அரசின் முகத்தில் கரி

அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாத நிலைமையில், இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு கிளம்பியிருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று சொன்ன அதே தலைமை தணிக்கைக் குழுதான் இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.10.67 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

இந்த அறிக்கை இன்னும் முறைப்படி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனாலும், இந்தக் கூட்டத்தொடரில் நிச்சயமாக தாக்கல் செய்யப்படவுள்ள அறிக்கை என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த அறிக்கையின் உள்ளடக்கம் எப்படியோ பத்திரிகைகளில் வெளியாகி, தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளிதுமளிபட்டுக்கொண்டிருக்கின்றன.
தலைமை பொதுத் தணிக்கைக் குழு குறிப்பிட்டுள்ள குறைபாடு இதுதான்: ஏலத்தின் மூலமாக நிலக்கரி சுரங்கம் வெட்டும் நிலப்பரப்பை ஒதுக்கீடு செய்யாததால், 2004-முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.10.67 லட்சம் கோடி. 155 நிலக்கரிச் சுரங்க வயல் சுமார் 100 தனியார் நிறுவனங்களுக்கு எந்தவித முன்யோசனையும் இல்லாமல், அன்றைய நிலக்கரியின் விலையை கருத்தில் கொள்ளாமல், குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அரசுக்கு இந்த பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக, மதிய வேளையிலேயே தலைமை பொதுக்கணக்குத் துறை இதற்கான விளக்கம் அளித்து, அது பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. "இது வெறும் வரைவு அறிக்கைதான். இறுதி அறிக்கை இன்னும் தயாராகவில்லை' என்று விளக்கமளித்திருக்கிறது. பிரதமரின் பொறுப்பில்தான் நிலக்கரி நிர்வாகம் உள்ளது என்றாலும் இதுதொடர்பாக அவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கமளித்தார். இந்த வரைவு அறிக்கை அமைச்சர்களின் பார்வைக்கு வந்து அவர்களது விளக்கத்தைப் பெற்ற பிறகுதான் இறுதி அறிக்கை தருவார்கள் என்று கூறியுள்ளார்.
இது வரைவு அறிக்கையாகவே இருந்தாலும்கூட, இத்தகைய ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சில லட்சம் கோடி குறையலாமே தவிர, ஏலம் விடாமல் ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு இழப்பு ஏதுமே கிடையாது என்று நிச்சயமாகச் சொல்லிவிடப்போவதில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த ஒதுக்கீட்டுக்கு அவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும், பொறுப்பேற்கவும் வேண்டும்.
தலைமை கணக்குத்தணிக்கைக் குழு இந்த இழப்பைக் கணக்கிடும்போது, விலை உயரும் வாய்ப்புகளைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல் அன்றைய தேதியில் இருந்த நிலக்கரி விலையை மட்டுமே கணக்கில்கொண்டு இழப்பை மதிப்பிட்டாலும் ரூ.6.31 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று கூறுகிறது.
இந்திய மின் உற்பத்தியில் 55% நிலக்கரியைச் சார்ந்துள்ளது. இந்திய நிலக்கரியில் எரிசக்தியைக் காட்டிலும் சாம்பல் அதிகமாக இருப்பதால், இந்தோனேசியாவிலிருந்து நம் தேவையில் 30% நிலக்கரியை இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் உள்ள அனல் மின்நிலையங்களில் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக, இந்தோனேசிய நிலக்கரி, இந்திய நிலக்கரி இரண்டையும் கலந்து எரிபொருளாக்கி, சமாளிக்கிறார்கள்.
இந்நிலையில் நிலக்கரி அதன் எரிசக்தி அளவைப் பொருத்து 17 வகைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு தரமான, எரிதிறன் அதிகமுள்ள நிலக்கரி விலை மேலதிகமாகக் கூடிவிட்டது. நிலக்கரியைப் பொருத்தவரை தேவை பெருகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், மிகப்பெரும் அளவுக்கு நிலக்கரி வெட்டி எடுக்கவும், அதற்கான விலையைக் குறைவாக நிர்ணயிக்கவும், ஏலம் இல்லாமல் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசுக்கு எப்படி மனம் வந்தது?
நிலக்கரி விலை உயர்வைச் சமாளிக்க முடியாமல் பல அனல் மின்நிலையங்கள் தங்கள் மின் உற்பத்தி அளவைக் குறைத்துக்கொண்டுள்ளன. பல அனல் மின்நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் இதற்காகக் கடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்தி வைத்துள்ளன.
மின்கட்டண உயர்வுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று- நிலக்கரி விலை உயர்வு. இந்தோனேசிய நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர்கள். இந்த நிலையில், இந்திய நிலக்கரியில் எரிதிறனைக் காட்டிலும் சாம்பல் அதிகமாக இருந்தாலும்கூட, அதன் தேவை மிகமிக இன்றியமையாதது. அப்படியிருக்கும்போது இத்தனைப் பெரும் பரப்பை தனியாருக்கு மத்திய அரசு தனது விருப்பப்படி ஒதுக்கீடு செய்யும் என்றால், இதனை என்னவென்று சொல்வது?
ஒதுக்கீடு செய்யப்பட்ட 155 நிலக்கரிச் சுரங்க வயல் களில் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்கூட இந்திய நிலக்கரி நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. தனியார்தான் இந்த தேசத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு தனியார் மின் உற்பத்தியாளர் கூறுகிறார் என்றால் இந்தக் கூற்று நியாயமானதுதானா?
அரசுத்துறை நிறுவனங்கள் நிர்வாகச் சீர்கேடுகளாலும், தொழிற்சங்கங்களின் ஆதரவில் தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் மெத்தனத்தாலும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பது உண்மைதான். அதற்குத் தீர்வு நிர்வாகத்தைச் சீர்படுத்துவதும், தொழிற்சங்கங்களின் உதவியுடன் உற்பத்தித் திறனை அதிகரிப்பதும்தானே தவிர, கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து அவர்கள் கொள்ளை லாபம் அடைய வழிகோலுவதல்ல. மக்களை வஞ்சித்து, தேசத்தின் கனிம வளங்களைச் சூறையாட அனுமதிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தேவையில்லை.
தோண்டத் தோண்ட ஊழல்... முதலில் காற்றில் ஊழல். இப்போது கரியில் ஊழல். நமது ஊழ்வினை, வேறென்ன

Source : தலையங்கம்: அரசின் முகத்தில் கரி!

ஏப்ரல் முதல் உயரும் கைடுலைன் மதிப்பு

கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட சொத்துகளின் அரசு வழிகாட்டி மதிப்பு (கைடுலைன் வேல்யூ), வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக மாநிலத்தில் மனை மற்றும் சொத்தின் சந்தை மதிப்பு (மார்க்கெட் வேல்யூ) பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் கைடுலைன் வேல்யூ உயர்த்தப்படாமல் இருந்தது. அதனால், பல இடங்களில் கைடுலைன் மதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது.
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புபடிதான் மனை மற்றும் சொத்துகளை பதிவு செய்ய வேண்டும்.
திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு, கிட்டத்தட்ட சந்தை மதிப்புக்கு இனியாக இருப்பதால் சொத்து பதிவு செய்பவர்கள் இனி கையிலிருந்து போடும் தொகை அதிகமாக இருக்கும்.
இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளக்கும்.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் ஒரு சதுர அடி மனை சந்தை விலை 500 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இதன் அரசு வழிகாட்டி மதிப்பு தற்போது 250 ரூபாயாக இருக்கிறது. தற்போதைய நிலையில் அந்த மனையை ச.அடி. 500 ரூபாய்க்கு வாங்கினாலும், அரசு வழிகாட்டி மதிப்பான 250 ரூபாய்க்கு பதிவு செய்தால் போதும். ஏப்ரல் முதல் அப்படி செய்ய முடியாது; 500 ரூபாய்க்குதான் சொத்த பதிவு செய்ய வேண்டும். இந்த வழிகாட்டி மதிப்பு மூலம் மனை அல்லது சொத்து வாங்கும் போது செலவிடும் தொகை கணிசமாக அதிகரிக்கும்.
அதே நேரத்தில், பட்ஜெட்டில் ஒரு சலுகையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொது மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக முத்திரைத் தீர்வை (ஸ்டாம்ப் டூட்டி) 8 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. பதிவு கட்டணத்தில் (1%) மாற்றமில்லை. தற்போது அரசு வழிகாட்டி மதிப்பில் மொத்தம் 9% முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இனி 8% செலுத்தினால் போதும்.
உதாரணமாக ஒரு மனையின் அரசு வழிகாட்டி மதிப்பு 10 லட்ச ரூபாய் என்றால் தற்போது பத்திரச் செலவு, 9% என்பது 90,000 ரூபாய். இது ஏப்ரல் முதல் 8% என்பதால் 80,000 ரூபாய் பத்திரச் செலவாகும். அதே நேரத்தில், வழி காட்டி மதிப்பு உயர்த்தப்பட்டிருப்பதால் 10 லட்ச ரூபாய் ரூபாய் என்பது 20 லட்ச ரூபாயாக அதிகரித்திருந்தால், 8% என்றாலும் 1,60,000 ரூபாய் பத்திரச் செலவு ஆகும். அந்த வகையில் அரசுக்கு வருமானம் கூடும்.
வழிகாட்டி மதிப்பு உயர்வால், தமிழக அரசுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

Source : Vikatan.com

ராகுல் டிராவிட்... சூரியன்கள் மறைத்த நட்சத்திரம்!

சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியிருக்கிறார், ராகுல் டிராவிட். ஓய்வுபெறும் முடிவையும் அவரது பாணியிலேயே அறிவித்திருக்கிறார்!
பொதுவாக நட்சத்திர வீரர்கள் மைதானத்தின் நடுவே ரசிகர்கள் கைத்தட்டலோடு விடைபெற வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், ராகுல் டிராவிட் அவரது ஆட்டத்தைப் போலவே அழகாக திட்டமிட்டு, முன்கூட்டியே செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து, கோட் சூட் அணிந்தபடி கண்ணியமாகவும் கம்பீரமாகவும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இது தான் டிராவிட்!
எப்போதும் ஒரு நிதானத்தை, பதற்றமோ பரப‌ரப்போ இல்லாத உறுதியை, திட்டமிட்டு கவனமாக அடியெடுத்து வைக்கும் தன்மையை அவரிடம் பார்க்கலாம். ஆடுகளத்திலும் சரி, ஆடுகளத்துக்கு வெளியேயும் சரி.. கிரிக்கெட்டில் அடிக்கடி சொல்லப்படுவதை போல் அவர் நிஜமாகவே ஜென்டில்மேன் தான்!
16 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் டிராவிட் ஏற்ற இற‌க்கங்களைப் பார்த்திருக்கிறார்; சோதனைகளைச் சந்தித்திருக்கிறார்; சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்து போனதில்லை. எங்கேயும் எப்போதும் நிதானமாகவே இருந்திருக்கிறார்.
டிராவிட்டின் இந்த நிதானமும், மன உறுதியுமே கடந்த 16 ஆண்டுகளாக இந்திய அணியின் பக்கபலமாக இருந்துவந்திருக்கிறது. இந்திய பேட்டிங் நெருக்கடிக்கு ஆளான நேரங்களில் எல்லாம் அவரே இந்திய அணியை தாங்கிப் பிடித்திருக்கிறார்.
இந்திய அணியை பொருத்தவரை, டிராவிட்தான் ஆபத்பாந்தவன். அனல் வீசும் வேகப்பந்து வீச்சில் இந்திய பேட்டிங் தடுமாறி நின்றபோதும், விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியின் விளிம்பில் நின்றபோதும் அவரது உறுதியான ஆட்டமே கைகொடுத்திருக்கிறது.
இந்திய அணிக்கு சிக்கல் என்றால், ரசிகர்கள் நம்பியதும் டிராவிட்டை தான். எதிர் அணியினர் குறிவைத்ததும் டிராவிட்டை தான்!
எத்தனையோ போட்டிகளில் அவர் இந்திய அணிக்கும் தோல்விக்கும் இடையே நின்றிருக்கிறார். அதனால்தான் "இந்தியப் பெருஞ்சுவர்" எனப் பாராட்டப்பட்டார். நிதானமும் நிலையான தன்மையும் கொண்ட அவருக்கு
இந்தப் பெயர் எத்தனை கச்சிதமாக பொருந்துகிறது. அதே அள‌வுக்கு வெற்றிக்கும் பங்களிப்பு செலுத்தியிருக்கிறார்.
டிராவிட் தாங்கி நிற்கும் விழுப்புண்கள் அதிகம். தங்கத்தை நெருப்பில் இட்டால்தான் பிரகாசிக்கும் என்பது போல டிராவிட்டின் ஆற்றலை சோதனைகளும் சவால்களுமே வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. அதற்கேற்ப டிராவிட்டின் சாதனைகளும் வியக்க வைக்கின்றன.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே 10,000 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ' மெதுவாக ஆடுகிறார்.. எனவே ஒருநாள் போட்டிக்கு ஒத்துவரமாட்டார் ' என்று விமர்சிக்கப்பட்டதை மீறி, ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் எல்லா நாடுகளுக்கு எதிராகவும், எல்லா நாடுகளிலும் சதம் அடித்திருக்கிறார். 88 முறை டெஸ்ட் போட்டிகளில் ஜோடியாக 100 ரன்களை குவித்துள்ளார். வேறு எந்த வீரரையும்விட அதிகமாக 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக கேட்சுகளை பிடித்திருக்கிறார் (210).
சாதனைகளையும் ஆட்டத்திறமையையும் மீறி, ராகுல் டிராவிட் தனக்கான முழு அங்கீகார‌த்தையும் பெற்றதேயில்லை என்பது தான் கொஞ்சம் விசித்திரமானது.
ஒரு விதத்தில் இது புரிந்துகொள்ளக்கூடியதே. சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர், கொல்கத்தா இளவரசர் கங்குலி, டெல்லி சூறாவளி சேவாக் என புகழ் வெளிச்சத்தை தங்கள் பக்கம் திருப்பி கொள்ளும் ஆற்றல் படைத்த சூரியன்கள் நிரம்பிய இந்திய அணியில், பல நேரங்களில் டிராவிட்டின் சாதனைகள் பிரகாசம் குறைந்துபோனது மறுக்க முடியாத உண்மை.
கடந்த 1996-ல் அவரும் கங்குலியும் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தனர். அந்தப் போட்டியில் டிராவிட் அபாரமாக விளையாடி, 95 ரன்கள் குவித்தார். ஆனால் அதே போட்டியில் நேர்த்தியாக‌ ஆடி சதம் அடித்த கங்குலி பற்றி தான் எல்லோரும் பேசினார்கள்.
தொடர்ந்து, டிராவிட் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியபோதும், சச்சினோ சேவாக்கோ புகழப்பட்ட அளவுக்கு அவர் பாராட்டப்பட்டதில்லை; கொண்டாடப்பட்டதில்லை.
ஒருவிதத்தில் டிராவிட்டின் நிதானமான ஆட்டமும் அமைதியான குணமும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒன்று... புகழ் மாலைகள் வந்து விழாத‌து கண்டு டிராவிட் மனம் புழுங்கியதுமில்லை; வேதனைப்பட்டதும் இல்லை! மாறாக, 'என் கடன் ரன் குவிப்பதே... அணியின் வெற்றிக்கு உறுதுணைபுரிவதே' என்பது போல தனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இதுவே அவரை சிறந்த டீம் மேனாக மாற்றியது.
ஆனால், இந்திய அணி சோதனைக்கு ஆளான போதெல்லாம் அவர் சுமைதாங்கியாக மாறி தனது ஆட்டம் பற்றி பேச வைத்தார்.
கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் லக்ஷ்மனோடு சேர்ந்து அவர் ஆடி சதம் அடித்து அந்த போட்டியையே தலைகீழாக மாற்றி, வெற்றிக்கு வழி வகுத்ததை யாரால் மறக்க முடியும். அதே போல பாகிஸ்தானின் ராவல்பிண்டியில அவர் அடித்த 270 ரன்களையும் மறந்துவிட முடியாது!
இதேபோல ஆஸ்திரேலிய மண்ணிலும் மேற்கிந்திய தீவுகளிலும் அவர் ஆடிய பல இன்னிங்க்ஸ்கள் கிரிக்கெட் காவியம் தான்.
தன்னிடம் அணி எதிர்பார்ப்பது என்ன என்பதை உணர்ந்து, அதற்கேற்ப ஆடிய தன்னலமற்ற வீரர் டிராவிட். புகழின் பின்னே அவர் ஓடியதும் இல்லை. சவால்களை கண்டு ஓடியதும் இல்லை.
"எப்போதுமே எல்லாவற்றையும் அணிக்கு தரும் வகையில் விளையாடுவதே எனது கிரிக்கெட் அணுகுமுறையாக இருந்துள்ளது," என்று டிராவிட் ஓய்வு முடிவை அறிவித்தபோது பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.
"சில நேரங்களில் தோல்வியை சந்தித்திருந்தாலும், ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்ததில்லை," என்றும் அவர் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.
நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள்.
டிராவிட்டின் ஆட்டத்திலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி.. டைமிங் கச்சிதமாக இருக்கும். கேப்டன் பதவி அவரை தேடிவந்தாலும், அவர் அதனை சில ஆண்டுகளில் ராஜினாமா செய்து விட்டார். எதிர்கால கேப்டனான டோனியை அடையாளம் காட்ட இது உதவியது. அதேபோல தான் இப்போது மூத்த வீர்ர்கள், இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் என்று பேசப்படும் நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஆனால், தனது ஆட்டத்தாலும் அணுகுமுறையாலும் இளம் வீரரகளுக்கான வழிகாட்டியாக விளங்குகிறார்!
இந்தியப் பெருஞ்சுவர் இன்று தனது ஓய்வை அறிவித்தபோது உதிர்த்தது, 'sad but proud' என்று.
எங்களுக்கும்தான் டிராவிட்!

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - நெடுமாறன்

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
"பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.
ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.
1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.
எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.
ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.
ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.
இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!
கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.
நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.
1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.
1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.
பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.
1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.
தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.
அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?
நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?
தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?
இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?
முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!
உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.
திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.
ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.
உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.
மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?
கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.
பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?
ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?

""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்''

Source : கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

ஏழிசை மன்னர் எம்.கே.டி தியாகராஜ பாகவதர்

மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி - மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.

தந்தைக்கு இது பிடிக்கவில்லை. தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியபடி இருந்தார். தொல்லை தாங்காமல் திடீரென்று மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கே தேடியும் தாயும் தந்தையும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்கு அவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்ததாம்.
திருச்சி திரும்பிய பாலபாடகனின் பாட்டைக் கேட்டுப் பலரும் பாராட்டினார்கள். எப்.ஜி.நடேச அய்யர் தமது திருச்சி இரசிக இரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. பத்து வயது சிறுவன் திடீரென்று ஓர் இரவில் ஒளிமிக்க நட்சத்திரமாக ஆகிவிட்டார்.
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கர்நாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். அதற்கு எத்தகைய சன்மானமும் வேண்டாமென்று அவர் கூறிவிட்டார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார்.
ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டதும், தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு பாகவதர் என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது.
1926ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.இராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.
1934ல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது.

அதன்பிறகு பாகவதர் நடிப்பில்,

நவீன சாரங்கதாரா (1936)
சத்தியசீலன் (1936 - பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது)
சிந்தாமணி (1937)
அம்பிகாபதி (1937)
திருநீலகண்டர் (1939)
அசோக் குமார் (1941)
சிவகவி (1943)
ஹரிதாஸ் (1944)
ஆகிய திரைப்படங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு வெற்றிப்படமாக வந்தபடி இருந்தன. வீதிகளில், வேலை செய்யும் இடங்களில், வயல்களில், சாலையோரங்களில், ஒற்றையடிப் பாதைகளில், தோட்டம், துரவுகளில், எங்கும் பாகவதரின் கந்தர்வ கானம் எதிரொலித்தது.
திரையுலகில் பாகவதர் அடைந்திருந்த உன்னதமான புகழையும், பெருமையையும் கண்டு பொறாமையடைந்த சிலர், அவரைப் பற்றி அடிப்படையற்ற அவதூறுகளைக் கிளப்பியவாறு இருந்தனர். இந்தச் சமயத்தில்தான் லட்சுமிகாந்தன் பற்றிய கொலை வழக்கு வந்தது.
அதற்கு முன்பு பல்வேறு குற்றங்களுக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று இராஜமுந்திரி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொழுது வழியில் போலீஸாரிடமிருந்து தப்பியோடி மீண்டும் சென்னையில் பிடிபட்டு அந்தமான் சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார். 1942 மார்ச் மாதத்தில் ஜப்பானியப் படை அந்தமானைக் கைப்பற்றி அங்குள்ள சிறைவாசிகளை வெளியேற்றியதும் சென்னைக்குத் திரும்பிய இலட்சுமிகாந்தன், "சினிமா தூது" என்ற கீழ்த்தரமான மஞ்சள் ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார்.
திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி சினிமா தூது இதழில் எழுதப்பட்ட அவதூறுகளைக் கண்டித்து பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், சீராமுலு நாயுடு உள்ளிட்ட பலர் ஆளுநர் ஆர்தர் ஹோப்பிடம் சமர்ப்பித்த மனுவின்மீது போலீஸார் விசாரணை செய்து அவதூறுகள் கிளப்பிய சினிமா தூது பத்திரிகையைச் சட்டப்படி தடைசெய்தனர். அதன் பிறகு, "இந்து நேசன்" என்ற மற்றொரு பத்திரிகை மூலம் பழையபடி வீண்பழிகளைச் சுமத்திப் பணம் பறிப்பதில் லட்சுமிகாந்தன் ஈடுபட்டார்.
1944 நவம்பர் 8ம் நாள் சென்னை வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்த இலட்சுமிகாந்தனைச் சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். அதையொட்டித் தன்னுடைய வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அருகிலிருந்த காவல்நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் பற்றிப் புகார் செய்துவிட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அங்கு தங்கியிருந்த இலட்சுமிகாந்தன் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

1944 நவம்பர் 27ம் தேதி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி இலட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது.
சென்னை மாநில மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்மீது மேலும் இலண்டன் ப்ரிவி கவுன்சில் அமைப்புக்கு முறையீடு செய்யப்பட்டது. வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு ப்ரிவி கவுன்சில் தந்த உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகளால் மறுவிசாரணை தொடங்கியது. பிரபலமான வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் முன்வைத்த வாதங்களும், ஆதாரங்களும் நடத்தப்பட்ட வழக்கில் தரப்பட்ட வலுவற்ற புனைந்துரைகளை முழுமையாகச் சிதறடித்தன.
அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கத்தியைப் பார்த்து மனுவை விசாரித்த நீதிபதி ஒருவர் கூறியதாவது:- இந்தக் கத்தியால் ஓர் எலியைக்கூட கொன்றிருக்க முடியாது.
இந்த அளவுக்கு மோசமான ஆதாரங்கள் மீது திரையுலக நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் முப்பது மாதங்களுக்கு இருண்ட சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.
முன்னர் ஒரு மன்னர்போல வாழ்ந்த பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.
நடிப்பதிலோ, பொருளீட்டுவதிலோ அவருக்கு நாட்டம் இல்லாமல் போனது. வறுமையால் அவர் வாடிவிட்டார் என்று கூற முடியாது. கடைசிவரை ஒரு கவரிமான்போல அவர் வாழ்ந்தார்.
பவளக்கொடி படம் தொடங்கி ஹரிதாஸ் வரை அவர் சிறை செல்வதற்குமுன் நடித்த ஒன்பது படங்கள்தான் பெரும் வெற்றியைப் பெற்றன.

சிறையிலிருந்து வெளிவந்ததும்,

இராஜமுக்தி (1948)
அமரகவி (1952)
சியாமளா (1952)
புதுவாழ்வு (1957)
சிவகாமி (1960)

ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன.

1947ல் சிறையிலிருந்து விடுதலையான பாகவதர், ‘நரேந்திரா பிக்சர்ஸ்’ என்ற சொந்தப் படக் கம்பெனியை ஆரம்பித்து ‘ராஜ முக்தி’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். படத்திற்குத் திரைக்கதை அமைத்து, வசனம் எழுதியிருந்தார் புதுமைப்பித்தன். பாகவதருடன் கதாநாயகியாக பானுமதி நடித்திருந்தார். சி.ஆர். சுப்பராமன் இசையமைத்திருந்தார். புகழ் பெற்ற திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரியும் படத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனாலும் படம் தோல்வியைத் தழுவியது. அடுத்து வெளியான அமரகவி டி.ஆர். ராஜகுமாரி, மதுரம், என்.எஸ்.கிருஷ்ணன், லலிதா, பத்மினி ஆகிய முன்னணிக் கலைஞர்கள் நடித்திருந்தும் தோல்விப் படமானது. தொடர்ந்து வெளியான சியாமளாவும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் நம்பிக்கையிழக்காமல் புது வாழ்வு படத்தைத் தயாரித்து தானே நடித்து இயக்கவும் செய்தார் பாகவதர். பாகவதர் வாழ்க்கையின் மீளாத சரிவிற்கு அப்படமே வழி வகுத்தது. அப்படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது.தொடர்ந்து தமிழிசைக் கச்சேரிகள் செய்ய விழைந்தார். ஆனால் அதற்கும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சர்க்கரை நோயின் தாக்கத்தால் திடீரெனp பார்வை இழப்பும் ஏற்பட்டது. தங்கத் தட்டில் சாப்பிட்ட பெருமைக்குரியவர் தாங்குவதற்கு யாருமில்லாமல் தவித்தார். வாழ்ங்கு வாழ்ந்த கந்தர்வ கான இசைமாமணி இறுதிக் காலத்தில் உடல்நலிவுற்று, ஆதரிப்பார் யாருமில்லாமல் வறுமையில் வாடினார். மனம் வெறுத்துப் போய் தம் குல தெய்வமான தஞ்சை முத்துமாரியம்மன் கோவிலைச் சரணடைந்தார். அங்கேயே அமர்ந்து தம் வாழ்நாளைக் கழித்தார். பாகவதரின் நிலை பற்றிக் கேள்வியுற்ற நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவரைச் சந்தித்தார். அவர் நிலை கண்டு இரங்கி, “ வாருங்கள், உங்களுக்குக் கனகாபிஷேகம் செய்து வைக்கிறேன்” என்று வேண்டிக் கொண்டார். ஆனால் பாகவதர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ”நீங்கள் சொன்னதே போதும். செய்து வைத்தது மாதிரிதான். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!” என்று கூறி அதனை ஏற்க மறுத்து விட்டார்.
மன ஆறுதலுக்காக நண்பர் நாகரத்தினத்துடன் தீர்த்த யாத்திரை மேற் கொண்டார் பாகவதர். 1959 ஏப்ரல் மாதம் புட்டபர்த்தி சென்று ஸ்ரீ சாயி பாபாவைத் தரிசித்தார். தனது மன வேதனைகளை, தான் படும் துன்பங்களை பாபாவிடம் சொன்னார். பாபா பாகவதரிடம், “இன்னும் ஆறுமாதங்களில் எல்லாம் முடிந்து விடும்” என்றார். அது கேட்டு மனம் நெகிழ்ந்த பாகவதர் தான் பார்வையற்று இருப்பதால் பாபாவை தரிசிக்க முடியவில்லை என்றும், ஒரு சில நிமிடங்களாவது அவரைத் தரிசிக்க தனக்கு பார்வை அளிக்குமாறும் வேண்டிக் கொண்டார். பாபாவும் மனமிரங்கி, தனது கைகளால் பாகவதரின் கண்களைத் தடவ, பாகவதருக்குத் தற்காலிகமாகp பார்வை கிடைத்தது. கண்குளிர பாபாவை தரிசனம் செய்தார். பாகவதரிடம் “போதுமா?” என்று பாபா கேட்க அவரும் மனத் திருப்தியுடன் “போதும்” என்று சொல்ல, பாகவதரின் பார்வை மீண்டும் வழக்கம் போல் ஆனது. பாபாவை தரிசித்த மனத் திருப்தியில் மகிழ்வுடன் ஊர் திரும்பினார் பாகவதர்.

ஆனால் பாபாவின் வாக்கு பலித்தது. சரியாக ஆறு மாதங்கள் கழித்து, 1.11.1959 அன்று பாகவதர் காலமானார். வாழ்வாங்கு வாழ்ந்து, தமிழ்த் திரையுலகின் சிம்மாசனத்தில் 30 ஆண்டுகாலம் இசையரசராக வீற்றிருந்து, பட்டி, தொட்டிகளிலெல்லாம் கர்நாடக இசை வெள்ளம் பெருக்கெடுத்தோட வைத்த பெருமைக்குரிய பாகவதர் மறைந்தார்

எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும், பல கோடி மக்கள் இதயத்தில் அவருடைய பாட்டுகள் என்றும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். நவம்பர் 1, 1959ல் தியாகராஜ பாகவதர் மறைந்தாலும் அவர் வாரி வழங்கிய இசைச் செல்வம், தமிழ் மக்களுக்கு நிலையான பெரும் பேறாக இருந்து வருகிறது.

Source :
தென்றல் மாத இதழ், அக்டோபர் 2010 இதழ்  and