ஊழலே ஆட்சியானால்...

இந்திய ராணுவத் தளவாடங்கள் கொள்முதலில் முறைகேடு என்பது 1948-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. 1948-ம் ஆண்டில், வழக்கமான நடைமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, அப்போது இங்கிலாந்தில் இந்திய ஹை-கமிஷனராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் இந்திய ராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்குவதற்கு ரூ. 80 லட்சம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்தத் தொகைக்கு ஏற்ப ஜீப்புகள் பெறப்படவில்லை என்று அப்போது நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்னை எழுப்பப்பட்டது.
இந்திரா காந்தி ஆட்சியில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கிய முறைகேடு, ராஜீவ் காந்தி அரசில் போஃபர்ஸ் ஊழல் பிரச்னை, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கார்கில் போருக்காக ஷூக்கள் வாங்கியது மற்றும் மரணமடைந்த வீரர்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் என்று ராணுவத்தில் தொடர்ந்து ஏதாவது ஓர் ஊழல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
இப்போது, இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் ஒரு புகாரை எழுப்பியுள்ளார். தரம் குறைவான 600 வாகனங்களை வாங்குவதற்கு ரூ. 14 கோடி லஞ்சம் தர ஒருவர் முன்வந்ததாக ஒரு பேட்டியில் அவர் கூறியதும், இதுகுறித்து ஏற்கெனவே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்குத் தெரிவித்தது மற்றும் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் ஆகியன ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் நாடாளுமன்றம் அல்லோலகல்லோலப்படுகிறது.
இத்தகைய தரம் குறைவான வாகனங்கள் ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் 7,000 உள்ளன என்றும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைக்கான வசதிகள் இல்லாத நிறுவனத்தின் இந்த வாகனங்களுக்கு மிகமிக அதிக விலை தரப்பட்டுள்ளது என்றும் தளபதி வி.கே. சிங் கூறியிருக்கிறார். 600 வாகனங்களுக்கே ரூ. 14 கோடி லஞ்சம் தர முன்வந்தார்கள் என்றால், 7,000 வாகனங்களுக்கு நிச்சயம் பத்து மடங்கு அதிகமாக லஞ்சம் பேரமாகப் பேசப்பட்டிருக்கும். இதைப் பற்றிய விசாரணைக்கு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்காதபோதிலும், அரசே முன்வந்து உத்தரவிட வேண்டும்.
ஆனால், தளபதி தம்மிடம் கூறியதை மக்களவையில் ஒப்புக்கொண்ட அமைச்சர் அந்தோனி, தவறுக்குத் தானே பொறுப்பு என்கிறார். அதே நேரத்தில் தளபதி எழுத்துமூலமாகப் புகார் தெரிவிக்காததால் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்பது அவரது வாதம். அதிகாரியாக இருந்திருக்க வேண்டியவர் அமைச்சராக்கப்பட்டிருக்கும் அவலம், வேறென்ன?
2012-13-ம் ஆண்டில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடமிருந்து வாங்க இருக்கின்றோம். 197 ஹெலிகாப்டர்கள் வாங்கப் போகிறோம். இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்நிலையில், இந்த விற்பனையில் எத்தகைய பேரம் முடிந்துள்ளது, நாம் பேசியிருக்கும் விலை சரியானதா, இல்லை நியாயமான விலையைக் காட்டிலும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளதா? என்கிற சந்தேகங்கள் இப்போது முன்னெப்போதையும்விட கூடுதலாக எழுகின்றன.
இந்திய விமானப் படைக்கு வாங்கப்படவுள்ள 126 ரஃபேல் போர் விமானங்களின் விலை ரூ. 70,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 2012-13 பட்ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. இதேபோன்று ஹெலிகாப்டர் கொள்முதலிலும் 10 சதவீதம் அல்லது 15 சதவீதம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மீதித் தொகையை ஒவ்வோராண்டும் செலுத்தியாக வேண்டும்.
ஒரு பொருள் தரமானதாக இருந்தாலும், தரம் குறைவாக இருந்தாலும், லஞ்சம் கொடுத்து விற்பதுதான் சாத்தியம் என்ற நிலைமை வந்த பிறகு, எந்த நிறுவனமும் தனது உற்பத்திச் செலவு அல்லது லாபத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை. கொடுக்கப்படும் லஞ்சத்தை விற்பனை விலையில் ஏற்றி வைத்து விடுகிறார்கள். இந்திய அரசு நியாயமான விலையில் கொள்முதல் செய்யவில்லை என்றால், கூடுதல் விலையைக் கொடுத்தாக வேண்டும். இந்தக் கூடுதல் விலை என்பது இந்திய மக்களின் பணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
2012-13 நிதிநிலை அறிக்கையில் வழக்கத்தைவிட கூடுதலாக 15 சதவீதம் அதிகமான தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. சென்ற நிதியாண்டில் ரூ. 1,64,415 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 1,93,407 கோடி ஒதுக்கீடு! இதற்குக் காரணம் இந்த ஆண்டு நிறைய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட- குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியதிருக்கிறது. பேரம் தொடங்கிய நாளில் இருந்த டாலரின் மதிப்பைக் காட்டிலும் தற்போது டாலர் மதிப்பு கூடியுள்ளதால், ராணுவத்துக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 28,992 கோடியால் பெரும் நன்மை விளையாது என்றும் கருதப்படுகிறது.
இந்திய விமானப் படையில் பல விமானங்கள் மிகவும் பழைமையானவை என்பதும், அதிநவீன ரக போர் விமானங்கள் தேவையாக இருக்கின்றன என்பதும் உண்மை. அதே போன்று, கடற்படையில் நிறைய நீர்மூழ்கிக் கப்பல்களின் தேவை இருக்கிறது. இவற்றை நவீனப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ராணுவத்துக்கு இருக்கிறது. நிறைய நிதிஒதுக்கீடும், கொள்முதலும் அவசியமாக இருக்கின்றன.
இந்நிலையில், ஊழல் இல்லாத ராணுவத் தளவாடக் கொள்முதல் உறுதிப்படுத்தப்படாவிட்டால், கொள்ளை போவது இந்திய மக்களின் வரிப்பணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். நமது அரசியல்வாதிகளும், ராணுவ உயர் அதிகாரிகளும் தளவாடங்களை வாங்குவதில் முறைகேடு செய்கிறார்கள் என்பது தெரிந்தால், தனது உயிரைப் பணயம் வைத்துப் போர்முனையில் எதிரிகளை நேரிடும் சிப்பாயின் மனநிலை என்னவாக இருக்கும்? தரக்குறைவான தளவாடங்களைக் கையூட்டுப் பெற்று நமது தலையில் கட்டிப் போர்முனைக்கு அனுப்புகிறார்களோ என்கிற சந்தேகம் ஒரு போர் வீரனுக்கு ஏற்படுமானால், அவன் எப்படி எதிரிகளை தைரியமாகவும் வீரத்துடனும் எதிர்கொள்ளத் துணிவான்?
எதில் எதிலெல்லாம் ஊழல் செய்வது என்பதில் நமது ஆட்சியாளர்களுக்கு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. தளவாட ஊழல் என்பது தேசியத் தலைகுனிவு

Source :

அரசின் முகத்தில் கரி

அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாத நிலைமையில், இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு கிளம்பியிருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று சொன்ன அதே தலைமை தணிக்கைக் குழுதான் இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.10.67 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

இந்த அறிக்கை இன்னும் முறைப்படி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனாலும், இந்தக் கூட்டத்தொடரில் நிச்சயமாக தாக்கல் செய்யப்படவுள்ள அறிக்கை என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த அறிக்கையின் உள்ளடக்கம் எப்படியோ பத்திரிகைகளில் வெளியாகி, தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளிதுமளிபட்டுக்கொண்டிருக்கின்றன.
தலைமை பொதுத் தணிக்கைக் குழு குறிப்பிட்டுள்ள குறைபாடு இதுதான்: ஏலத்தின் மூலமாக நிலக்கரி சுரங்கம் வெட்டும் நிலப்பரப்பை ஒதுக்கீடு செய்யாததால், 2004-முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.10.67 லட்சம் கோடி. 155 நிலக்கரிச் சுரங்க வயல் சுமார் 100 தனியார் நிறுவனங்களுக்கு எந்தவித முன்யோசனையும் இல்லாமல், அன்றைய நிலக்கரியின் விலையை கருத்தில் கொள்ளாமல், குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அரசுக்கு இந்த பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக, மதிய வேளையிலேயே தலைமை பொதுக்கணக்குத் துறை இதற்கான விளக்கம் அளித்து, அது பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. "இது வெறும் வரைவு அறிக்கைதான். இறுதி அறிக்கை இன்னும் தயாராகவில்லை' என்று விளக்கமளித்திருக்கிறது. பிரதமரின் பொறுப்பில்தான் நிலக்கரி நிர்வாகம் உள்ளது என்றாலும் இதுதொடர்பாக அவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கமளித்தார். இந்த வரைவு அறிக்கை அமைச்சர்களின் பார்வைக்கு வந்து அவர்களது விளக்கத்தைப் பெற்ற பிறகுதான் இறுதி அறிக்கை தருவார்கள் என்று கூறியுள்ளார்.
இது வரைவு அறிக்கையாகவே இருந்தாலும்கூட, இத்தகைய ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சில லட்சம் கோடி குறையலாமே தவிர, ஏலம் விடாமல் ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு இழப்பு ஏதுமே கிடையாது என்று நிச்சயமாகச் சொல்லிவிடப்போவதில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த ஒதுக்கீட்டுக்கு அவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும், பொறுப்பேற்கவும் வேண்டும்.
தலைமை கணக்குத்தணிக்கைக் குழு இந்த இழப்பைக் கணக்கிடும்போது, விலை உயரும் வாய்ப்புகளைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல் அன்றைய தேதியில் இருந்த நிலக்கரி விலையை மட்டுமே கணக்கில்கொண்டு இழப்பை மதிப்பிட்டாலும் ரூ.6.31 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று கூறுகிறது.
இந்திய மின் உற்பத்தியில் 55% நிலக்கரியைச் சார்ந்துள்ளது. இந்திய நிலக்கரியில் எரிசக்தியைக் காட்டிலும் சாம்பல் அதிகமாக இருப்பதால், இந்தோனேசியாவிலிருந்து நம் தேவையில் 30% நிலக்கரியை இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் உள்ள அனல் மின்நிலையங்களில் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக, இந்தோனேசிய நிலக்கரி, இந்திய நிலக்கரி இரண்டையும் கலந்து எரிபொருளாக்கி, சமாளிக்கிறார்கள்.
இந்நிலையில் நிலக்கரி அதன் எரிசக்தி அளவைப் பொருத்து 17 வகைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு தரமான, எரிதிறன் அதிகமுள்ள நிலக்கரி விலை மேலதிகமாகக் கூடிவிட்டது. நிலக்கரியைப் பொருத்தவரை தேவை பெருகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், மிகப்பெரும் அளவுக்கு நிலக்கரி வெட்டி எடுக்கவும், அதற்கான விலையைக் குறைவாக நிர்ணயிக்கவும், ஏலம் இல்லாமல் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசுக்கு எப்படி மனம் வந்தது?
நிலக்கரி விலை உயர்வைச் சமாளிக்க முடியாமல் பல அனல் மின்நிலையங்கள் தங்கள் மின் உற்பத்தி அளவைக் குறைத்துக்கொண்டுள்ளன. பல அனல் மின்நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் இதற்காகக் கடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்தி வைத்துள்ளன.
மின்கட்டண உயர்வுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று- நிலக்கரி விலை உயர்வு. இந்தோனேசிய நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர்கள். இந்த நிலையில், இந்திய நிலக்கரியில் எரிதிறனைக் காட்டிலும் சாம்பல் அதிகமாக இருந்தாலும்கூட, அதன் தேவை மிகமிக இன்றியமையாதது. அப்படியிருக்கும்போது இத்தனைப் பெரும் பரப்பை தனியாருக்கு மத்திய அரசு தனது விருப்பப்படி ஒதுக்கீடு செய்யும் என்றால், இதனை என்னவென்று சொல்வது?
ஒதுக்கீடு செய்யப்பட்ட 155 நிலக்கரிச் சுரங்க வயல் களில் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்கூட இந்திய நிலக்கரி நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. தனியார்தான் இந்த தேசத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு தனியார் மின் உற்பத்தியாளர் கூறுகிறார் என்றால் இந்தக் கூற்று நியாயமானதுதானா?
அரசுத்துறை நிறுவனங்கள் நிர்வாகச் சீர்கேடுகளாலும், தொழிற்சங்கங்களின் ஆதரவில் தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் மெத்தனத்தாலும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பது உண்மைதான். அதற்குத் தீர்வு நிர்வாகத்தைச் சீர்படுத்துவதும், தொழிற்சங்கங்களின் உதவியுடன் உற்பத்தித் திறனை அதிகரிப்பதும்தானே தவிர, கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து அவர்கள் கொள்ளை லாபம் அடைய வழிகோலுவதல்ல. மக்களை வஞ்சித்து, தேசத்தின் கனிம வளங்களைச் சூறையாட அனுமதிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தேவையில்லை.
தோண்டத் தோண்ட ஊழல்... முதலில் காற்றில் ஊழல். இப்போது கரியில் ஊழல். நமது ஊழ்வினை, வேறென்ன

Source : தலையங்கம்: அரசின் முகத்தில் கரி!