Showing posts with label ஏமாற்றப்படுகிறோம். Show all posts
Showing posts with label ஏமாற்றப்படுகிறோம். Show all posts

ஏமாற்றப்படுகிறோம்

பதினோரு முட்டாள்கள் விளையாடுவதைப் பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்த்து ரசிக்கும் விளையாட்டு என்று கிரிக்கெட் விளையாட்டைப்பற்றி ஆங்கில நாடக ஆசிரியரும், சிந்தனையாளருமான பெர்னாட்ஷா கூறியது சரியோ, தவறோ. ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்கிற பெயரில் பல லட்சம் கிரிக்கெட் ரசிகர்களை முட்டாள்களாக்கிக் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும், சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது. அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கும்கூட. ஆனால், இந்தக் கிரிக்கெட் போட்டிகளால் அந்த விளையாட்டுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ என்ன பயன் என்கிற கேள்வி கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு எரிச்சலைக் கொடுக்கின்றது. கொடுக்காதா பின்னே? மக்களின் முட்டாள்தனத்தில் கோடிக்கணக்கில் லாபம் கொழிக்கும்போது அதை விமர்சித்தால் பயனாளிகளுக்குக் கோபமும் எரிச்சலும் வரத்தானே செய்யும்?

ஐபிஎல் விளையாட்டில் கறுப்புப் பணம் இறக்கப்பட்டு வெள்ளைப்பணமாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தந்திருக்கும் விசித்திரமான பதில்: இது தொடர்பாக வருவாய்த்துறை செயலருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்குப் பதில் கிடைத்தவுடன் இதுபற்றி விவாதிப்போம்.

வருவாய்த் துறை செயலர் தில்லியில்தானே இருக்கிறார்? ஏதோ சுவிட்சர்லாந்து அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதைப்போல அமைச்சர் சொல்லிக்கொண்டிருக்கிறார். நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டம்போல அதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு தொடங்கின. தொடங்கிய ஆண்டு முதல் தொடர்ந்து பணத்தை அள்ளியெடுக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு இந்த ஆட்டங்களின் மூலம் 102 மில்லியன் டாலர் கிடைத்தது. ஆண்டுதோறும் 20 மில்லியன் டாலர் அதிகரித்துக் கொண்டே வந்தது. 2011 ஆம் ஆண்டில் (4-வது பருவம்) 160 மில்லியன் டாலர்கள் ( சுமார் ரூ.900 கோடி)கிடைத்தது. ஆனால், 2012 இல் இதுவரை 159 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்திருப்பதாக சலித்துக் கொள்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,077 கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாக ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அமலாக்கப் பிரிவு இதுவரை 19 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. இதுகுறித்து அரசின் எந்தத் துறையும், வருமானவரித் துறை உள்பட, நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்குக் காரணம், பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அரசியல்வாதிகள். மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா ஐபிஎல் தலைவராக இருக்கிறார். மத்திய அமைச்சர்கள் சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக், சி.பி.ஜோஷி, பரூக் அப்துல்லா ஆகியோர் பிசிசிஐ உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுபோதாதென்று, ஐபிஎல் உரிமையாளர்களாகப் பெருந்தொழிலதிபர்கள், நடிகர் - நடிகைகள் வேறு. இவர்களில் பலர் பங்குதாரர்கள் என்றும், பிநாமிகள் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால், இந்த நோட்டீஸ்களுக்கு என்ன அர்த்தம்? வெறும் கண்துடைப்பு என்பதைத் தவிர!

அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் பணம் கொழிக்கும் ஐபிஎல் விளையாட்டில் கரம் கோத்துச் செயல்படுகின்றனர். பாஜகவைச் சேர்ந்த அருண் ஜேட்லியும், ரவிசங்கர் பிரசாதும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலு பிரசாதுடன் இணைந்து செயல்படுவதற்குக் காரணம், கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வமல்ல. ஐபிஎல்லில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம். பணம் வரும்போது, பாஜக தீண்டத்தக்கதாகி விடுகிறது லாலு பிரசாதுக்கு. லாலு பிரசாதின் லஞ்ச ஊழல் இரண்டாம் பட்சமாகிவிடுகிறது பாஜகவினருக்கு!

இந்த விளையாட்டின் ஒளிபரப்பு உரிமை மற்றும் இதில் இடம் பெறும் விளம்பர நிறுவனங்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் பெரும் வரவேற்பை இவர்கள் மிகச் சரியாக வணிகமுறைப்படி பயன்படுத்திக்கொள்ள உதவி செய்யவும், வரிகள் இல்லாமல் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவி செய்யவும்தான் ஐபிஎல் விளையாட்டு உருவாக்கப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது அமைச்சராக இருந்த சசி தரூர் விவகாரத்தில்தான் ஐபிஎல் போட்டிகளில் ஊழல் இருப்பதும், அரசியல் செல்வாக்கு பயன்படுவதும் வெட்டவெளிச்சமானது. இந்த விவகாரத்தில் சிக்குண்ட சசி தரூர் அமைச்சர் பதவியை இழந்தார். ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி பல்வேறு வழக்குகளில் சிக்கி, இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில் இருக்கிறார். முறைகேடுகள் நடக்கின்றன என்று அம்பலமான போதிலும்கூட இவர்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த விளையாட்டுக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் விலை கோரப்படுகிறார்கள். இந்தியாவில் நடக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், விளையாட்டரங்கப் பார்வையாளர்களையும் தொலைக்காட்சி வழியாக ரசிகர்களும் சலிப்பைப் போக்கிக்கொள்ள அழகிகளின் களிநடனம் (சியர் கேர்ள்ஸ்) வேறு.

ஒலிம்பிக் உள்ளிட்ட ஏனைய விளையாட்டுப் போட்டிகளில் "ஊக்கமருந்து' பயன்படுத்தினால் வீரர்கள் தடை செய்யப்படுகிறார்களே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் வீரர்கள் ஊக்க மருந்துக்காகச் சோதிக்கப்படுவதில்லையே, ஏன்? ஒருவர்கூட இந்தக் கேள்வியை எழுப்பத் தயாராக இல்லையே என்பதுதான் நமது ஆதங்கம்.

விளையாட்டின் தார்மிகம், இந்தியக் கலாசாரம், அரசுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய் அனைத்தையும் "கிளீன் போல்டு' செய்துகொண்டிருக்கிறது ஐபிஎல். நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது தெரியாமல் நாம் ஐபிஎல் போட்டிகளை ரசித்து வேடிக்கை பார்த்து நமது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்