் தலைவராக இருக்கிறார். மத்திய அமைச்சர்கள் சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக், சி.பி.ஜோஷி, பரூக் அப்துல்லா ஆகியோர் பிசிசிஐ உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுபோதாதென்று, ஐபிஎல் உரிமையாளர்களாகப் பெருந்தொழிலதிபர்கள், நடிகர் - நடிகைகள் வேறு. இவர்களில் பலர் பங்குதாரர்கள் என்றும், பிநாமிகள் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால், இந்த நோட்டீஸ்களுக்கு என்ன அர்த்தம்? வெறும் கண்துடைப்பு என்பதைத் தவிர!

அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் பணம் கொழிக்கும் ஐபிஎல் விளையாட்டில் கரம் கோத்துச் செயல்படுகின்றனர். பாஜகவைச் சேர்ந்த அருண் ஜேட்லியும், ரவிசங்கர் பிரசாதும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலு பிரசாதுடன் இணைந்து செயல்படுவதற்குக் காரணம், கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வமல்ல. ஐபிஎல்லில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம். பணம் வரும்போது, பாஜக தீண்டத்தக்கதாகி விடுகிறது லாலு பிரசாதுக்கு. லாலு பிரசாதின் லஞ்ச ஊழல் இரண்டாம் பட்சமாகிவிடுகிறது பாஜகவினருக்கு!

இந்த விளையாட்டின் ஒளிபரப்பு உரிமை மற்றும் இதில் இடம் பெறும் விளம்பர நிறுவனங்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் பெரும் வரவேற்பை இவர்கள் மிகச் சரியாக வணிகமுறைப்படி பயன்படுத்திக்கொள்ள உதவி செய்யவும், வரிகள் இல்லாமல் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவி செய்யவும்தான் ஐபிஎல் விளையாட்டு உருவாக்கப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது அமைச்சராக இருந்த சசி தரூர் விவகாரத்தில்தான் ஐபிஎல் போட்டிகளில் ஊழல் இருப்பதும், அரசியல் செல்வாக்கு பயன்படுவதும் வெட்டவெளிச்சமானது. இந்த விவகாரத்தில் சிக்குண்ட சசி தரூர் அமைச்சர் பதவியை இழந்தார். ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி பல்வேறு வழக்குகளில் சிக்கி, இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில் இருக்கிறார். முறைகேடுகள் நடக்கின்றன என்று அம்பலமான போதிலும்கூட இவர்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த விளையாட்டுக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் விலை கோரப்படுகிறார்கள். இந்தியாவில் நடக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், விளையாட்டரங்கப் பார்வையாளர்களையும் தொலைக்காட்சி வழியாக ரசிகர்களும் சலிப்பைப் போக்கிக்கொள்ள அழகிகளின் களிநடனம் (சியர் கேர்ள்ஸ்) வேறு.

ஒலிம்பிக் உள்ளிட்ட ஏனைய விளையாட்டுப் போட்டிகளில் "ஊக்கமருந்து' பயன்படுத்தினால் வீரர்கள் தடை செய்யப்படுகிறார்களே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் வீரர்கள் ஊக்க மருந்துக்காகச் சோதிக்கப்படுவதில்லையே, ஏன்? ஒருவர்கூட இந்தக் கேள்வியை எழுப்பத் தயாராக இல்லையே என்பதுதான் நமது ஆதங்கம்.

விளையாட்டின் தார்மிகம், இந்தியக் கலாசாரம், அரசுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய் அனைத்தையும் "கிளீன் போல்டு' செய்துகொண்டிருக்கிறது ஐபிஎல். நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது தெரியாமல் நாம் ஐபிஎல் போட்டிகளை ரசித்து வேடிக்கை பார்த்து நமது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்