அண்ணா ஹஜாரே... ஆர்.டி.ஐ. முதல் லோக்பால் வரை

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் 'மாதிரி சிற்றூர்' என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.
ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை...
* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், 'அன்னா ஹசாரே' என்று அழைக்கப்படுபவர்.
* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.
* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.
கிராம மேம்பாட்டுப் பணி...
* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.
பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, 'ஷ்ரம்தன்' என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.
* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.
* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.
* 1998-ல் சிவசேனா - பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தகவல் அறியும் சட்டம்...
* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்...
நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச - ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.
இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து 'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 'ஜன் லோக்பால் மசோதா' என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.
இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.
ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.
லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.
அன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.
"இது, உங்களின் வெற்றி," என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, "இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்," என்று முழங்கியிருக்கிறார்!


அன்னா ஹசாரேவின் வலைத்தளம் : http://www.annahazare.org/


Source : http://www.vikatan.com/

கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்து - ஒரு ட்ரைலர்

கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!
'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.
அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்​காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.

அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் பிரதமர் பேஸ்தடித்து​விட்டார் என்கிறார்கள்.
''கோபாலபுரம் வீடும் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள இடமும் மட்டும்தான் தலைவர் பெயரில் உள்ளது. இதை தலைவரே பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் அரசியல் மூலம்தான் இவை வந்தது என்று பொத்தாம் பொதுவாக கணக்கிடுவது தவறானது. பொதுவாக சொத்துகள் வாங்கும் போது விலை குறைவாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஏறிய விலையின் மதிப்பை வைத்து தற்போது சம்பாதித்ததாகச் சொல்வது பூதாகாரமாக்கப் பயன்படுமே தவிர உண்மை அல்ல!'' என்று தி.மு.க-வினர் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

இது தீண்டாமை தேசம்!

தீண்டாமை என்பது பலருக்குச் சென்ற நூற்றாண்டின் கொடுங்கனவாகவே இருக்கும். 'இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க?’ என்ற குரல்களுக்கும் 'சர்ட்டிஃபிகேட்டில் சாதி கேட்பதால்தான் சாதி இருக்கிறது’ என்கிற குரல்களுக்கும் தீண்டாமையின் வலியும் வடுவும் தெரியாது. இந்திய வரலாற்றுப் பாதை முழுக்கச் சேறு அப்பிய கால்களின் சுவடுகளாக இன்னமும் இருக்கிறது தீண்டாமை. அன்பு, மனிதாபிமானம், உபசரிப்பு என்று விழுமியங்களின் உறைவிடமாகக் கட்டப்பட்டு இருக்கும் கிராமங்களுக்கு விஷம் தோய்ந்த ஒரு கோரப் பல் இருக்கிறது என்பதை நம்புவதற்கு உங்களுக்குச் சிரமமாகத்தான் இருக்கும்!
சமீபத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ''கடந்த தி.மு.க. ஆட்சி யில் தமிழகத்தின் சமூகக் கொடுமைகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய சமூகச் சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது. அதில் பேராசிரியர் மா.நன்னன், பொன்னம்பல அடிகள், நான் உள்ளிட்ட பலர் இடம் பெற்றோம். நான்கைந்து முறை பல்வேறு விஷயங்களை விவாதித்த அந்தக் குழு, பின்பு என்ன ஆனது எனத் தெரியவில்லை. அரசுக்கும் அறிக்கை ஏதும் அளிக்கவில்லை. எனவே, தற்போதைய அ.தி.மு.க. அரசு மீண்டும் அதே போன்ற ஓர் ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும்!'' என்று வேண்டுகோள் விடுத்தவர், ''தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன'' என்றும் கவலை தெரிவித்து இருக்கிறார்.
ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசியபோது, ''சமூகச் சீர்திருத்தக் குழு திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் தீண்டாமை குறித்து மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அந்த முயற்சிகள் தொடரவில்லை. கோவை மாவட்டத்தில் மட்டும் 22 வகையான தீண்டாமை வடிவங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் சவுக்கடி, சாணிப்பால் போன்ற தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் போராடியதால், இப்போது அவை அங்கு இல்லாது ஒழிந்துவிட்டன. அது மாதிரியான செயல்பாடுகளை எல்லா இயக்கங்களும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்'' என்று வலியுறுத்தினார்.
85 வகையான தீண்டாமைகள் மட்டும் இல்லை, உண்மையில் தமிழகக் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட தீண்டாமைகள் உள்ளன. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் குறித்து எவிடென்ஸ் அமைப்பு ஓர் ஆய்வை வெளியிட்டு இருக்கிறது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் 213 கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இவை. அவற்றில் இருந்து சில மாதிரிகள் மட்டும் இங்கே...
213 கிராமங்களில் 70 கிராமங்களில் ரேஷன் கடைகளில் சாதியப் பாகுபாடு நடைமுறையில் உள்ளது. 23 கிராமங்களில் தலித் மக்கள் ஆதிக்கச் சாதியினருடன் ரேஷன் கடைகளில் ஒன்றாக வரிசையில் நிற்க முடியாது. 31 கிராமங்களில் ஆதிக்கச் சாதியினருடன் வரிசையில் நின்றாலும் தலித்துகள் அவர்களைத் தொடக் கூடாது. 2 சதவிகித நியாய விலைக் கடைகள் மட்டுமே தலித் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளன. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் பகுதிகளில் அமைந்திருக்கும் பிற ரேஷன் கடைகளுக்குத்தான் தலித் மக்கள் செல்ல வேண்டும்
24.09.2009 அன்று கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் காசியம்மாள், ரேஷன் கடை வரிசையில் நிற்கும்போது அவரது கை, ஆதிக்கச் சாதிப் பெண்மணி மீது பட்டதற்காக அவர் பொது இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்டார்.
தலித் மக்களின் பிணங்களை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல முடியாது. ஆதிக்கச் சாதியினரின் குடியிருப்புகளின் வழியாக எடுத்துச் செல்ல முடியாது ஆகிய தீண்டாமைகள் மயானம் தொடர்பாக நிலவுகின்றன. தலித் மக்களுக்குத் தனிச் சுடுகாடும் மற்ற சாதியினருக்குத் தனிச் சுடுகாடும் இன்னும் பல கிராமங்களில் உண்டு.
02.01.2011 அன்று தேனி அருகில் உள்ள கூழையனூ ரில் ராஜு என்கிற தலித் பெரியவரின் சடலத்தைப் பொது சுடுகாட்டில் அடக் கம் செய்யக் கூடாது என்று ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த மோதலில், 27.01.2011 அன்று சின்னாயி என்ற தலித் மூதாட்டி பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுக் கொல்லப்பட்டார். கூழையனூரில் அரசு அதிகாரிகளே உறுதிமொழிப் பத்திரம் ஒன்று எழுதி, தலித்களும் மற்ற சாதியினரும் தனித் தனி மயானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று எழுதிக் கையெழுத் திட்டு உள்ளனர்.
67 சதவிகிதக் கிராமங்களில் சலூன் கடைகளில் தலித் மக்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. 142 கிராமங்களில் தலித் மக்களுக்கு முடிவெட்டக் கூடாது என்று சாதிக் கட்டுப்பாடு உள்ளது. 13 கிராமங்களில் கத்தரிக்கோல், சீப்பு, கத்தி போன்றவை தலித்துகளுக்குத் தனியாகவும் மற்றசாதி யினருக்குத் தனியாகவும் பயன்படுத்தப் படுகின்றன. 25 கிராமங்களில் சலூன் கடை நாற்காலிகளில் தலித்துகள் அமரக் கூடாது
12.01.2008 அன்று உத்தமபாளையம் மார்க்கையன்கோட்டை கிராமத்தில் தன் குழந்தைகளுக்கு முடி வெட்டுவதற்குச் சலூன் உரிமையாளர் மறுத்ததால் பெரியசாமி என்னும் தலித் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார். அதனால் அவர் குழந்தைகள் முன்பே சாதி இந்துக்களால் தாக்கப்பட்டார்.
68 சதவிகிதக் கிராமங்களில் பொதுக் குழாயில் நீர் எடுக்கவும் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் தலித் மக்களுக்கு உரிமை இல்லை. 131 கிராமங்களில் தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் தனித் தனி நீர்நிலைகள் உள்ளன
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் 2009-ம் ஆண்டு சந்தோஷ்குமார் என்ற தலித் இளைஞர் பொதுக் கிணற்றில் குளித்ததற்காக 30 பேர் கொண்ட ஆதிக்கச் சாதிக் கும்பலால் தாக்கப்பட்டார்.
சில கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் தலித்துகளைத் தொட்டு மருத்துவம் பார்ப்பது இல்லை. மருத்துவமனை ஊழியர்களும் இத்தகைய தீண்டாமைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
மதுரை கீரிப்பட்டியைச் சேர்ந்த தலித் பெண் வசந்தமாளிகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்டு இருந்தபோது, அங்கு இருந்த ஊழியர் கொண்டைஊசியால் பனிக்குடத்தைக் குத்தி சேதப்படுத்தி இருக்கிறார். கருப்பை முற்றிலும் சிதைந்த நிலையில் அகற்றப்பட்டது. சிறுநீரகக் குழாயில் ஓட்டை விழுந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை!
29 கிராமங்களில் பள்ளிகளில் தலித் மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கோவையில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர், தலித் மாணவர்களை மைனஸ் என்றும் மற்ற மாணவர்களை ப்ளஸ் என்றும்தான் அழைப்பாராம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி அருகில் உள்ள எண்டப்புளி கிராமத்தில் தலித் சிறுவர்கள் பின் வரிசை இருக்கைகளில்தான் அமரவைக்கப்படுவார்களாம்.
பேருந்துப் பயணம் மற்றும் பேருந்து நிறுத்தங்களிலும் சாதிப் பாகுபாடு உண்டு. பேருந்து நிறுத்தங்களில் உள்ள இருக்கைகளில் தலித்துகள் அமரக் கூடாது என்கிற கொடுமையும் உண்டு. ஆதிக்கச் சாதி சிறுவர்களை தலித் முதியவர்கள் மரியாதையோடு அழைப்பதும், தலித் முதியவர்களைக்கூட ஆதிக்கச் சாதிச் சிறுவர்கள் மரியாதை இல்லாமல் அழைப்பதும் இன்றும் பெரும்பாலான கிராமங்களில் உள்ள நடைமுறை!
அஞ்சலகங்களில் தலித்துகள் நுழையக் கூடாது. தபால்காரர் தலித் குடியிருப்புக்குள் வர மாட்டார், தலித் குழந்தைகளுடன் ஆதிக்கச் சாதி குழந்தைகள் விளையாடக் கூடாது, பள்ளிக்கூடங்களில் தலித் குழந்தைகள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுவது என்று ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் முதல் அரசு அலுவலகங்கள் வரை தீண்டாமை அங்கீகரிக்கப்பட்ட கொடுமைதான் நிலவுகிறது.
தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு மற்ற சாதி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது, பல இடங்களில் தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு நாற்காலியில் அமர அனுமதி மறுப்பு போன்ற தீண்டாமைகளும் உள்ளன
''இவை வெறுமனே 213 கிராமங்களில் மட்டுமே ஆய்வு செய்த முடிவுகள். இன்னும் ஆய்வுக்கு உட்படாத கிராமங்களும் மாவட்டங்களும் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் தீண்டாமைக்கு உட்படாத கிராமங்களே கிடையாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால், அரசிடமோ இதுகுறித்த முறையான புள்ளிவிவரங் களும் கிடையாது. சொல்லப்போனால், உண்மையை மறைக்கும் பொய் விவரங்களைத்தான் அரசு வெளியிடும். 2009-ல் தமிழகத்தில் 384 கிராமங்களில் மட்டுமே தீண்டாமை நிலவுவதாகச் சொன்ன தமிழக அரசு, 2010-ல் 174 கிராமங்களில்தான் தீண்டாமை நிலவுகிறது என்கிறது. இந்த தீண்டாமையை விசாரிப்பதற்காக பி.சி.ஆர்(1955), எஸ்.சி, எஸ்.டி. சட்டம் (1989) ஆகியவை வழி செய்கின்றன. ஆனால், இந்தச் சட்டங்களின் அடிப்படையில் பெரும்பாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை. 2010-ல் தீண்டாமை வன்கொடுமை தொடர்பாக வெறுமனே தமிழகம் முழுவதும் 1,050 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளன'' என்று வேதனை தெரிவிக்கிறார் 'எவிடென்ஸ்’ கதிர்.
தீண்டாமையை ஒழிப்பதற்கு என்று திருச்சியில் தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் இயங்குகிறது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தியது பெரியார் திராவிடர் கழகம். தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இரட்டைக் குவளை முறையைக் கணக்கெடுத்து, இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டங்களையும் நடத்திய பெரியார் தி.க. சமீபத்தில் போராட்டம் நடத்திய இடம் கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம்.
காலம் மாறினால் தீண்டாமை மாறும் என்பது நமது நம்பிக்கையாக இருந்தாலும் உண்மையில், காலம் மாற மாற... சாதியும் தீண்டாமையும் அதற்கேற்பத் தன் வடிவங் களை மாற்றிக்கொள்வதே யதார்த்தமாக இருக்கிறது. கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள நல்லிசெட்டிபாளையம், அச்சம்பாளையம், அல்லிக்காரன் பாளை யம், செங்கப்பள்ளி, குருக்கிளையாம் பாளையம் கிராமங்களில் தலித் மக்கள் பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கக் கூடாது என்கிற 'மரபான’ தீண்டாமையோடு, அவர்கள் பொது இடங்களில் செல்போன் பேசக் கூடாது, பைக் ஓட்டக் கூடாது போன்ற 'நவீன’ தீண்டாமைகளும் தொடர் கின்றன.
1,000 பேரோடு பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை நடத்திய பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, ''இத்தகைய தீண்டாமைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அன்னூர் காவல் ஆய்வாளர், சமூகநீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உதவி ஆய்வாளர் இருவரும் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் 'அன்னூர் உள்வட்டத் தில் இரட்டைக் குவளை மற்றும் முடி திருத்த நிலையங்களில் தீண்டாமை இல்லை’ என்றும், இது தொடர்பாக 'தனிப்பட்ட நபர்கள் மீது எந்தவிதப் புகார்களும் வரவில்லை’ என்றும், 'அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி தாழ்த்தப்பட்ட நபர்கள் உரிமைப் பிரச்னை தொடர்பாக, தணிக்கை செய்யப்பட்டு வருவதாக’வும் எழுதியுள்ளனர். ஏப்ரல் 19-ம் தேதி, உயர் நீதிமன்றம் தீண்டாமை தொடர்பான வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில் 'எந்தப் பகுதியில் தீண்டாமை இருக்கிறதோ, அந்த மாவட்ட எஸ்.பி-யையும் கலெக்டரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்று தெளிவா கக் கூறியுள்ளது. ஆனால், இதுவரை அப்படியான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சட்டங்களின் மூலமாகவே மட்டுமே தீண்டாமையை ஒழித்துவிட முடியாது என்றாலும், கடுமையான சட்டங்களும் இத்தகைய சாதிப் பாகுபாட்டை ஒழிக்க ஒரு வழிதான்!'' என்கிறார் கொளத்தூர் மணி.
தலித் மக்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தலித் கட்சிகள், அந்தப் பிரச்னைகளைக் கைவிட்டு தேர்தல் அரசியல், தமிழ்த் தேசியம் எனத் திசை திரும்பும் அவலம் ஒருபுறம், மற்ற ஓட்டுக் கட்சிகளோ ஆதிக்கச் சாதியின் வாக்கு வங்கிக்காக தலித் மக்களின் பிரச்னைகளைப் பேச மறுக்கும் துயரம் மறு புறம். இவற்றுக்கு இடையில்தான் தலித் மக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கும் சாதிய இழிவோடு வாழ வேண்டி இருக்கிறது.
இத்தகைய தீண்டாமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே '2020-ல் இந்தியா வல்லரசு’, இளைஞர்களே கனவு காணுங்கள், மனித முகம்கொண்ட உலகமயமாக்கம், தகவல் தொழில்நுட்ப யுகம், இலவசத் திட்டங்கள் என்கிற குரல்களைக் கேட்கும்போது,


'ஒங்க தலைவன் பொறந்தநாளு போஸ்டர் ஒட்டவும் - ஒங்க
ஊர்வலத்தில தர்ம அடியை வாங்கிக் கட்டவும் -எங்க
முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க
இருந்தபடியே இருக்கணுமா
காலம் பூராவும்?

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே - உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதில எண்ணையை ஊத்துதே
எதை எதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க - நாங்க
எரியும்போது எவன் மசுரைப் பிடுங்கப் போனீங்க?’

என்கிற இன்குலாப்பின் 'மனுசங்கடா’ பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!


Source :Vikatan.com