ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்!

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்! என்ற தலைப்பில் வந்த கூட்டாஞ்சோறு நகைச்சுவை பதிவு :-)


ஜெய் ஹோ ஃபிலிம்ஸ்

நேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.

கலை நிகழ்ச்சி:
நமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.

முகத்திலே பரு
முளைக்காத சிறு உரு
ஆனாலும் கருவிலே திரு
அதற்கு காரணம் -
கலைஞர் என்ற கற்பகத் தரு
சளைக்காமல் போட்ட எரு!
உன்னிடம் சேர்ந்தாள் செந்திரு -
என்று பாற்கடலான் தொடுப்பான் செரு!

இந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு? I don’t understand this Tamil!” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.


கலைஞர் கேள்வி பதில்:
கம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்?

ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.

பத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது?

குறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா? உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.

பத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா?

சட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.

இருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே?

கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.

கலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.

ஜெயலலிதா கருத்து:
இதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ.பி. பன்னீர்செல்வம் பயந்து பயந்து பணிவோடு கருத்து தெரிவித்தார்.

விஜயகாந்த் பேட்டி:
இப்படி தன குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

ராமதாஸ் கருத்து:
கூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.

சத்தியமூர்த்தி பவனில் கூட்டம்:
இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவருகிறது.

துக்ளக் தலையங்கம்:
குடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.

கலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார்? வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார்? ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்!

டி. ராஜேந்தர் பேட்டி:
வாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு சிங்கண்டா சிம்பு, வச்சுக்காதே வம்பு என்று எச்சரித்தார்.

ஜூவியில் கழுகு ரிப்போர்ட்:
சங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

அழகிரி குமுறல்:
என் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.

கொசுறு செய்தி:
ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில் என் பேரு கலாநிதி, சன் டிவி உங்க தலைவிதி, மிச்ச சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.
( நன்றி: http://koottanchoru.wordpress.com )

சர்ச்சில் இன்னொரு ஹிட்லர்

லட்சக் கணக்கான மக்களின் சாவுக்குக் காரணமாக இருந்த ஹிட்லருக்கும், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. வங்காளத்தில் 1943ல் ஏற்பட்ட பெரும் பட்டினிச் சாவுகளில் சுமார் 30 லட்சம் மக்கள் பட்டினியால் சாவதற்குக் காரணமாக இருந்தவர் சர்ச்சில்தான் என்று இந்திய விஞ்ஞானியும் எழுத்தாளருமான மதுஸ்ரீ முகர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இயற்பியல் படித்து விட்டு உயர் படிப்புக்கு அமெரிக்கா சென்ற மதுஸ்ரீ சயண்ட்டிஃபிக் அமெரிக்கன் இதழின் முன்னாள் ஆசிரியர். தற்போது ஜெர்மனியில் வசிக்கும் மதுஸ்ரீ இதற்கு முன்பு அந்தமான் தீவுகளில் வாழும் ஆதிவாஅசிகள் பற்றிய நூலை எழுதியிருக்கிறார்.
வங்காளப் பஞ்சம் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் தன் ஆய்வைத் தொடங்கிய மதுஸ்ரீ பிரிட்டிஷ் நூலகத்தில் இருக்கும் பல்வேறு ஆவனங்களை ஆரய்ந்ததில் முப்பது லட்சம் மக்களின் சாவுக்கு சரிச்சில் பொறுப்பேற்ருதான் ஆகவேண்டும் என்ர முடிவுக்கு வந்தார். எனவே தன் நூலுக்கு சர்ச்சிலின் ரகசிய யுத்தம் ( சர்ச்சில்ஸ் சீக்ரெட் வார்) என்றே பெயரிட்டிருக்கிறார்.

சர்ச்சிலுக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் உறையூரில் தயாரித்த சுருட்டுகள் மிகவும் பிடித்தவை. ஆனால், இந்தியர்களை அறவே பிடிக்காது. ஹிட்லருக்கு எப்படி யூதர்கள் மீது வெறுப்பு இருந்ததோ, அதே போல சர்ச்சிலுக்கும் இந்தியர்கள் மீது கடுமையான இனத் துவேஷம் இருந்தது. லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரான காந்தியை, அரை நிர்வாண பக்கிரி என்று வர்ணித்தது சர்ச்சில்தான். இந்தியர்களால் தஙகளைத்தாங்களே ஆளமுடியாது. சுதந்திரம் கொடுத்தால் சிதறி சின்னாபின்னமாகிப் போய்விடுவார்கள் என்று சொன்னார் சர்ச்சில். இன்று அவருடைய பிரிட்டனில் சுதந்திர இந்தியாவில் கல்வி பெற்று தகுதியடைந்த இந்திய டாக்டர்களுக்குத்தான் மிகப் பெரிய கிராக்கி.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது பிரிட்டிஷ் மக்களின் ஹீரோவாக சர்ச்சில் இருந்தார். ஆனால் யுத்தம் முடிந்ததும் நடந்த தேர்தலில் அவர் கட்சி ஆட்சியை இழந்தது.

சர்ச்சிலுக்கு இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் இருந்த வெறுப்புக்கு அளவே இல்லை.1040கஇல் முஸ்லிம் லீக் உருவாகி காங்கிரசுக்குப் போட்டியாக அரசியல் செய்தபோது, சர்ச்சிலின் கருத்து என்ன தெரியுமா? ‘ரொம்ப நலலது. சிக்கிரமே ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அடித்துக் கொண்டு சாகட்டும் ரத்தக் களறி ஏற்படட்டும்.”

அப்படிப்பட்டவர் 1943ல் வங்காளத்தில் பெரும் பட்டினிச்சாவுகள் ஏற்பட்டபோது, மூர்க்கத்தனமாக உதவி செய்ய மறுத்தார் என்பதை மதுஸ்ரீ தன் ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பட்டினிச் சாவுகள் மிகவும் கொடுமையானவை. உண்மையில் உணவு போதாததால் மட்டுமோ, அடுத்த விளைச்சல் சரியாக நடக்காததினால் மட்டுமோ மக்கள் சாகவில்லை. உனவு போதாமல் போனதற்குக் காரணம் பிரிட்டிஷ் ராணுவம்.

சர்ச்சிலின் அரசு வங்காளத்தில் இருந்த எல்லா கோதுமையையும் தன் ராணுவத்துக்கு வாங்கி முடக்கத் தொடங்கியது. இதனால் வெளி மார்க்கெட்டில் அரிசி உடபட எல்லா தானியங்களின் விலைகளும் ஏறின. பர்மாவிலிருந்து அரிசி வருவது வழக்கம். அதை வரவிடாமல் சர்ச்சிலின் அரசு செய்துவிட்டது. ஜப்பானியர்கள் பர்மா வழியே நுழைந்தால், அவர்கள் வசம் ஒரு படகு, மாட்டு வண்டி, யானை, கார் எதுவும் கிடைக்கக் கூடாதென்று முன்கூட்டியே வங்க பர்மா எல்லைகளில் இருந்த எல்லாவிதமான வாகன வசதிகளையும் அங்கிருந்த அரிசியையும் கூட பிரிட்டிஷ் ராணுவம் கைப்பற்றிவிட்டது. இந்த படகுகளிலும் வண்டிகளிலும்தான் பர்மாவிலிருந்து அரிசி வரவேண்டும். அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.

தனியார் சரக்குக் கப்பலகள் முதல் ராணுவக் கப்பலகள் வரை இந்தியப் பெருங்கடலைல் இருந்த எல்லா கப்பலகளையும் ராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமையை வரவழைத்து வங்காளத்துக்குத் தரும்படி வைசிராய் லின்லித்கோ சர்ச்சிலைக் கேட்டார். சர்ச்சில் மறுத்துவிட்டார். இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகிகள் அமெரி, வேவல் ஆகியோரும் சர்ச்சிலுக்கு இங்கிருக்கும் மோசமான நிலையைத் தெரிவித்து உடனே உணவு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி கேட்டார்கள்.

“பஞ்சத்தால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், எப்படி காந்தி மட்டும் இன்னமும் சாகாமல் இருக்கிறார் ?” என்று சர்ச்சில் பதில் தந்தி அனுப்பினார். காந்தி, பாவம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் தொடங்கியது முதல் 1944 வரை சிறையில் இருந்தார்.

ஆஸ்திரேலியாவும் கனடாவும் உணவு அனுப்பத் தயாராக இருந்தபோதும் சர்ச்சில் அதற்குக் கப்பலகள் தர மறுத்துவிட்டார். எல்லா கப்பல்களும் யுத்தத்துக்கக தேவைப்படுவதாக அவர் சொன்னார். உண்மையில் அமேரிக்கக் கப்பலகள் முதல் எல்லாமே அப்போது சர்ச்சில் அரசின் கீழ்தான் இருந்தன. உணவுக் கப்பல்களையெல்லாம் பிரிட்டனுக்கு ராணுவத்துக்கு தானியங்கள் எடுத்துச் செல்லவும் , யுத்தம் முடிந்த பிறகு கிரீசிலும் ஐரோப்பாவிலும் தேவைப்படக் கூடிய உணவுகளை ஸ்டாக் செய்வதற்கும் சர்ச்சில் அனுப்பிக் கொண்டிருந்தார். இந்தியாவுக்கு அனுப்பப் போதுமான கப்பலகள் இருந்தன என்பதை அப்போதைய கப்பல் நடமாட்ட ரிகார்டுகளிலிருந்து மதுஸ்ரீ அமபலப்படுத்தியிருக்கிறார்.

உனவு தானியக் கப்பல்கள் வங்கத்துக்கு வருவதாகத் தெரிந்தாலே, உள்ளூரில் பதுக்கி வைத்திருப்பவர்கள் பொருளை வெளியே விட்டு விலைகள் விழ ஆரம்பிக்கும் என்று இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகிகள் சர்ச்சில் அமைச்சரவைக்குச் சொன்னதை சர்ச்சில் கண்டுகொள்ளவே இல்லை. ஜப்பான் வசம் பர்மா இருந்தபோதும் வங்கத்துக்கு அரிசி அனுப்ப ஏற்பாடு செய்ய தான் தயார் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அறிவித்தார். அந்த செய்தியையே வெளியிடக் கூடாது என்று சர்ச்சில் அரசு சென்சார் செய்துவிட்டது.

விளைவாக வங்காளத்தின் கிராமங்களிலெல்லாம் மக்கள் உணவு இல்லாமல் பட்டினியில் தினசரி 5000, 6000 பேஎர் என்று தெருக்களில் செத்து விழுந்துகொண்டிருந்தார்கள். அரிசி வடித்த கஞ்சித் தண்ணீரைப் பிச்சையாகக் கேட்டு கொல்கத்தா நகர வீதிகளில் நுழைந்த கிராம மக்கள் பெரிய பெரிய ஓட்டல்களின் வாசலில் செத்து விழுந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவெங்கும், தமிழ்நாடு உடபட, பெரியதும் சிறியதுமாக சுமார் 40 பஞ்சங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எல்லாமே பிரிட்டிஷ் சுரண்டலினால் ஏற்பட்டவைதான். மழை பொய்த்ததால் ஏற்பட்ட இழப்பைக் கூட ஈடு செய்ய அரசிடம் தானியங்கள் இருந்தன. ஆனால் பதுக்கல்காரர்கள் விலையை ஏற்ற அனுமதித்தது. பெரும் பணம் இருந்தவர்கள் மட்டும் தப்பினார்கள். ஏழைகள் ஈசல் போல செத்து விழுந்தார்கள்.

வங்கத்தில் மக்கள் செத்து விழுந்தபோது கூட இந்தியாவிலிருந்து கோதுமையையும் அரிசியையும் பிரிட்டன் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. ஆறு லட்சம் டன் தானியங்கள் தேவை என்று வைசிராய் கேட்டார். சர்ச்சில் அரசு கடைசியில் கொடுத்தது வெறும் 30 ஆயிரம் டன்தான். ஆனால் 71 ஆயிரம் டன் அரிசியை இலங்கையில் ரப்பர் தோட்டங்களுக்கு அனுப்பிற்று.

ஏழாண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு மதுஸ்ரீ இந்த நூலை எழுதியிருக்கிறார். முக்கியமான விஷயம், சர்ச்சில் அரசுக்கு எதிராக அவருக்குக் கிடைத்த ஆவணங்கள் எல்லாமே பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்களில் இருந்துதான். இதுதான் நமக்கு அவர்களுக்கும் உள்ள முக்கியமான வித்யாசம். இன்னும் கூட நெருக்கடி நிலை பற்றிய ஆவணங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. சம காலத்திலேயே பல ஆவணங்களை திருத்தியும் மறைத்தும் வைக்கும் பழக்கம் நம் நிர்வாகங்களுக்கு இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டால் மறுப்பதற்கும் திரிப்பதற்கும் தயார் நிலையில் இருக்கிறது நிர்வாகம். இந்தச் சூழ்நிலையில் இன்றைய பல அவலங்களை நாளைய வரலாற்றாசிரியர்கள் தோண்டியெடுக்கக் கூட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

அப்போது இன்னொரு ஹிட்லர் என்று நாம் அழைக்க வேண்டியவர்களையெல்லாம், இன்னொரு காந்தி என்று அழைப்பதற்கு மட்டுமே கூட ஆவணங்களைத் தயார் செய்துவைத்துவிட்டுப் போகும் ஆபத்து இருக்கிறது !


Thanks : www.gnani.net

தமிழகத்தின் மகா கோடீஸ்வரர் கலாநிதி மாறன்..

பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது.

உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டுக்காரர் ஆகியுள்ளார்.





இந்தியாவில் உள்ள இந்த 49 பில்லியனர்களின் சொத்து மதிப்பையும் போர்ப்ஸ் தனித்தனியே கணக்கிட்டு கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த 49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்படுகிறது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி!

இந்திய அரசாங்கத்தின் 2010-11ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம்.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 251.4 பில்லியன் டாலர்.

இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையில் சுமார் 88.34 சதவீதம்.

அந்த 49 பெருங்கோடீஸ்வரர்கள்...!

உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. சொத்து மதிப்பு 2,900 கோடி டாலர்.

அம்பானிக்கு அடுத்தபடியாக உலக வரிசையில் 5ம் இடத்தை பிடித்து இந்தியாவில் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ஆர்சிலர் மிட்டல் லட்சுமி மிட்டல் (2870 கோடி டாலர்).

இந்தியாவின் 3வது பெரிய பணக்காரர் விப்ரோ அசிம் பிரேம்ஜி (1700 கோடி டாலர்). அம்பானி சகோதரர்களில் ஒருவர் உலக வரிசையில் 4வதும், மற்றொருவர் இந்திய வரிசையில் 4வது இடத்தையும் பிடித்துவிட்டனர்.

1370 கோடி டாலருடன் உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார் அனில் அம்பானி.

இவர்களைத் தொடர்ந்து எஸ்ஸார் குரூப்ஸ் ஷாஷி அண்ட் ரவி ரூஜா சகோதரர்கள், சாவித்திரி ஜிண்டால், டிஎல்எஃப் குஷால் பால் சிங், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா, பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், வேதாந்தா அணில் அகர்வால் உள்ளனர்.

இந்தியாவில் 11வது இடத்தில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ்ஜும் அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானி, சன் பார்மாவின் திலிப் சங்க்வி, எச்சிஎல் ஷிவ் நாடார், ஜிஎம்ஆர் ஜி.எம்.ராவ், ரான்பாக்ஸியின் மால்விந்தர் அண்ட் ஷிவிந்தர் சிங் சகோதரர்கள், கோடக் மஹிந்தரா உதய் கோடக் உள்ளனர்.

தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்

தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.

44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 2.9 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.

தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.

மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு.

சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.




அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா (ஜீ என்டெர்டெயின்மென்ட்), பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின், 'லேண்ட்மார்க்' மிக்கி ஜக்தியானி, டோரென்ட் பவர் நிறுவனத்தின் சுதிர் சமீர் மேத்தா சகோதரர்கள் போன்றவர்கள் உள்ளனர்.

பெருகும் பணக்காரர்கள்...

இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.

அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்திய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.

பணக்காரர்கள் தாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க தயாராக இருப்பதில்லை.

இயற்கை பேரிடர் போன்ற சிக்கலான தருணங்களில் சக மக்களுக்கு உதவுவதில் இந்தியாவில், அரசாங்கங்கள் தான் முன்னணியில் உள்ளன.

இதுபோன்ற சமயங்களில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 65 சதவீதத்துக்கும் மேல் நிதி திரட்டப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் எஞ்சிய தொகை திரட்டப்படுகிறது. மிகவும் சொற்ப அளவுக்கே பணக்காரர்கள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருப்பதாக பெயின் அண்ட் கோ நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற பேரிடர் நிவாரண நிதிகளில் தனி நபர்கள், கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் 75 சதவீத நிதி திரட்டப்படுகிறது