Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

நோபலுக்கு தகுதியான இந்திய டாக்டர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தை கண்டு பிடித்த, நோபல் பரிசுக்கு தகுதியான இந்திய டாக்டர் பல்வேறு அவமானங்களைச் சந்தித்து இறுதியில் தற்கொலையும் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த ராபர்ட் எட்வர்ட்ஸ் , மகப்பேறு நிபுணர் பாட்ரிக் ஸ்டெப்டோ இருவரும் இணைந்து, 1978, ஜூலை 25ம் தேதி, சோதனைக் குழாய் மருத்துவம் (ஐ.வி.எப்.,) மூலம் லெஸ்லி பிரவுன் என்பவருக்கு குழந்தை பிறக்க வைத்தனர். அந்தக் குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். லூயிஸ் பிரவுன் பிறந்து ஒரு வாரம் கழித்து இதே ஐ.வி.எப்., மூலம் 1978, அக்டோபர் 3ம் தேதி இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தது. இந்த சோதனையை நிகழ்த்தியவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் முகர்ஜி. முகர்ஜியின் சோதனைக்கும் எட்வர்ட்சின் சோதனைக்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. முகர்ஜி, ஹார்மோன் தூண்டுதல் மூலம் அதிகளவில் கருமுட்டைகளை உருவாக்கி, அதில் ஒன்றை வெளியே எடுத்து, விந்தணுவோடு சேர்த்து மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் (கிரியோ பிரிசர்வேஷன்) உறைய வைத்தார்.


இப்படி 53 நாட்கள் உறைய வைத்து, பின் அறை வெப்பநிலைக்குக் கொண்டு வந்து, பெண்ணின் கருப்பையில் வைத்தார். இந்தப் பரிசோதனை மூலம் 31 வயது பெண்ணுக்குக் குழந்தைப் பேறு கிடைக்க வழிசெய்தார். ஆனால் எட்வர்ட்சின் சோதனை வேறு விதமானது. கருமுட்டையை உறைய வைக்கும் முறையை அவர் மேற்கொள்ளவில்லை. சினைப்பையில் இருந்து கருமுட்டைகளை வெளியே எடுக்கும் அவரது முறையும் மிகக் கடினமானதாக இருந்தது.எட்வர்ட்சுக்கு நோபல் கிடைத்தது. ஆனால் சுபாஷூக்கு, அவமானமும், வேதனையும் தான் கிடைத்தது.

இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட முதல் ஐ.வி.எப்., குழந்தை பிறப்பு சாதனையை நிகழ்த்திய டாக்டர். டி.சி.ஆனந்த் குமார், சுபாஷின் ஆய்வகக் கையெழுத்துப் பிரதிகள், ஆய்வுக் குறிப்புகள் மற்றும் மேற்கு வங்க அரசுடன் நடத்திய கடிதப் போக்குவரத்துகள் குறித்து ஆய்வு செய்து, 1997ல், "கரன்ட் சயின்ஸ்' இதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர்,"உலகிலேயே முதன்முறையாக ஐ.வி.எப்., மூலம் குழந்தை பெறுவது மட்டுமின்றி, கிரியோ பிரிசர்வேஷன் மூலம் கருவை உறைய வைக்கும் முறையையும் சுபாஷ்தான் வெற்றிகரமாக கண்டுபிடித்தார். ஆனால் அதற்கான உரிமையை நாம் இழந்து விட்டோம். அவருடன் பணியாற்றிய இந்திய மருத்துவர்களின் அறியாமை, அதிகார வர்க்கத்தின் பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் போக்கு ஆகியவை, நம் நாட்டின் ஒப்பற்ற ஒரு டாக்டரை இழப்பதற்குத்தான் வழிவகுத்தன' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுபாஷ் முகர்ஜி தன் ஆய்வில் வெற்றி பெற்ற போது, மேற்குவங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்திருந்த நேரம். எல்லாத் துறைகளிலும் அரசியல் தலையிட ஆரம்பித்தது. நவீன அறிவியல் மற்றும் குழந்தைப் பேறு தொழில்நுட்பங்கள் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு கதிரியக்க டாக்டர், ஒரு மகப்பேறு நிபுணர், ஒரு பொதுடாக்டர் என மூன்று பேர் கொண்ட ஒரு கமிட்டியை அவரது பரிசோதனை குறித்து ஆய்வு செய்ய மேற்கு வங்க அரசு நியமித்தது. கடந்த 1978, டிசம்பரில் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக் கழகம் நடத்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சுபாஷூக்கு அழைப்பு வந்தும் கூட, மாநில அரசு அனுமதியளிக்கவில்லை. அறிவியல் பத்திரிகைகளில் இதுகுறித்து அவர் எழுதவும் அனுமதியில்லை. 1981, ஜூனில் சம்பந்தமில்லாத கண்மருத்துவத் துறைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவரது நண்பர்களில் ஒருவராகிய சுனித் முகர்ஜி கூறியதாவது: அவரது சோதனை மிகவும் எளிதானது. மிகச் சரியான விளைவுகளைத் தந்தது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஐ.வி.எப்., மருத்துவமனைகளும், இந்திய மருத்துவக் கழகத்தின் ஆராய்ச்சி வழிகாட்டல் நெறிமுறைகளும் இன்று, அவரது முறையின் வெற்றியை ஒப்புக் கொண்டுள்ளன. பங்குராவில் இருந்து கோல்கட்டாவுக்குத் தன் ஆராய்ச்சி பற்றிய பேப்பர் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு வார இறுதிநாளிலும் அலையாய் அலைந்தார். அவருடன் நான், மகப்பேறு நிபுணர் சரோஜ் கந்தி பட்டாச்சார்யா இருவரும் செல்வோம். அவருடன் இருந்தவர்கள் அவரை அழித்து விட விரும் பினர். நாங்கள் பலமுறை அவமானப்படுத்தப் பட்டோம். எவ்விதத்திலும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவ்வாறு சுனித் முகர்ஜி தெரிவித்தார்.

தொடர்ந்த அவமானம், புறக்கணிப்பின் காரணமாக மனம் வெறுத்துப் போன சுபாஷ் முகர்ஜி, 1981, ஜூலை 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். எட்வர்சுடன் தற்போது தொடர்பில் உள்ளவரும், முகர்ஜியை அறிந்தவரும், ஐ.வி.எப்., நிபுணருமான சுதர்சன் கோஷ் தஸ்திதார், "அவர் போன்றவர்கள் நிறைய சாதிக்க முடியும். அவர் இருந்திருந்தால் நோபலுக்குத் தகுதியானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்' என்றார்.


Source : Dinamalar

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்!

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்! என்ற தலைப்பில் வந்த கூட்டாஞ்சோறு நகைச்சுவை பதிவு :-)


ஜெய் ஹோ ஃபிலிம்ஸ்

நேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.

கலை நிகழ்ச்சி:
நமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.

முகத்திலே பரு
முளைக்காத சிறு உரு
ஆனாலும் கருவிலே திரு
அதற்கு காரணம் -
கலைஞர் என்ற கற்பகத் தரு
சளைக்காமல் போட்ட எரு!
உன்னிடம் சேர்ந்தாள் செந்திரு -
என்று பாற்கடலான் தொடுப்பான் செரு!

இந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு? I don’t understand this Tamil!” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.


கலைஞர் கேள்வி பதில்:
கம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்?

ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.

பத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது?

குறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா? உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.

பத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா?

சட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.

இருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே?

கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.

கலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.

ஜெயலலிதா கருத்து:
இதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ.பி. பன்னீர்செல்வம் பயந்து பயந்து பணிவோடு கருத்து தெரிவித்தார்.

விஜயகாந்த் பேட்டி:
இப்படி தன குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

ராமதாஸ் கருத்து:
கூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.

சத்தியமூர்த்தி பவனில் கூட்டம்:
இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவருகிறது.

துக்ளக் தலையங்கம்:
குடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.

கலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார்? வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார்? ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்!

டி. ராஜேந்தர் பேட்டி:
வாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு சிங்கண்டா சிம்பு, வச்சுக்காதே வம்பு என்று எச்சரித்தார்.

ஜூவியில் கழுகு ரிப்போர்ட்:
சங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

அழகிரி குமுறல்:
என் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.

கொசுறு செய்தி:
ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில் என் பேரு கலாநிதி, சன் டிவி உங்க தலைவிதி, மிச்ச சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.
( நன்றி: http://koottanchoru.wordpress.com )