Showing posts with label cricket. Show all posts
Showing posts with label cricket. Show all posts

ராகுல் டிராவிட்... சூரியன்கள் மறைத்த நட்சத்திரம்!

சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியிருக்கிறார், ராகுல் டிராவிட். ஓய்வுபெறும் முடிவையும் அவரது பாணியிலேயே அறிவித்திருக்கிறார்!
பொதுவாக நட்சத்திர வீரர்கள் மைதானத்தின் நடுவே ரசிகர்கள் கைத்தட்டலோடு விடைபெற வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், ராகுல் டிராவிட் அவரது ஆட்டத்தைப் போலவே அழகாக திட்டமிட்டு, முன்கூட்டியே செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து, கோட் சூட் அணிந்தபடி கண்ணியமாகவும் கம்பீரமாகவும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இது தான் டிராவிட்!
எப்போதும் ஒரு நிதானத்தை, பதற்றமோ பரப‌ரப்போ இல்லாத உறுதியை, திட்டமிட்டு கவனமாக அடியெடுத்து வைக்கும் தன்மையை அவரிடம் பார்க்கலாம். ஆடுகளத்திலும் சரி, ஆடுகளத்துக்கு வெளியேயும் சரி.. கிரிக்கெட்டில் அடிக்கடி சொல்லப்படுவதை போல் அவர் நிஜமாகவே ஜென்டில்மேன் தான்!
16 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் டிராவிட் ஏற்ற இற‌க்கங்களைப் பார்த்திருக்கிறார்; சோதனைகளைச் சந்தித்திருக்கிறார்; சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்து போனதில்லை. எங்கேயும் எப்போதும் நிதானமாகவே இருந்திருக்கிறார்.
டிராவிட்டின் இந்த நிதானமும், மன உறுதியுமே கடந்த 16 ஆண்டுகளாக இந்திய அணியின் பக்கபலமாக இருந்துவந்திருக்கிறது. இந்திய பேட்டிங் நெருக்கடிக்கு ஆளான நேரங்களில் எல்லாம் அவரே இந்திய அணியை தாங்கிப் பிடித்திருக்கிறார்.
இந்திய அணியை பொருத்தவரை, டிராவிட்தான் ஆபத்பாந்தவன். அனல் வீசும் வேகப்பந்து வீச்சில் இந்திய பேட்டிங் தடுமாறி நின்றபோதும், விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியின் விளிம்பில் நின்றபோதும் அவரது உறுதியான ஆட்டமே கைகொடுத்திருக்கிறது.
இந்திய அணிக்கு சிக்கல் என்றால், ரசிகர்கள் நம்பியதும் டிராவிட்டை தான். எதிர் அணியினர் குறிவைத்ததும் டிராவிட்டை தான்!
எத்தனையோ போட்டிகளில் அவர் இந்திய அணிக்கும் தோல்விக்கும் இடையே நின்றிருக்கிறார். அதனால்தான் "இந்தியப் பெருஞ்சுவர்" எனப் பாராட்டப்பட்டார். நிதானமும் நிலையான தன்மையும் கொண்ட அவருக்கு
இந்தப் பெயர் எத்தனை கச்சிதமாக பொருந்துகிறது. அதே அள‌வுக்கு வெற்றிக்கும் பங்களிப்பு செலுத்தியிருக்கிறார்.
டிராவிட் தாங்கி நிற்கும் விழுப்புண்கள் அதிகம். தங்கத்தை நெருப்பில் இட்டால்தான் பிரகாசிக்கும் என்பது போல டிராவிட்டின் ஆற்றலை சோதனைகளும் சவால்களுமே வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. அதற்கேற்ப டிராவிட்டின் சாதனைகளும் வியக்க வைக்கின்றன.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே 10,000 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ' மெதுவாக ஆடுகிறார்.. எனவே ஒருநாள் போட்டிக்கு ஒத்துவரமாட்டார் ' என்று விமர்சிக்கப்பட்டதை மீறி, ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் எல்லா நாடுகளுக்கு எதிராகவும், எல்லா நாடுகளிலும் சதம் அடித்திருக்கிறார். 88 முறை டெஸ்ட் போட்டிகளில் ஜோடியாக 100 ரன்களை குவித்துள்ளார். வேறு எந்த வீரரையும்விட அதிகமாக 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக கேட்சுகளை பிடித்திருக்கிறார் (210).
சாதனைகளையும் ஆட்டத்திறமையையும் மீறி, ராகுல் டிராவிட் தனக்கான முழு அங்கீகார‌த்தையும் பெற்றதேயில்லை என்பது தான் கொஞ்சம் விசித்திரமானது.
ஒரு விதத்தில் இது புரிந்துகொள்ளக்கூடியதே. சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர், கொல்கத்தா இளவரசர் கங்குலி, டெல்லி சூறாவளி சேவாக் என புகழ் வெளிச்சத்தை தங்கள் பக்கம் திருப்பி கொள்ளும் ஆற்றல் படைத்த சூரியன்கள் நிரம்பிய இந்திய அணியில், பல நேரங்களில் டிராவிட்டின் சாதனைகள் பிரகாசம் குறைந்துபோனது மறுக்க முடியாத உண்மை.
கடந்த 1996-ல் அவரும் கங்குலியும் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தனர். அந்தப் போட்டியில் டிராவிட் அபாரமாக விளையாடி, 95 ரன்கள் குவித்தார். ஆனால் அதே போட்டியில் நேர்த்தியாக‌ ஆடி சதம் அடித்த கங்குலி பற்றி தான் எல்லோரும் பேசினார்கள்.
தொடர்ந்து, டிராவிட் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியபோதும், சச்சினோ சேவாக்கோ புகழப்பட்ட அளவுக்கு அவர் பாராட்டப்பட்டதில்லை; கொண்டாடப்பட்டதில்லை.
ஒருவிதத்தில் டிராவிட்டின் நிதானமான ஆட்டமும் அமைதியான குணமும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒன்று... புகழ் மாலைகள் வந்து விழாத‌து கண்டு டிராவிட் மனம் புழுங்கியதுமில்லை; வேதனைப்பட்டதும் இல்லை! மாறாக, 'என் கடன் ரன் குவிப்பதே... அணியின் வெற்றிக்கு உறுதுணைபுரிவதே' என்பது போல தனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இதுவே அவரை சிறந்த டீம் மேனாக மாற்றியது.
ஆனால், இந்திய அணி சோதனைக்கு ஆளான போதெல்லாம் அவர் சுமைதாங்கியாக மாறி தனது ஆட்டம் பற்றி பேச வைத்தார்.
கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் லக்ஷ்மனோடு சேர்ந்து அவர் ஆடி சதம் அடித்து அந்த போட்டியையே தலைகீழாக மாற்றி, வெற்றிக்கு வழி வகுத்ததை யாரால் மறக்க முடியும். அதே போல பாகிஸ்தானின் ராவல்பிண்டியில அவர் அடித்த 270 ரன்களையும் மறந்துவிட முடியாது!
இதேபோல ஆஸ்திரேலிய மண்ணிலும் மேற்கிந்திய தீவுகளிலும் அவர் ஆடிய பல இன்னிங்க்ஸ்கள் கிரிக்கெட் காவியம் தான்.
தன்னிடம் அணி எதிர்பார்ப்பது என்ன என்பதை உணர்ந்து, அதற்கேற்ப ஆடிய தன்னலமற்ற வீரர் டிராவிட். புகழின் பின்னே அவர் ஓடியதும் இல்லை. சவால்களை கண்டு ஓடியதும் இல்லை.
"எப்போதுமே எல்லாவற்றையும் அணிக்கு தரும் வகையில் விளையாடுவதே எனது கிரிக்கெட் அணுகுமுறையாக இருந்துள்ளது," என்று டிராவிட் ஓய்வு முடிவை அறிவித்தபோது பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.
"சில நேரங்களில் தோல்வியை சந்தித்திருந்தாலும், ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்ததில்லை," என்றும் அவர் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.
நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள்.
டிராவிட்டின் ஆட்டத்திலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி.. டைமிங் கச்சிதமாக இருக்கும். கேப்டன் பதவி அவரை தேடிவந்தாலும், அவர் அதனை சில ஆண்டுகளில் ராஜினாமா செய்து விட்டார். எதிர்கால கேப்டனான டோனியை அடையாளம் காட்ட இது உதவியது. அதேபோல தான் இப்போது மூத்த வீர்ர்கள், இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் என்று பேசப்படும் நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஆனால், தனது ஆட்டத்தாலும் அணுகுமுறையாலும் இளம் வீரரகளுக்கான வழிகாட்டியாக விளங்குகிறார்!
இந்தியப் பெருஞ்சுவர் இன்று தனது ஓய்வை அறிவித்தபோது உதிர்த்தது, 'sad but proud' என்று.
எங்களுக்கும்தான் டிராவிட்!