இலவச தொலைக்காட்சிப் பெட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார் .

கடந்த 23- ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி . மு . க .  செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது . அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும் , கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார் .

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார் . ஒரு விநாடி அங்கே நின்றவர் , டி . வி . யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு , கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார் . ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார் .

அதில் ‘ மனிதனுக்கு டி . வி . என்பது பொழுதுபோக்கு சாதனம்தான் . ஆனால் அதைவிட முக்கியமானது உணவு , உடை , உறைவிடம் . தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன . இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா ? குறிப்பாக , விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா ?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி . வி . யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் . இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது ? இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்

தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள் . டி . வி . வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம் .

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
 அடையச் செய்திருக்கலாம் . இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம் . தரமான மருத்துவம் , கல்வி , மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும் .அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி . வி . முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம் . எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம் .

விலைவாசி உயர்வு , எரிபொருள் விலை உயர்வு , குடிநீர் பற்றாக்குறை , லஞ்சம் ,  ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி . வி . பார்க்க முடியும் ? எனவே எனக்கு இந்த டி . வி . வேண்டாம் .  முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும் , மரியாதையும் , அன்பும் உள்ளது .

எனவே , இந்த டி . வி . யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன் . அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும் . அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும் . இந்தியா வல்லரசாகிவிடும் ’ என்று நீண்டது அந்த மனு . இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை . அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள் . என்றாலும் அந்த மனுவையும் டி . வி . யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு .இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம் .

“ நான் ஒரு சாதாரண விவசாயி . விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும் , ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான் .

இந்த நிலை , நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது .  எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது . ராத்திரியிலபடுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது .

சாராயத்தை குடிச்சுட்டு , ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு . ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி . வி . ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க . தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு .2 கோடி குடும்ப அட்டைக்கும் டி . வி . கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும் . இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே .

கனத்த இதயத்தோடும் , வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி . வி .?  அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி . வி . பாத்து வேற சிரிக்கணுமாக்கும் . அதுனாலதான் நான் டி . வி . யை திருப்பிக் கொடுத்தேன் ’’  என்றார் .

டி . வி . யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார் .

அந்தக் கடிதத்தில் ‘ கொத்தமங்கலத்துக்கு வந்த டி . வி . க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும் . எனக்கான ஒரு டி . வி . யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ’ என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார் .

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார் . மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை ...!