ஏப்ரல் முதல் உயரும் கைடுலைன் மதிப்பு

கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட சொத்துகளின் அரசு வழிகாட்டி மதிப்பு (கைடுலைன் வேல்யூ), வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக மாநிலத்தில் மனை மற்றும் சொத்தின் சந்தை மதிப்பு (மார்க்கெட் வேல்யூ) பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் கைடுலைன் வேல்யூ உயர்த்தப்படாமல் இருந்தது. அதனால், பல இடங்களில் கைடுலைன் மதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது.
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புபடிதான் மனை மற்றும் சொத்துகளை பதிவு செய்ய வேண்டும்.
திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு, கிட்டத்தட்ட சந்தை மதிப்புக்கு இனியாக இருப்பதால் சொத்து பதிவு செய்பவர்கள் இனி கையிலிருந்து போடும் தொகை அதிகமாக இருக்கும்.
இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளக்கும்.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் ஒரு சதுர அடி மனை சந்தை விலை 500 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இதன் அரசு வழிகாட்டி மதிப்பு தற்போது 250 ரூபாயாக இருக்கிறது. தற்போதைய நிலையில் அந்த மனையை ச.அடி. 500 ரூபாய்க்கு வாங்கினாலும், அரசு வழிகாட்டி மதிப்பான 250 ரூபாய்க்கு பதிவு செய்தால் போதும். ஏப்ரல் முதல் அப்படி செய்ய முடியாது; 500 ரூபாய்க்குதான் சொத்த பதிவு செய்ய வேண்டும். இந்த வழிகாட்டி மதிப்பு மூலம் மனை அல்லது சொத்து வாங்கும் போது செலவிடும் தொகை கணிசமாக அதிகரிக்கும்.
அதே நேரத்தில், பட்ஜெட்டில் ஒரு சலுகையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொது மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக முத்திரைத் தீர்வை (ஸ்டாம்ப் டூட்டி) 8 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. பதிவு கட்டணத்தில் (1%) மாற்றமில்லை. தற்போது அரசு வழிகாட்டி மதிப்பில் மொத்தம் 9% முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இனி 8% செலுத்தினால் போதும்.
உதாரணமாக ஒரு மனையின் அரசு வழிகாட்டி மதிப்பு 10 லட்ச ரூபாய் என்றால் தற்போது பத்திரச் செலவு, 9% என்பது 90,000 ரூபாய். இது ஏப்ரல் முதல் 8% என்பதால் 80,000 ரூபாய் பத்திரச் செலவாகும். அதே நேரத்தில், வழி காட்டி மதிப்பு உயர்த்தப்பட்டிருப்பதால் 10 லட்ச ரூபாய் ரூபாய் என்பது 20 லட்ச ரூபாயாக அதிகரித்திருந்தால், 8% என்றாலும் 1,60,000 ரூபாய் பத்திரச் செலவு ஆகும். அந்த வகையில் அரசுக்கு வருமானம் கூடும்.
வழிகாட்டி மதிப்பு உயர்வால், தமிழக அரசுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

Source : Vikatan.com