நித்யானந்தா வீடியோ விவகாரம் பற்றி ஞானி

(விருந்தினர் பக்கத்துக்கு உடனே கட்டுரை தேவை என்று டெல்லியில் இருந்த எனக்கு சென்னை தமிழ் இந்தியா டுடேவிலிருந்து மார்ச் 5ந் தேதி போன் செய்ததும் இதை அங்கிருந்தே அனுப்பி வைத்தேன். சென்னை வந்த பின்னர் இதழைப் பார்த்ததும்தான் தெரிந்தது. இதை விருந்தினர் பக்கமாக வெளியிடவில்லை. இதிலிருந்து ஒரு சில வரிகளை மட்டும் அவர்களுடைய கட்டுரையில் என் ற்கோளாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தடித்த எழுத்துகளில் உள்ளவை அவர்கள் பயன்படுத்தாதவை )

சாமியார் நித்யானந்த பாமஹம்சனும் நடிகை ரஞ்சிதாவும் தனியறையில் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் காட்டும் வீடியோ சுமார் 72 மணி நேரத்துக்கு தமிழர்கள் அத்தனை பேரையும் வேறு விஷயத்தில் கவனமே செலுத்தமுடியாமல் ஆக்கியிருக்கிறது. வீடியோவை வெளியிட்ட சன் டி.வி, செய்திகளை வெளியிட்ட நக்கீரன் இதழ் ஆகியோரின் வணிக நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது.

சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடும், தயாரிக்கும் படங்களிலும், அதன் தோழமைத் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி காட்டும் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளிலும், முதலமைச்சருக்குப் பாராட்டு விழா என்ற பெயரில் நடத்தப்படும் சினிமாக்காரர்களின் நடன நிகழ்ச்சிகளிலும் நக்கீரன் குழும இதழ்களில் பயபடுத்தப்படும் பச்சையான வார்த்தைப் பிரயோகங்களிலும் இடம் பெறும் ஆபாசங்களோடு ஒப்பிடும்போது இது வரை காட்டப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா காட்சிகள் இன்னமும் அந்தத் ‘தரத்தை’ எட்டவில்லை.

நித்யானந்தாவின் செயல்கள் தமிழ்க் கலாசாரத்தை மீறியதாகவும் அதை இழிவுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு வந்துள்ளதாக காவல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. தமிழ்க் கலாசாரம் என்பது என்ன என்று இ.பி.கோவில் வரையறுக்கப்படவில்லை. அறைக்குள் தனியே இருவர் கொஞ்சிக் கொள்வது எப்படி தமிழ்க் கலாசாரத்துக்கு விரோதமானதாக இருக்க முடியும் ? அதை ஒளிந்திருந்து பார்ப்பவரும் படம் எடுப்பவரும்தான் அநாகரிகமானவர்களாக இருக்க முடியும்.

பிரேமானந்தா விவகாரத்தில் அவர் தன்னுடன் உறவு கொள்ளக் கட்டாயப்படுத்தியதாக சில பெண்கள் முன்வந்து புகார் செய்தது போல நித்யானந்தா விஷயத்தில் இதுவரை எதுவும் சொல்லப்படவில்லை. வீடியோ காட்சிகள், இரு வயது வந்தவர்கள் தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் உறவாடிக் கொண்டிருப்பதையே தெளிவாகக் காட்டுகின்றன.

இந்த வீடியோவின் அடிப்படையில் நடிகை ரஞ்சிதா மீது எந்தக் குற்றச்சாட்டும் வைப்பதற்கான முகாந்தரங்களே இல்லை. தான் விருப்பப்படுபவருடன் அவர் சம்மதத்துடன் உறவு கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனால் இன்னொருவர் பாதிக்கப்பட்டால் மட்டுமே சிக்கலும் குற்றச்சாட்டும் வரமுடியும். ரஞ்சிதாவின் பிரைவசியில் தலையிட்டதற்காக அவர் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈட்டை கலாநிதி மாறனிடமும் கோபாலிடமும் சட்டப்படி கோர முடியும்.

நித்யானந்தா மீது சட்டப்படி வைக்கக்கூடிய குற்றச்சாட்டு என்னவாக இருக்க முடியும் ? செக்‌ஷன் 420ஐத் தவிர வேறு எதுவும் இல்லை. ஏமாற்றுதல், நம்பிக்கைத்துரோகம் என்று சொல்லல்லாம். அந்தக் குற்றச்சாட்டையும் அவரது பக்தர்கள்தான் வைக்க வேண்டும். பிரும்மச்சரியத்தை உபதேசித்து எங்களை வழிநடத்திவிட்டு நீ இப்படி கிருஹஸ்தனாக இருந்திருக்கிறாயே என்ற குற்றச்சாட்டைத்தான் நியாயமாக வைக்கமுடியும்.

சொல் ஒன்று செயல் வேறு ஆக இருந்து ஏமாற்றியதுதான் நித்யானந்தாவின் குற்றம். ஆனால் இந்தக் குற்றம் உயர் பதவிகளில் இருப்பவர்கள் முதல் வட்டச் செயலாளர் வரை தமிழக அரசியலில் இருக்கும் ஏராளமானவர்கள் தொடர்ந்து செய்துவருவதுதான். அவர்கள் ஆதாரத்தோடு சிக்குவதில்லை. நித்யானந்தா சிக்கிவிட்டார்.

நித்யானந்தா மாதிரி போலி சாமியார்கள் மக்கள் ஆதரவுடன்தான் வளர்கிறார்கள். மக்கள் ஆதரவு செயற்கையாக ஊடகங்கள், பத்திரிகைகள் மூலம் உருவாக்கப்படுகிறது.


அரசியல்வாதிகள் பின்பற்றும் அதே உத்திகளைத்தான் இந்த போலி சாமியார்களும் பின்பற்றுகிறார்கள். அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள்; இவர்களால் நம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்ற விரக்தி நிலையில் இருக்கும் மக்கள், கடவுளையும் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு வரும் சாமியார்களையும் நம்ப ஆரம்பிக்கிறார்கள். இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் என்ற உண்மையை அவ்வப்போது பிரேமானந்தா, ஜயேந்திரா, நித்யானந்தா போன்றவர்கள் உணர்த்தினாலும் மக்கள் அடுத்த சாமியாருக்குக் கப்பம் கட்டத் தயாராகிவிடுகிறார்கள். ஊடகங்களும் பத்திரிகைகளும் சாமியார்களின் ஏஜண்ட்டுகளாக வேலை பார்ப்பதே சிக்கலுக்குக் காரணம்.

உடல் நலம், மன நலம் இவை இரண்டிற்காகவும் எந்த சாமியாரிடமும் செல்லத் தேவையில்லை. இரண்டுமே நம் கையிலேயேதான் இருக்கின்றன என்ற தெளிவு குடும்பத்துக்குள்ளும் பள்ளிக் கல்வியிலும் கிடைக்குமானால், பல சிக்கல்கள் தீர்ந்துவிடும்.

நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ விவகாரத்தில், மிகப் பெரிய குற்றவாளிகளாக நான் கருதுவது சன் டி.வி அதிபர் கலாநிதி மாறனையும் நக்கீரன் அதிபர் கோபாலையும்தான். குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கத் தகுதியற்ற வீடியோ காட்சிகளை ஒளிபரப்புவதற்கு முன்னால், இவை சிறுவர் பார்க்கத் தகுதியற்றவை என்று அறிவிப்பு வெளியிடுவது உலக முழுவதும் டி.வி.சேனல்களின் நெறிகளில் ஒன்று. அதை சன் டி.வி. கடைப்பிடிக்கவே இல்லை. நக்கீரன் போன்று கிளுகிளுப்புக்காக இந்த விஷயங்களைப் பயன்படுத்தும் பத்திரிகைகள்தான் , இன்வெஸ்ட்டிகேட்டிவ் ஜர்னலிசம் என்ற துறைக்கே அவமானத்தை ஏற்படுத்துகின்றன்.

குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படவேண்டியது நித்யானந்தா மட்டுமல்ல, கலாநிதி மாறனும் கோபாலும்தான். ஆபாசப்படங்களை வெளியிட்டு சமூகத்தை சீரழிக்கவேண்டாமென்று தொலைக்காட்சிகளையும் பத்திரிகைகளையும் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார். நித்யானந்தாவுக்கு மட்டும் வழக்கு. கலாநிதிக்கும் கோபாலுக்கும் மட்டும் வேண்டுகோளா ? இவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யும் நாணயம் வேண்டுமென்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்

- ஞானி

நன்றி :http://www.gnani.net

இசைஞானி இளையராஜாவின் இன்னொரு முகம்..!

இசைஞானி இளையராஜாவின் இன்னொரு முகம்..!


அகி மியூஸிக் தொடங்கி இப்பொழுது ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த ஐந்து வருடமும் மிகப்பெரிய போராட்டக் காலங்கள். இன்னமும்தான். எப்படி இந்த இசைக் கனவு எனக்கு நனவானது என்பது ஒரு சுவாரசியமான கதை. இளையராஜா அவர்களை தவிர்த்து சொல்லிவிட முடியாத கதை. இளையராஜாவை எனது வாழ்விலிருந்து அகற்ற முடியாது. அதேபோல் அகி மியூஸிக்கின் வளர்ச்சியையும், இளையராஜாவை தவிர்த்து என்னால் நினைவுக்கூற முடியாது.

மேலும் அறிய
இசைஞானி இளையராஜாவின் இன்னொரு முகம்..!

இளையராஜா

இசைஞானி

தேனி மாவட்டம் பண்ணபுரத்தில் பிறந்த இசைஞானியின் இயற்பெயர் ஞானதேசிகன் என்கிற ராசையா. ஜூன் 2, 1943-ல் பிறந்தார். தனது மிக இளம் வயதிலேயே ஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்றவர், இன்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை உலகிலேயே வாழ்கிறார், தன்னைப் பற்றிய எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்படாமல்! ராஜாவின் முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 33 வருடங்களாகிறது. இந்த 33 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிப் படங்களிலும் ராஜாவின் ஆர்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு.

மலேஷியா வாசுதேவன் என்ற அற்புதமான பாடகர் தொடங்கி எத்தனையோ கலைஞர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியவர் இளையராஜா. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு. ஒரு முறை இத்தாலியில் இளையராஜா நிகழ்த்திய இசை நிகழ்ச்சியில் அவர் வாசித்த 'ஒன் நோட்' இசைத் துணுக்கில் அடங்கியிருந்த நுட்பத்தைப் பார்த்து, பிரபல இசை விமர்சகர் டங்கன் கிளண்டே, "இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்" என்று எழுதினார். இந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, "இளையராஜா வேலி தாண்டாத வெள்ளாடு மாதிரி... அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா, சுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை மரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர். சிந்து பைரவியில் 'மரிமரி நின்னே...'வை அவர் கொடுத்த அழகு, நம்ம இசை மரபு எந்த அளவு சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்கிறது என்பதற்கான அடையாளம்" என்றார்.



சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் ஆரட்டோரியோ ஒலித் தட்டை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க இளையராஜாவை அழைத்துச் சென்றார் வைகோ. அப்போது, 'சார்... இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர்!' என்று இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் வைகோ. அதற்கு பிரதமர் சொன்ன பதில்: "I Know...Mr. Vaiko". எந்த விருதையும் 'வாங்காத' அல்லது விருதுக்கு வணங்காத உயர்ந்த கர்வத்துக்கு சொந்தக்காரர் இசைஞானி.

தனது இசையை சர்வதேச அரங்கில் லாபி பண்ண வேண்டும் என்ற 'திறமையை' வளர்த்துக் கொள்ள இன்றுவரை முயற்சித்தவரில்லை அவர். இருந்தும் மூன்று தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார் (சாகர சங்கமம், சிந்து பைரவி மற்றும் ருத்ர வீணை). ஆனால் ஆறு முறை அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள் இறுதி நேர 'ஜூரி ஆட்டத்தில்' கிடைக்காமல் போயிருக்கின்றன (மூன்றாம் பிறை, காதல் ஓவியம், நாயகன், தேவர் மகன், காலாபாணி மற்றும் ஹே ராம்).

இந்திப் படவுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இளையராஜாவின் இசையை அப்பட்டமாகக் காப்பியடித்தே பிழைப்பை ஓட்டுகின்றனர் பல இசையமைப்பாளர்கள். பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் தனது 'போல் ராதா போல்' (ஓ ப்யா ப்யா...) படங்களில் ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களை அப்படியே உல்டா செய்து பெயர் வாங்கினார். அனாரி (சின்னத்தம்பி), விராசட் (தேவர் மகன்) படங்களில் அப்படியே ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர் பாலிவுட்டில். இந்த லிஸ்ட் ரொ...ம்ம்ம்பப் பெரியது! இதுபற்றி ஒரு முறை ராஜாவிடம் கேட்டபோது, 'விடுங்கய்யா... இதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சா, இசை அமைக்க நேரம் இருக்காது. உருவாக்கிக் கொடுக்கறது என் சுபாவம்... திருடுவது அவர்கள் சுபாவம். எதில் யாருக்கு இன்பமோ அதைத் தொடர்கிறார்கள்!," என்றார் அமைதியாக.

இன்றைக்கு புதிய படங்களில் இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசையைப் பயன்படுத்துவதே ட்ரெண்டாகி விட்டது. சுப்பிரமணியபுரம், பசங்க, சர்வம் என பல படங்களில் 'இசை - இளையராஜா' என்று போடும் அளவுக்கு ராஜாவின் முந்தைய இசைக் கோர்வைகளைப் பயன்படுத்துவதைக் காணலாம்.

ராஜா என்ற கலைஞனின் இசை காலத்தை வென்றது என்பதை உணர்த்தும் செயலாகவே இதை பலரும் பார்க்கிறார்கள். சர்வதேச அளவில் சிம்பனி மற்றும் ஆரட்டோரியோ ஆகிய இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான் என்பது பிரிட்டன் இசை நடத்துடன் ஜான் ஸ்காட்டின் கருத்து.

ராஜா இசையமைத்த சிம்பனி இசை வெளிவராததில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவது உண்மையே. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை ராஜா சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. இதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'என்றைக்கு அந்த இசை வெளிவர வேண்டும் என்று விதி இருக்கிறதோ அன்றைக்கு வந்துவிட்டுப் போகட்டும்' என்றார். அந்த சிம்பனி இசை வெளியீட்டு உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான திருவாசம் இசைக் கோர்வை, ராஜாவின் ஆரட்டோரியோ வடிவம். "ஒருவன் ஒழுக்க சீலனாக, நல்ல எண்ணம் கொண்ட மனிதனாக மாற ராஜாவின் இந்த திருவாசகம் இசைத் தொகுப்பை தினமும் காலையில் கேட்டால் போதும்" என உளமாரச் சொன்னவர் இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர்.

காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இசை அன்பர்கள் பலருக்கும் அவரது 'ஹவ் டு நேம் இட்', 'நத்திங் பட் விண்ட்' பேன்ற வெகு சில ஆல்பங்கள்தான் தெரியும். ஆனால் உண்மையில் 30க்கும் ,சினிமா இசை தவிர்த்த ஆல்பங்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது. 'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை!' என்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து. இசைஞானியின் சுவையான வாழ்க்கை வரலாறு தரவிறக்க மேலே உள்ள இசைஞானியின் படத்தை சொடுக்கவும். இசைஞானியை சந்திக்க விரும்புபவர்கள் முன் அனுமதி பெற்று கீழ்கண்ட விலாசத்தில் சந்திக்கலாம்.

இளையராஜா 38,முருகேசன் தெரு தியாகராய நகர். ராகவையா ரோடு அருகில் சென்னை-17 போன்:-+91-44-828 3209

BBC Article about illayaraja...