சாமி :நீதி நிமிர்ந்தது

இந்தியக் குடியரசு எதிர்கொள்ளும் மிகப் பெரிய பின்னடைவு, நமது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல் இருப்பதுதான். கண்கொத்திப் பாம்புகளாக இருந்து ஆட்சியில் இருக்கும் தவறுகளை அவர்கள் துணிவுடன் சுட்டிக் காட்டவும் தட்டிக் கேட்கவும் தலைப்பட்டாலே, இந்தியாவில் நல்லாட்சி நிலைபெற்றுவிடும். அவர்கள் தங்களது கடமையைச் சரிவர நிறைவேற்றாத நிலையில் நீதிமன்றங்களாவது தலையிட்டு நிலைமை வரம்பு மீறிவிடாமல் பாதுகாக்கின்றனவே என்பது சற்று ஆறுதல்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வியும், ஏ.கே. கங்குலியும் சுப்பிரமணியன் சுவாமியின் தனிநபர் வழக்கில் வழங்கி இருக்கும் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மிகப்பெரிய பலத்தை வழங்கி இருக்கிறது. இரண்டு நீதிபதிகளுமே ஒத்த கருத்தினராக வெளியிட்டிருக்கும் தீர்ப்பின்படி இனிமேல் தவறிழைக்கும் அரசுப் பணியாளர்கள் - அதிகாரிகளோ, அமைச்சர்களோ யார் எந்த அரசுப் பதவி வகித்தாலும் - மீதான வழக்குகளில் அனுமதி வழங்குவதற்குக் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 19வது பிரிவின்படி அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் - அமைச்சரோ, அதிகாரியோ, வாரியத் தலைவர்களோ யாராக இருந்தாலும் - மீதான குற்றச்சாட்டை அரசின் அனுமதி பெறாமல் விசாரிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை இல்லை. அதேபோல, குற்றவியல் நடைமுறை விதிகளின் 197வது பிரிவின்படி முன்அனுமதி பெறாமல் ஒரு அரசுப் பணியாளரைத் தண்டிக்கவும் முடியாது.
அரசுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர் நேர்மையாகப் பணியாற்றுவது தடுக்கப்படக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்டவைதான் இந்த இரண்டு சட்டப் பிரிவுகளும். ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறைகளைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சட்டத்தின் கரங்கள் தங்களைத் தீண்டிவிடாமல் அரசுப் பணியாளர்கள், குறிப்பாக உயர் அதிகாரிகளும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களும் குற்றங்களை இழைத்துவிட்டுத் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
தனிநபரான சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையான அன்றைய மத்தியத் தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்
ஆ. ராசாவின் மீது வழக்குத் தொடர்வதற்கான அனுமதியை அங்கீகரித்திருப்பதன் மூலம், இந்தியக் குடியரசின் எந்தவொரு குடிமகனும் ஊழலிலும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடும் அரசுப் பணியாளர் மீது வழக்குத் தொடுப்பதில் இருக்கும் மிகப்பெரிய தடையை உச்ச நீதிமன்றம் உடைத்தெறிந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, ஊழல்வாதியான அரசு ஊழியருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கேட்டு விண்ணப்பித்த நான்கு மாதங்களுக்குள், பதிலளிக்கப்படாவிட்டால், அனுமதி வழங்கப்பட்டதாகப் பொருள் கொள்ள வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்திவிட்டது.
மூன்று மாதத்திற்குள் வழக்குத் தொடர்வதற்கான அனுமதிக் கோரிக்கைக்கு பதிலளித்தாக வேண்டும். தேவைப்பட்டால், தலைமை அரசு வழக்குரைஞரின் பரிந்துரைக்காகக் கூடுதலாக ஒரு மாத அவகாசம் கோரலாம். அதற்கு மேல் பதிலளிப்பதில் தாமதம் இருக்கக் கூடாது என்பது இந்தியக் குடிமகனுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டுப் பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி நவம்பர் 2008ல் கடிதம் எழுதினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்தப் பிரச்னையை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்து வருவதால் இப்போது அனுமதி வழங்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் பதிலளித்து விட்டது. தொடர்ந்து நீதிமன்றப் படியேறி இப்போது ஒரு மிகப்பெரிய வெற்றியை இந்தியக் குடிமகனுக்குப் பெற்றுத் தந்திருக்கும் சுப்பிரமணியன் சுவாமியைப் பாராட்ட வேண்டும்.
""சுவாமியின் கோரிக்கைக்கு உடனடியாக அனுமதி அளித்திருந்தால் வழக்குத் தொடர்வதில் காலவிரயம் தடுக்கப்பட்டிருக்கும்'' என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தெரிவித்திருக்கிறார். ""இதுபோன்ற காலதாமதங்கள் வழக்கின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கின்றன என்பது ஒருபுறம். இன்னொரு புறம், தங்களுக்குச் செய்திருக்கின்ற அல்லது செய்யப் போகின்ற உதவிகளுக்காகத்தான் அனுமதி வழங்கத் தேவையில்லாத காலதாமதத்தை ஏற்படுத்துகிறார்களோ என்கிற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரும் உயர் பதவி வகிப்பவர்களும் (ஆட்சியாளர்களும்) குற்றத்தில் கூட்டாளிகளோ என்கிற சந்தேகத்துக்குக் காலதாமதம் இடமளிக்கிறது'' என்று தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார் ஏ.கே. கங்குலி.
ஒரு அரசுப் பணியாளர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்குத் தொடுப்பதற்கு அனுமதி கோரப்பட்டால், அந்தக் குற்றச்சாட்டில் வலு இருக்கிறதா என்பதைப் பார்ப்பது மட்டுமே அனுமதி அளிப்பதற்குத் தேவையான காரணமாக இருக்க முடியுமே தவிர, குற்றச்சாட்டின் மீது தீவிரப் புலன்விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்குவது அரசின் வேலை அல்ல. அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.
இந்தியாவில் நடக்கும் பல ஊழல்கள் மேலதிகாரிகள், அமைச்சர்கள், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் போன்றவர்களின் ஆசியுடனும், ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. எந்தவொரு குற்றச்சாட்டு எழுந்தாலும் அனுமதி அளிக்காமல் காலதாமதம் செய்யப்பட்டு குற்றச்சாட்டின் தீவிரம் குறைக்கப்படுகிறது அல்லது குற்றச்சாட்டே மறக்கப்பட்டு விடுகிறது. இனிமேல் அதற்கான வாய்ப்பை இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அடைத்துவிட்டது.
சுப்பிரமணியன் சுவாமி மீது பல விமர்சனங்கள் எழுப்பப்படலாம். ஆனால், ஒரு தனி மனிதரின் முயற்சியால்தான் பல ஊழல்வாதிகள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அதேபோல, பதவி ஓய்வுபெறும் நாளில் இந்தியக் குடியரசுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி இருக்கும் நீதிபதி அசோக்குமார் கங்குலியையும் நாம் நன்றி கூறிப் பாராட்ட வேண்டும்.

Thanks :