யாருடைய எலிகள் நாம்?

கடந்த வாரம் பலராலும் கண்டுகொள்ளப்படாத செய்திகளில் ஒன்று... நாட்டின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் சுரேந்தர் சிங் மருந்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள 9 மருந்து நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பி உள்ள கடிதம்!
ஜனநாதன் இயக்கத்தில், மனிதர்களை எலி களைப்போல மருத்துவப் பரிசோதனையில்பயன் படுத்தும் 'ஈ’ படம் பார்த்திருப்பீர்களே? அதே மாதிரி கடந்த ஆண்டு இந்தியாவில் மனிதர்களைப் பயன்படுத்தி நடந்த மருத்துவப் பரிசோதனைகளில் (உடல்கூறு) ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளில், 670 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்களில், இழப்பீட்டுத் தொகை வெறும் 8 பேருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதேபோல், மருந்துகளுக்காக நடந்த பரிசோதனையில் இறந்த 25 பேரில் 5 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. 'எப்போது மற்றவர்களுக்கான இழப் பீட்டுத் தொகையை வழங்குவீர்கள்?’ என்பதுதான் சுரேந்தர் சிங்கின் கடிதம். இந்தக் கடித விவரம் பத்திரிகைகளில் வெளியாகிவிட்டதால், பாதிக்கப்பட்டோருக்கான தொகையை விரைவில் அளித்துவிடுவதாக அறிவித்து இருக்கின்றன மருந்து நிறுவனங்கள்!


கோடிகள் புரளும் துறை!
 ஒரு புதிய மருந்து, சந்தையை வந்தடைய சராசரியாக .3,600 கோடி வரை செலவா கிறது. இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம், மனிதர்கள் மீதான பரிசோதனை. புதிதாக உருவாக்கப்படும் மருந்து, மனிதர்கள் மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று சோதிக்க வேண்டும்.


வளர்ந்த நாடுகளில், இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குக் கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு. தவிர, நோயாளிகளின் பாதுகாப்புக்கான செலவும் அதிகம். மூன்றாம் உலக நாடுகளில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது, செலவில் 60 சத விகிதம் வரை குறையும். மேலும், ஏழை மக்களின் அறியாமை, எளிதில் வளையக் கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பு இன்மை ஆகியவற்றின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பரிசோதனையை நடத்த ஆரம்பித்தன மருந்து கம்பெனிகள்.


அபாயத்தின் வளர்ச்சி!
இந்தியாவில் மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு தொடங்கும் உயிர்த் தொழில்நுட்பவியல் பூங்காக்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சாவி. 2005-ல் 100 பரிசோதனைகள் நடந்த நிலை மாறி, இப்போது குறைந்தபட்சம் இந்தியா வில் 1,000 பரிசோதனைகள் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தப் பரிசோதனைகளில் இறந்தவர்கள் 132 பேர். இப்போது 670 பேர்.


அறியாமையும் சுய லாபமும்!
இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமை யையும் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகள் தொடர்பான விதிகள் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம், நோயாளிகளுக்கு நோயாளி மாறுபடுகின்றன. இதனால் மருந்து நிறுவனங்களால் சட்டத் தில் இருந்து எளிதாகத் தப்ப முடிகிறது. ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப் பரிசோதனையின் ஒரு கட்டமாக மேற்கொள்ளப் பட்ட மருந்து ஆராய்ச்சியில், 14 ஆயிரம் சிறுமி கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தச் சிறுமிகளில் பெரும்பான்மையினர் பழங்குடியினர். அவர் களுக்கோ, அவர்களுடைய பெற்றோருக்கோ இப்படி ஒரு பரிசோதனை மேற்கொள்ளப் படுவதே தெரியாது. இந்தக் குழந்தைகளில் 6 குழந்தைகள் உயிர் இழந்ததைத் தொடர்ந்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.


நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இப்படி நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் 49 குழந்தைகள் உயிர் இழந்தது கடந்த ஆண்டு தெரியவந்தது. சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 4,142 குழந்தைகளில் 2,728 குழந்தைகள் ஒரு வயதுக்கும் உட்பட்டவர்கள்!
புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனை கள் நடத்த அனுமதி அளித்துள்ளது அமெரிக்க அரசு. இனி, இந்தியாவில் உள்ள குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் களம் இறங்கப்போகின்றன என்பதே இதன் நேரடியான பொருள்!


எத்தகைய அற உணர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சியாளர்களையும் வழிநடத்துகிறது! யாருடைய எலிகள் நாம்?


Source : Vikatan.com
 
More details :http://www.cchr.org/videos/marketing-of-madness.html