சோனியா காந்தி - 100% அரசியல்வாதி

ஒர் அரசியல்வாதி என்ன தொழில் செய்தார் அல்லது செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரிந்தால்தான், அவருடைய சொத்து மதிப்பு, சென்ற தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் பல கோடியாக உயர்ந்திருப்பதற்கான காரணத்தை ஒரு குடிமகன் புரிந்துகொள்ள முடியும். எந்தத் தொழிலும் செய்யாமல், பதவிக்காக அரசு வழங்கும் சம்பளத்தில் மட்டுமே வாழ்க்கை நடத்திக்கொண்டு, அதேசமயம் சொகுசு கார், பங்களா, மகன் பெயரில் பல கோடி ரூபாய் ஷேர் என்பதெல்லாம் சாத்தியமில்லை.

அவ்வாறு தொழில் செய்ததாகக் கூறினாலும், அந்தத் தொழில் நிறுவனத்தின் பெயர் என்ன? அது எங்கெல்லாம் செயல்பட்டது? அதன் உற்பத்தி அல்லது விற்பனைப் பொருள் என்ன? என்பது தெரிந்தால்தான், அந்த நிறுவனம் உண்மையிலேயே செயல்பட்டதா அல்லது ஊழல் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் "லெட்டர்பேட்' நிறுவனமா என்பதை ஒரு குடிமகன் அறியமுடியும்.
இதை, எனது சொந்த விஷயம், மூன்றாவது நபர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஒரு கட்சியின் தலைவர் சொல்கிறார் என்றால், அவரைப் பற்றி நாம் என்னவென்று சொல்வது? அப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாரும் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திதான்.
சென்னையைச் சேர்ந்த வி. கோபாலகிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சோனியா காந்தி கடந்த 10 நிதியாண்டுகளில் வருமானவரித் தாக்கல் செய்த ஆவணங்களைக் கோரினார். முதலில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்முறையீடு செய்தபோது, வருமான வரித் துறையின் தலைமை பொதுத் தகவல் அலுவலர் இதில் சோனியாவின் கருத்தைக் கேட்டு, ஆர்டிஐ சட்டம் பிரிவு 2-ன் கீழ் சோனியா காந்திக்கு இது தொடர்பாக ஜனவரி 23-ம் தேதி கடிதம் எழுதினார்.
வருமான வரித் தாக்கல் விவரங்களை வெளியிடுவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் அளித்துள்ள பதில் இது:
""....பொதுவாழ்வில் வெளிப்படைத் தன்மை என்ற போர்வையில் (கேட்கப்படும்) இத்தகைய கேள்விகளுக்கு மூன்றாம் நபருக்குப் பதில் சொல்வதன் மூலம், தனிநபர் அந்தரங்கத்தில் மற்றவர்கள் தேவையின்றி நுழைவதாக ஆகிவிடும். வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட வருமானவரித் தாக்கல் தனிப்பட்டது, ரகசியமானது. வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 138-ன் படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது...''
அந்தரங்கம் புனிதமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வருமானத்தில் அந்தரங்கம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தனிநபருக்கே, மேற்சொன்ன சட்டத்தின்படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது என்று ஒவ்வொரு நபரும் சொல்வாரேயானால், என்ன ஆகும்? அரசு அலுவலர் தொடங்கி, அமைச்சர்கள் வரை அனைவரும், வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கு வரி செலுத்தத் தவறியவர்களாக மட்டுமே கருதப்படுவார்கள். அவர்கள் முறைகேடாக, லஞ்சத்தால் பதவியின் ஆதாயத்தால் பொருள் சம்பாதித்த குற்றவாளிகளாகக் கருத இடமில்லாமல் போய்விடும்.
பொது வாழ்க்கைக்கு வரும்போது, குறிப்பாக தேர்தலில் போட்டியிடும்போது, ஒரு வேட்பாளர் தனக்குள்ள சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு உருவாக்கப்பட்டதன் காரணமே, பொதுவாழ்க்கையில் வருபவரின் பொருளாதார வசதி என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்ளத்தான்.
சோனியா காந்தி தனிநபர் அல்ல. அவர் ஒரு தேசியக் கட்சியின் தலைவி. ஆண்டுதோறும் வருமான வரித் தாக்கல் செய்கின்றார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவரின் வருமான வரித் தாக்கல் விவரம் தெரிந்தால்தானே, அவர் வளர்ச்சி அவரது வருமானத்துக்குப் பொருந்துவதாக உள்ளதா, அவர் கூடுதல் வருமானத்துக்கு ஆதாரமாகக் காட்டும் நிறுவனங்கள், பங்குகள் எப்படிக் கிடைத்தன, பழையதா, புதிதா என்பதையெல்லாம் கணிக்க முடியும்.
நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏ-வும் தனது வருமானவரி, தன் குடும்ப ரத்த உறவுகளின் வருமான வரித் தாக்கல் விவரங்களை அவர்களாகவே ஆண்டுதோறும் வெளியிடும் நடைமுறையை அரசியல் சட்டப்படி கட்டாயமாக்குவதுதான் வெளிப்படைத் தன்மைக்கு வழிவகுக்கும்.
தனிநபர் சுதந்திரம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, பலரும் தவறுகள் செய்து வருவதால்தான் மக்களுக்குப் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்களாட்சித் தத்துவம் செயல்பட வேண்டுமானால் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இருந்தாக வேண்டும். அதேநேரத்தில் அரசியலில் ஈடுபட்டுப் பொது வாழ்க்கையை வரித்துக் கொள்பவர்கள் நேர்மையாளர்களாக இல்லாமல் போனால் அதன் விளைவு மக்களாட்சியையே தடம்புரளச் செய்துவிடும்.
வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்படும் கணக்குகள் வெளிப்படைத் தன்மையுடையதாக இருப்பதில் என்ன பிரச்னை? நியாயமாக நேர்மையாகச் சம்பாதித்த வருவாய்க்கு உரிய வரியைச் செலுத்துவதுதானே வருமான வரி. இந்தக் கணக்குகளை யார் வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம் என்கிற நிலைமை ஏற்படும்போதுதான், ஊழல்வாதிகள்,கள்ள மார்க்கெட்டில் தவறாகப் பணம் சம்பாதிப்பவர்கள், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் போன்றவர்களின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ளவும், சந்தேகம் ஏற்படும்போது விசாரணைக்கு வலியுறுத்தவும் முடியும்.
செல்போன் யுகத்தில் தனிமனித உரிமைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கும்போது, பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருவர் பொது வருமானம் பற்றிக் கேட்பதை தனிமனித உரிமை மீறல் என்று சொன்னால் எப்படி ஏற்பது? தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் மூடி மறைக்க ஆசைப்படுகிறார்கள். இவர்களெல்லாம் ஊழலை ஒழிக்கப் போவதாக உத்தரப் பிரதேசத்தில்போய் வாய்ப்பந்தல் போடுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது

வினை விதைக்கிறோம்

இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியின் தரம், பள்ளிகளின் நிலை, வசதி, மாணவர் சேர்க்கை போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இத்தகைய "கல்விக் கணக்கெடுப்பு ஆண்டறிக்கை - 2011' அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில் தமிழ்நாடு மகிழ்ச்சி கொள்ள இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வது 100 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர் பள்ளி வருகையும் 90 விழுக்காடுக்கு அதிகமாக உள்ளது. இது ஓர் ஆரோக்கியமான சூழல்.
அதேவேளையில், அரசும் பெற்றோரும் கவலைகொள்ளக்கூடிய இரண்டு விஷயங்களும் உள்ளன. முதலாவதாக, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32 விழுக்காடு மாணவர்களுக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்துள்ளது. இது 8-ம் வகுப்பில் சற்றே உயர்ந்து 66 விழுக்காடு மாணவர்கள் எளிய தமிழைப் படிக்க இயலுவோராக இருக்கின்றனர்.
இரண்டாவதாக, 5-ம் வகுப்பில் 45 விழுக்காடு மாணவர்களால் கழித்தல் கணக்கு மட்டுமே செய்ய முடியும். 14 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே கழித்தல், வகுத்தல் இரண்டையும் செய்ய இயலுகிறது. எட்டாம் வகுப்பில் இந்த நிலை மாறுகிறது. கழித்தல் மட்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 38 விழுக்காடாகவும், கழித்தல், வகுத்தல் இரண்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 45 விழுக்காடாகவும் உயருகிறது.
இந்த ஆய்வு ஏதோ அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் கருதிவிட வேண்டியதில்லை. தனியார் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் இந்த ஆய்வு. தனியார் பள்ளிகளில் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தால், சிறப்பாகக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தில்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், அங்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் 2-ம் வகுப்பு தமிழ்ப்பாட நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னபோது, அரசுப் பள்ளி மாணவர்களில் 68 விழுக்காடு மாணவர்கள் திணறினார்கள் என்றால், தனியார் பள்ளிகளில் கொஞ்சம் குறைவு- அதாவது 66 விழுக்காடு!
8-ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களில் 15 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றனர் என்றால், தனியார் பள்ளி மாணவர்கள் 25 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றார்கள். தனியார் பள்ளியில் படித்தாலும் நான்கில் ஒருவர் ட்யூஷன் படித்துதான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்றால், தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது கண்ட பலன் என்ன என்பது பெற்றோர் சிந்திக்க வேண்டிய விஷயம்.
இந்த ஆய்வில் கிடைக்கும் இன்னொரு தகவல், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் 92 விழுக்காட்டினரின் வீட்டு மொழி, தமிழ் மொழியாக இருக்கின்றது. அப்படி இருந்தும், இவர்களால் தமிழைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், கற்பித்தல் முறையில்தான் தவறு இருக்கிறது என்பது உறுதியாகின்றது.
ஆங்கில மொழியில் கிராமப்புறப் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதாலும், தனியார் பள்ளிகளில்தான் ஆங்கில அறிவு சிறப்பாகக் கிடைக்கும் என்பதாலும்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், தாய்மொழியான தமிழையே இந்தத் தனியார் பள்ளி மாணவர்களால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என்றால், இவர்களால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவும், படிக்கவும் எழுதவும் எவ்வாறு முடியும்?
ஒரு மாணவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்காமலேயே கற்றுக்கொள்ளக்கூடிய, மிக இயல்பான கற்றல் சூழல் இப்போது இருக்கின்றது. இன்றைய தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே கிடையாது என்ற நிலைமை உள்ளது. தொலைக்காட்சியில் இடம்பெறும் பெயர்கள், டிவி விளம்பரங்களைக் குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க முடியும். ஊர் முழுவதும் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைகளின் விளம்பரங்கள் இரவு நேரத்தில்கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் மின்னுகின்றன. இதில் நகரம், கிராமம் என்ற எல்லைக்கோடுகள் மறைந்து வருகின்றன. பிறகும் ஏன் மாணவர்களால் எளிய தமிழைப் படிக்கவும், சிறிய கணக்குகளைப் பிழையின்றி கணிக்கவும் முடியவில்லை?
இந்த ஆய்வு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 26,000 மாணவர்களிடம் நடத்தப்பட்டது என்றாலும், "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற அளவில் இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, மதிப்பீடு என்கின்ற வகையில் தமிழக அரசு மிகத் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும்.
பள்ளி வாராக் குழந்தைகள் இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம். ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவதும்கூட நன்றாக இருக்கின்றது. ஆனால், கற்றல் மட்டும் இல்லை. கல்வி தரமானதாக இல்லை என்றால், அதற்கு ஒரே காரணம் கல்வித்துறையின் கற்பித்தல் முறைதான் என்பது வெளிப்படை.
நமது கல்வி முறையில் இருக்கும் அடிப்படைக் குறைபாடு, ஆசிரியர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் அரை வயிற்றுக் கஞ்சியுடன் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு இன்று அரசு ஊழியர்களாக ஊதியம் பெறும் ஆசிரியர்களிடம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆசிரியர் பணியை சேவையாகக் கருதாமல் ஒரு தொழிலாகக் கருதுவதுதான். மேலும், சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த உன்னதமான இடமும் மரியாதையும் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.
கல்வித் துறையில் அரசியல் தலையீடு, பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கல்வி என்கிற பெற்றோரின் தவறான அணுகுமுறை, ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்கள்மீது சமுதாயத்தில், குறிப்பாக, பெற்றோரிடத்தில் காணப்படும் மரியாதையின்மை போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
காரணங்கள் தெரிகிறது. அந்தத் தவறுகளைத் திருத்திக் கல்வி முறையை மேம்படுத்தும் எண்ணம் இல்லை என்றால் அது யார் தவறு? நாளைய தலைமுறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருப்பது நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருப்பது என்பதை மறந்துவிட வேண்டாம்!




ருத்ரம்

* மலைப்பிரதேசங்களில் வளரும் ஒருவகையான மரத்தின் விதைதான் ருத்ராட்சம். இதற்கு தனித்துவமான சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே, இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.

* ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால், அதை சுற்றி உண்டாகும் ஒளி சக்தி வட்டம் தூய்மையடைகிறது. இந்த ஒளிவட்டம் அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலையை பொறுத்து அமையும்.
* நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஆனால், ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும். சக்திவட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும்.
* அபூர்வ ஆற்றல் கொண்ட ருத்ராட்சம் பலவகைப்படும். இருமுகம் கொண்ட ருத்ராட்சத்திலிருந்து 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் வரை பயன்பாட்டில் உள்ளது.
* ஒருமுகம் கொண்ட ஏகமுகி ருத்ராட்சம் மிகவும் சக்தி வாய்ந்தது. (சரியான வழிகாட்டுதல் இன்றி இதை அணிவது நல்லதல்ல). துவிமுகி என்னும் இருமுகம் கொண்ட ருத்ராட்சம் பொருள் வளத்தை தரும்.
* ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும். ஆண்பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்தத்தை சீராக்கி,மன அமைதியையும், சுறுசுறுப்பையும் தரும். ஆறுமுகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம்

'தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் - வரலாற்று நாயகர்!

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் 158-ஆவது பிறந்தநாளான இன்று (19/02/2012) தமிழ்த்தாத்தாவை வணங்கி அவரது வாழ்க்கை வரலாற்றுப் பதிவை சமர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!



நம்மில் பலர் இருமொழி ஆற்றலைப் பெற்றிருந்தாலும் நம் தாய்மொழியான தமிழ்மொழியில் பேசிக்கொள்ளும் போது ஏற்படும் உணர்வு ஆங்கிலத்தில் பேசும்போது ஏற்படுவதில்லை. தாய்மொழியில் பேசிக்கொள்ளும் சுகமே அலாதியான ஒன்று. அது எந்த மொழிப் பிரிவினருக்கும் பொருந்தும். நமது தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதை நினைத்து நாம் நியாயமாக மகிழலாம். ஆனால் மகிழ்வதோடு நின்றுவிட்டால் நாம் நன்றி மறந்தவர்களாவோம். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்ற ஒரு உண்மையே நமது மொழி 'செம்மொழி' தகுதி பெறுவதற்கு போதும் என்றாலும், அதனை அதிகாரப் பூர்வமாக பெற அது பல்வேறு இன்னல்களை கடக்க வேண்டியிருந்தது.
பல மேடு பள்ளங்களை கடந்து இன்று நமது மொழி இளமைக் குன்றாமல் இருப்பதற்கான பல காரணங்களுள் ஒன்று நமது மொழியைக் காப்பாற்றுவதற்காக அரும்பாடுபட்ட தமிழறிஞர்கள். பலரை நாம் நினைவுகூற வேண்டுமென்றாலும் ஒருவர் தனிப்பட்டு நிற்கிறார். அவர்தான் தமிழ் முனிவர் என்றும், தமிழ்த்தாத்தா என்றும் தமிழுலகம் பெருமையுடன் நினைவில் வைத்திருக்கும் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். உ.வே.சா என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார் உ.வே.சா. தந்தை பெயர் வேங்கட சுப்பையர், தாயார் சரஸ்வதி அம்மாள். சிறுவயதில் அவர் திண்ணைப் பள்ளியில் ஏடு எழுத்தாணியும் கொண்டு பயின்றார். தமிழில் புலமைப் பெற்றிருந்த தந்தையிடமிருந்தே ஆரம்பத்தில் தமிழ் கற்றார் உ.வெ.சா. நிகண்டு, சதகம் போன்ற பழமையான நூல்களை உ.வே.சா அவர்களுக்கு கற்பித்தார் தந்தை.
பள்ளிப்படிப்பை முடித்ததும் தமிழின் மீதிருந்த ஆழமான காதலால் தமிழில் புலமை பெற விரும்பிட உ.வெ.சா பல்வேறு தமிழறிஞர்களிடம் தமிழ் கற்றார். தமது 17-ஆவது வயதில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராக சேர்ந்தார். அவரிடம் ஆறு ஆண்டுகள் இருந்து ஆழமான தமிழ் அறிவைப் பெற்றார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு சுப்ரமணிய தேசிகர் என்பவரிடம் மாணவராக சேர்ந்தார். இப்படி பல அறிஞர்களிடம் பாடம் கற்றறிந்ததால் உ.வே.சா ஒரு தலைசிறந்த தமிழறிஞர் ஆனார். அப்போதெல்லாம் படிப்பதற்கு புத்தகங்கள் இல்லை. பழமையான ஓலைச் சுவடிகள்தான் இருந்தன. அவை அச்சடிக்கப்படாமல் கைகளால் எழுதப்பட்டவை என்பதால் அவற்றை படித்து உணர்வதற்கே தனித் திறமை தேவைப்பட்டது. அதை படிப்பதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களை பிழையில்லாமல் எழுத்தாணி கொண்டு ஓலைகளில் எழுதுவார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

25-ஆவது வயதில் உ.வே.சாவுக்கு கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அவர் கற்பித்த முறை மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் பல மாணவர்கள் தமிழை நேசிக்கத் தொடங்கினர். 1903-ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இணைந்தார். அவர் சேர்வதற்கு முன் மாணவர்களால் மதிக்கப்படாத இருந்த தமிழ்த் துறைக்கு உ.வே.சா சேர்ந்த பிறகு புது மரியாதை கிடைத்தது. பற்றோடும், பாசத்தோடும் பாடம் கற்பித்த அவரது அணுகுமுறையால் மாணவர்கள் தமிழை மருந்தாக பார்க்காமல் விருந்தாக பார்க்கத் தொடங்கினர். 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் கற்பித்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார் உ.வே.சா.
அக்காலத்தில் பல தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடி வடிவில்தான் இருந்தன. அவற்றை படியெடுப்பது சிரமம் என்பதால் ஒவ்வொரு இலக்கியத்திலும் ஒரு படிதான் இருக்கும். பல ஓலைச் சுவடிகள் செல்லரித்துப் போயிருந்தன. அவற்றையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அச்சாக வெளியிட்டாலொழிய அவற்றை தமிழுலகம் இழந்து விடும் என்று கலங்கினார் உ.வே.சா. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை முறைப்படுத்தி பதிப்பிக்கும் அரிய பணியை தம் தலையாய பணியாக அவர் மேற்கொண்டார். அதற்காக அவர் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒருமுறை திருக்குறள் உரையுடன் கூடிய நூல் ஒருவரிடம் இருப்பதை அறிந்து அதை பெறுவதற்காக பல மைல்கள் நடந்து சென்றுள்ளார்.

கிடைத்தற்கரிய ஏடுகளின் அருமை தெரியாமல் அவை எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வந்தன என்பதை "என் சரித்திரம்" என்ற புத்தகத்தில் அவர் ஆதங்கத்தோடு விவரிக்கிறார். வரகுண பாண்டியர் வைத்திருந்த சில ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவற்றைப் பற்றி விசாரித்தார் உ.வே.சா. குப்பை கூளங்களாக கிடந்த சுவடிகளை என்ன செய்வதென்று தெரியாததால் ஆகம சாத்திரத்தில் சொல்லியிருந்தபடி செய்துவிட்டோம் என்று கூறினார் அறங்காவலர் ஒருவர். என்ன செய்தீர்கள் என்று உ.வே.சா கேட்க பழைய ஏடுகளையெல்லாம் கண்ட இடத்துல போடக்கூடாதாம். ஏடுகளையெல்லாம் நெய்யில் நனைத்து ஒரு பெரிய குழி வெட்டி அக்னி வளர்த்து அதுலதான் போட வேண்டுமாம். அந்த ஏடுகளையெல்லாம் அப்படிதான் செஞ்சோம் என்று கூறினார். அதிர்ந்து போய் உள்ளம் பதறினார் உ.வே.சா. இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படி சொன்னால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் எரிக்க வேண்டும். என்று கொதித்துப் போனார் உ.வே.சா.
மற்றொரு இடத்தில் பழைய சுவடிகளை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த பதில் இதுதான்... "ஐயா எல்லாச் சுவடிகளும் நல்லா மக்கி போச்சு, பல சுவடி ஒடைஞ்சு போச்சு அதுல என்ன எழுதியிருக்குன்னு எங்களுக்கு படிக்க தெரில...சும்மா வீணா இடத்தை அடைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்லி எல்லா சுவடிகளையும் ஒரு கோணிப்பையில் கட்டி ஆடி பதினெட்டுன்னைக்கு ஆத்தோட விட்டுட்டேன்"... என்று கூறினாராம். இதுபோன்ற மூடச் செயல்களால் எத்தனை கருவூலங்கள் கரைந்தும், செந்தீயில் பொசுங்கியும் போயிருக்கும் என்று எண்ணி உயிர் உருக கலங்கினார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இவற்றையெல்லாம் கடந்துதான் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற நூலை 1887-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். ஒரு நல்ல சிறந்த இலக்கியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டோம் என்று அகமகிழ்ந்தார்
அதன் பிறகு பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை என பல அரிய நூல்களையும், ஓலைச்சுவடியிலிருந்து மீட்டு புத்தகங்களாக பதிப்பித்தார். அவரின் தமிழ்த்தொண்டை பாராட்டி 1906-ஆம் ஆண்டு 'மஹாமஹோபாத்யாய' என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. 1932-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. தம் வாழ்நாள் முழுவதும் தமிழையே சுவாசித்த தமிழ்த்தாத்தாவின் உயிர் மூச்சு 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவரது 87-ஆவது அகவையில் நின்றது. அந்தக்கணம் இனிமேல் தம்மை யார் காப்பாற்றப்போகிறார் என்று எண்ணி தமிழன்னையும் கலங்கியிருக்க வேண்டும்.

தமிழன்னைக்கு அணி சேர்த்தவர்கள் அணியில் உ.வே.சா என்ற தமிழ்த்தாத்தாவுக்கு நிலையான இடம் உண்டு. அவரது அரும் முயற்சி இல்லாதிருந்தால் பல தமிழ்க் கருவூலங்களை காலம் கரைத்திருக்கும். அந்த தனி மனிதனின் முயற்சியால் தமிழன்னை மெருகேறியிருப்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் செம்மொழியானதற்கு அவரைப் போன்றவர்களுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும். நமது மொழியின் முக்கிய கூறுகள் சிதைந்து போவதை தடுத்து நிறுத்த அவருக்கு உறுதுணையாய் இருந்தவை சிந்தனைத் தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், விடாமுயற்சியுடன் எத்தனை இன்னல்கள் வந்தாலும் எண்ணியதை முடிக்கும் துணிவும்தான். அதே பண்புகள் நமக்கும் இருந்தால் உ.வே.சா ஐயாவுக்கு தமிழ் என்ற வானம் வசப்பட்டதைப்போல நமக்கு நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.
(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

Source : http://urssimbu.blogspot.in/2012/02/dr-u-ve-saminaatha-iyer-historical.html

பழைய சோறு

பழைய சோறு- அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம்.... அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். அப்படிதான் எங்கள் வீட்டில் ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீதம் இருந்த சாத்திற்க்கு தண்ணிர் உற்றி வைத்து விட்டோம் , சிறிது நேரத்தில் ஒருவர் தனக்கு பசிகிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போதான் தண்ணிர் ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் என கூற, இப்போதான் ஊற்றினேன் பழைய சோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார்.

அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறயில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிற்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சால் பேன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பண்றி காய்ச்சல் உட்பட.
காலை உணவாக பழைய சாத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தன்னிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.
அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? (என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு) பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள் கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதற்க்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்.

ஒரு நேர்மையான் நீதிபதியின் கதை!

''லட்சுமண ரேகை என்பது அப்படி ஒன்றும் புனிதமானது அல்ல. லட்சுமண ரேகையை சீதை கடந்திருக்கா விட்டால், ராவண வதம் நடந்து இருக்காது!''

- கடந்த ஆண்டு அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் விமர்சனங்களைச் சந்தித்த மன்மோகன் சிங் அரசு, ''உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையைத் தாண்டக் கூடாது!'' என்று சொன்னபோது, அதற்கு அசோக் குமார் கங்குலி கொடுத்த பதிலடி இது!
உச்ச நீதிமன்ற நீதிபதி பணியில் இருந்து ஓய்வுபெற்ற அன்று கிட்டத்தட்ட 'அலைக்கற்றை ராவண வத’த்தை முடித்துவிட்டுதான் சென்று இருக்கிறார் கங்குலி. ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 122 அலைக்கற்றை உரிமங்களையும் ரத்துசெய்து உத்தரவிட்டதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய ஊழலைத் துவம்சமாக்கியிருக்கிறார் கங்குலி.


''இந்த ஒதுக்கீடு, முழுக்க முழுக்க அரசியல் சட்டத்துக்கும் பொது நலனுக்கும் விரோதமானது. தேசத்தின் அரிய வளங்கள் பொதுமக்கள் நலனுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, சில பெருநிறுவனங்களுக்கு அல்ல'' என்று நீதிபதி ஜி.எஸ்.சிங்வியுடன் இணைந்து கங்குலி அளித்து உள்ள தீர்ப்பு, ''அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழலே நடக்கவில்லை. இந்த ஒதுக்கீட்டில் அரசுக்கு ஒரு பைசா இழப்பு இல்லை!'' என்று கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் பேசிவந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் ஆட்சியாளர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்டம்போடும் பெருநிறுவனங்களுக்கும் முகத்தில் விழுந்து இருக்கும் அறை
உச்ச நீதிமன்றத்துக்கு 2010, அக்டோபரில் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான முதல் வழக்கு வந்தபோது, அது நாட்டின் மிகப் பெரிய ஊழல் என்பதோ, ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தும் என்பதோ பலருக்கும் தெரியாதது. ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து இருந்த நிலையில், இந்த வழக்கு எவராலுமே பொருட்படுத்தப்படவில்லை. கங்குலியும் சிங்வியும் இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு, மத்திய அரசுக்கும் ராசாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட பின்தான் இந்த ஊழலின் வீரியம் உறைத்தது. ஒருகட்டத்தில், எதற்குமே அசைந்து கொடுக்கா மல் விசாரணை அமைப்புகளை முடக்கிப் போட்டு இருந்த மன்மோகன் அரசைப் பார்த்து, ''அரசு இயங்குகிறதா, அந்த அமைச்சர் இன்னும் பதவியில் நீடிக்கிறாரே... அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று விளாசித் தள்ளினார் கங்குலி. ராசா பதவி விலக நேர்ந்ததும் சிறைக்குச் செல்ல நேர்ந்ததும் அதற்குப் பின்தான்!

இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் சிங்வியுடன் சேர்ந்து கங்குலி அளித்த ஒவ்வோர் உத்தரவும் முக்கியமானது. குறிப்பாக, ஆ.ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கேட்ட சுப்பிரமணியன் சுவாமியை இழுத்தடித்த பிரதமர் அலுவலகத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ஜனவரி 31-ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் - ஊழலுக்கு எதிரான - முக்கியமானத் தீர்ப்புகளில் ஒன்று. ''பொதுப் பணியில் உள்ளவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் விஷயத்தில் ஒரு காலவரையறை வேண் டும். எந்தப் புகார்கள் தொடர்பாக அனுமதி கேட்டாலும், அதிகபட்சம் நான்கு மாதங்களுக்குள் அரசு அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அளிக்கப்படாவிட்டால், அரசு அனுமதி கொடுத்துவிட்டதாகவே கருதப்படும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வது என்பது மக்களின் அடிப்படை உரிமை. இதில் அரசு தாமதம் செய்வதை ஏற்கவே முடியாது'' என்றது அந்தத் தீர்ப்பு.
அலைக்கற்றை ஊழல் வழக்கு என்று இல்லை. பல தருணங்களில் அதிரடியான கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார் கங்குலி. ஒருமுறை தொலைபேசி ஒட்டுக்கேட்புத் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, அரசு வழக்கறிஞரைப் பார்த்துக் கேட்டார்: ''எந்த அரசுமே வலுவான நீதித் துறையை விரும்புவது இல்லை, அப்படித்தானே?''
சில மாதங்களுக்கு முன் மரண தண்டனை தொடர்பான ஒரு கருத்தரங்கில் கங்குலி தெரிவித்த கருத்துகள் பலரை ஆச்சர்யத்தில் உறையவைத்தவை. ''நம் நாட்டில் அரிதினும் அரிதான வழக்குகளிலேயே மரண தண்டனை வழங்கப்படுவதாகக் கூறிக்கொள்கிறோம். ஆனால், இந்த 'அரிதினும் அரிதான’ என்பதற்கு என்ன வரையறை? 'அரிதினும் அரிதான’ என்பது குற்றத்தைப் பொறுத்ததா? காலத்தைப் பொறுத்ததா? நீதிபதிகளைப் பொறுத்ததா? நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் வாழ்வதற்கான உரிமையை அளிக்கிறது. ஆனால், மரண தண்டனையோ அதைக் கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டத்தின்படிதான் வழங்கப்படுகிறது என்றாலும், மரண தண்டனைக் காட்டுமிராண்டித்தன மானது. ஜனநாயக விரோதமானது. பொறுப்பற்றது'' என்றார் கங்குலி.
அலைக்கற்றை வழக்கில் ''நாட்டின் அரிய வளங்களை தங்களுடைய சுயவிருப்பங்களின் அடிப்படையிலோ, சட்டத்துக்குப் புறம்பாகவோ ஒதுக்கீடு செய்ய எவருக்கும் உரிமை இல்லை. இத்தகைய ஒதுக்கீடுகள் அரசுக்கு நஷ்டம் விளைவிக் கும் வகையிலோ, தனிநபர்கள் ஆதாயம் அடையும் வகையிலோ, திருட்டுக்குத் துணைபோகும் வகையிலோ இருக்கக் கூடாது என்பதை நீதி வழங்குவதற்கு இணையானதாக அரசு கொள்ளவேண்டும்'' என்று அவர் பிறப்பித்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு அலைக்கற்றைக்கு மட்டுமல்ல... எரிவாயு, கனிமச் சுரங்கங்கள் என இனி எந்த ஓர் இயற்கை வளத்தை ஒதுக்கீடு செய்யும்போதும் அரசு எப்படிப்பட்ட கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு வெளிப்படையான வழி முறையைக் காட்டியிருக்கிறது.

பணி ஓய்வுபெறும் நாள் அன்று பிரிவு உபசார விழாவில், ''இந்திய நீதிமன்றங்களுக்கு ஒரு மனிதன் கருவாவதில் தொடங்கி அவன் இறுதிச் சடங்கு வரை எல்லாப் பிரச்னைகளும் வருகின்றன. நாங்கள் தீர்க்கும் பல பிரச்னைகள் இந்த அரசாங்கம் தீர்க்க வேண்டிய - ஆனால் - தீர்க்க விரும்பாத பிரச்னைகள்'' என்று பேசிய கங்குலிக்குத் தன்னுடைய பணிகள்குறித்து பெரிய பெருமிதங்கள் இல்லை. நல்ல கிரிக்கெட் ரசிகரான அவர், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் க்ராம்டன் எழுதிய 'எண்ட் ஆஃப் அன் இன்னிங்ஸ்’ நூலை மேற்கோள் காட்டிப் பேசினார்: ''ஒரு நீதிபதியாக என்னுடைய இன்னிங்ஸ் முடிந்துவிட்டது. நான் எப்படி ஆடியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எல்லாத் தருணங்களிலும் நேரான (நேர்மையான) பேட்டைக் கொண்டே ஆடினேன். நான் எப்படி ஆடினேன் என்பதைச் சொல்ல வேண்டிய நீதிபதிகள் இனி நீங்கள்தான்!''
நீங்கள் ஆடிய ஆட்டம் உங்கள் விளையாட்டையே கௌரவப்படுத்தி இருக்கிறது கங்குலி!


- ஆனந்த விகடன்

சாமி :நீதி நிமிர்ந்தது

இந்தியக் குடியரசு எதிர்கொள்ளும் மிகப் பெரிய பின்னடைவு, நமது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல் இருப்பதுதான். கண்கொத்திப் பாம்புகளாக இருந்து ஆட்சியில் இருக்கும் தவறுகளை அவர்கள் துணிவுடன் சுட்டிக் காட்டவும் தட்டிக் கேட்கவும் தலைப்பட்டாலே, இந்தியாவில் நல்லாட்சி நிலைபெற்றுவிடும். அவர்கள் தங்களது கடமையைச் சரிவர நிறைவேற்றாத நிலையில் நீதிமன்றங்களாவது தலையிட்டு நிலைமை வரம்பு மீறிவிடாமல் பாதுகாக்கின்றனவே என்பது சற்று ஆறுதல்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வியும், ஏ.கே. கங்குலியும் சுப்பிரமணியன் சுவாமியின் தனிநபர் வழக்கில் வழங்கி இருக்கும் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மிகப்பெரிய பலத்தை வழங்கி இருக்கிறது. இரண்டு நீதிபதிகளுமே ஒத்த கருத்தினராக வெளியிட்டிருக்கும் தீர்ப்பின்படி இனிமேல் தவறிழைக்கும் அரசுப் பணியாளர்கள் - அதிகாரிகளோ, அமைச்சர்களோ யார் எந்த அரசுப் பதவி வகித்தாலும் - மீதான வழக்குகளில் அனுமதி வழங்குவதற்குக் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 19வது பிரிவின்படி அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் - அமைச்சரோ, அதிகாரியோ, வாரியத் தலைவர்களோ யாராக இருந்தாலும் - மீதான குற்றச்சாட்டை அரசின் அனுமதி பெறாமல் விசாரிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை இல்லை. அதேபோல, குற்றவியல் நடைமுறை விதிகளின் 197வது பிரிவின்படி முன்அனுமதி பெறாமல் ஒரு அரசுப் பணியாளரைத் தண்டிக்கவும் முடியாது.
அரசுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர் நேர்மையாகப் பணியாற்றுவது தடுக்கப்படக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்டவைதான் இந்த இரண்டு சட்டப் பிரிவுகளும். ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறைகளைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சட்டத்தின் கரங்கள் தங்களைத் தீண்டிவிடாமல் அரசுப் பணியாளர்கள், குறிப்பாக உயர் அதிகாரிகளும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களும் குற்றங்களை இழைத்துவிட்டுத் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
தனிநபரான சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையான அன்றைய மத்தியத் தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்
ஆ. ராசாவின் மீது வழக்குத் தொடர்வதற்கான அனுமதியை அங்கீகரித்திருப்பதன் மூலம், இந்தியக் குடியரசின் எந்தவொரு குடிமகனும் ஊழலிலும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடும் அரசுப் பணியாளர் மீது வழக்குத் தொடுப்பதில் இருக்கும் மிகப்பெரிய தடையை உச்ச நீதிமன்றம் உடைத்தெறிந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, ஊழல்வாதியான அரசு ஊழியருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கேட்டு விண்ணப்பித்த நான்கு மாதங்களுக்குள், பதிலளிக்கப்படாவிட்டால், அனுமதி வழங்கப்பட்டதாகப் பொருள் கொள்ள வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்திவிட்டது.
மூன்று மாதத்திற்குள் வழக்குத் தொடர்வதற்கான அனுமதிக் கோரிக்கைக்கு பதிலளித்தாக வேண்டும். தேவைப்பட்டால், தலைமை அரசு வழக்குரைஞரின் பரிந்துரைக்காகக் கூடுதலாக ஒரு மாத அவகாசம் கோரலாம். அதற்கு மேல் பதிலளிப்பதில் தாமதம் இருக்கக் கூடாது என்பது இந்தியக் குடிமகனுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டுப் பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி நவம்பர் 2008ல் கடிதம் எழுதினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்தப் பிரச்னையை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்து வருவதால் இப்போது அனுமதி வழங்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் பதிலளித்து விட்டது. தொடர்ந்து நீதிமன்றப் படியேறி இப்போது ஒரு மிகப்பெரிய வெற்றியை இந்தியக் குடிமகனுக்குப் பெற்றுத் தந்திருக்கும் சுப்பிரமணியன் சுவாமியைப் பாராட்ட வேண்டும்.
""சுவாமியின் கோரிக்கைக்கு உடனடியாக அனுமதி அளித்திருந்தால் வழக்குத் தொடர்வதில் காலவிரயம் தடுக்கப்பட்டிருக்கும்'' என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தெரிவித்திருக்கிறார். ""இதுபோன்ற காலதாமதங்கள் வழக்கின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கின்றன என்பது ஒருபுறம். இன்னொரு புறம், தங்களுக்குச் செய்திருக்கின்ற அல்லது செய்யப் போகின்ற உதவிகளுக்காகத்தான் அனுமதி வழங்கத் தேவையில்லாத காலதாமதத்தை ஏற்படுத்துகிறார்களோ என்கிற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரும் உயர் பதவி வகிப்பவர்களும் (ஆட்சியாளர்களும்) குற்றத்தில் கூட்டாளிகளோ என்கிற சந்தேகத்துக்குக் காலதாமதம் இடமளிக்கிறது'' என்று தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார் ஏ.கே. கங்குலி.
ஒரு அரசுப் பணியாளர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்குத் தொடுப்பதற்கு அனுமதி கோரப்பட்டால், அந்தக் குற்றச்சாட்டில் வலு இருக்கிறதா என்பதைப் பார்ப்பது மட்டுமே அனுமதி அளிப்பதற்குத் தேவையான காரணமாக இருக்க முடியுமே தவிர, குற்றச்சாட்டின் மீது தீவிரப் புலன்விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்குவது அரசின் வேலை அல்ல. அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.
இந்தியாவில் நடக்கும் பல ஊழல்கள் மேலதிகாரிகள், அமைச்சர்கள், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் போன்றவர்களின் ஆசியுடனும், ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. எந்தவொரு குற்றச்சாட்டு எழுந்தாலும் அனுமதி அளிக்காமல் காலதாமதம் செய்யப்பட்டு குற்றச்சாட்டின் தீவிரம் குறைக்கப்படுகிறது அல்லது குற்றச்சாட்டே மறக்கப்பட்டு விடுகிறது. இனிமேல் அதற்கான வாய்ப்பை இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அடைத்துவிட்டது.
சுப்பிரமணியன் சுவாமி மீது பல விமர்சனங்கள் எழுப்பப்படலாம். ஆனால், ஒரு தனி மனிதரின் முயற்சியால்தான் பல ஊழல்வாதிகள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அதேபோல, பதவி ஓய்வுபெறும் நாளில் இந்தியக் குடியரசுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி இருக்கும் நீதிபதி அசோக்குமார் கங்குலியையும் நாம் நன்றி கூறிப் பாராட்ட வேண்டும்.

Thanks :