முட்டாள்தனம்...

மாவோயிஸ்டுகள் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை ஒடிசா மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கடத்தப்பட்டு இன்னும் மாவோயிஸ்ட் பிடியில் பிணைக் கைதியாக உள்ள இத்தாலியர் விடுவிக்கப்படவுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் தங்கள் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை விடுவிக்கவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு விலக்கிக் கொள்ளவும், அரசு அதிகாரிகளைக் கடத்திச் செல்வதுதான் இதுநாள் வரை நடைபெற்று வந்தது. இப்போதுதான் வெளிநாட்டவரைக் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் புதிய உத்தியைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் "ஆளுகை'க்கு உள்பட்ட செம்புலப் பகுதியில் அரசுப் பணிக்காகச் செல்லும் அதிகாரிகள் கடத்தப்படும்போது அவர்களை மீட்பதற்காக மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து ஏற்பதற்கும், வெளிநாட்டு அரசின் பிரதிநிதி என்கின்ற அடையாளம் இல்லாத சாதாரண சுற்றுலாப் பயணிக்காக, அதிலும் தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவித்திருந்தும் அதை சட்டைசெய்யாமல் அங்கே சென்ற இரு வெளிநாட்டவரின் பொறுப்பின்மைக்காக, 27 கைதிகளை - இதில் 8 பேர் தீவிர மாவோயிஸ்டுகள் - விடுவிப்பது என்பது அரசின் நடவடிக்கைக்கு எத்தகைய குந்தகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பண்டமாற்று முறையில்கூட, ஒரு பொருளின் மதிப்புக்கேற்ற இன்னொரு பொருள்தான் விலையாகக் கொடுக்கப்படும். இந்த இத்தாலியர்கள் இருவரும் யார்? இவர்களது பின்னணிதான் என்ன? சுற்றுலாப் பயணிகள் போகத் தடை செய்யப்பட்ட பகுதிக்கு இவர்கள் போக வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் பழங்குடியினருக்குச் சேவை செய்ய வந்தவர்களும் அல்ல! அப்படியானால், இவர்கள் இந்தக் கடத்தல் நாடகத்துக்குத் துணை போவதற்காகவே உள்நோக்கத்துடன் வந்த மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கலாமா? விடுதலை செய்யப்படவுள்ள 27 பேரைப் பிடிக்க இந்தியக் காவல்துறையும் ராணுவமும் சிந்திய ரத்தத்துக்கு விலை இந்த சாதாரண, வெட்டியாக வந்த வெளிநாட்டவர்களா?
பழங்குடியின மக்கள் காலாகாலமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த வனப்பகுதிகளை அழித்து, அவர்களை அங்கிருந்து விரட்டி, கனிமங்களை வெட்டி எடுத்து லாபம் கொழிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் தவறான கொள்கைகளை நமது மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கின்றன என்பதுதான் நமது கருத்தும். சுற்றுச்சூழலைப் பாதிப்பதுடன் நமது கனிமவளங்களும் கொள்ளைபோகும் போக்கை நாட்டுப்பற்றும், வருங்காலத்தில் அக்கறையும் உள்ள எவருமே ஏற்றுக் கொள்ள முடியாதுதான். இதெல்லாம் புரியாமல் இல்லை.
ஆனால், பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா போன்றவர்களையும் ஏன் மாவோயிஸ்டுகள் கடத்த வேண்டும்? நவரங்கபூரில் சில மாதங்களுக்கு முன்பு பழங்குடியினருக்கு நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஜகபந்து மஜ்ஜி என்பவரை அவர்கள் சுட்டுக் கொன்றது ஏன்? பழங்குடியினருக்கு ஆதரவாகத் தங்களைத் தவிர, யார் வந்தாலும் அவர்களைப் போட்டியாகக் கருதுவதும், அரசின் நல்ல நடவடிக்கைகளைக்கூடத் தடுத்துவிடப் பார்ப்பதும் ஏன்?
மாவோயிஸ்டுகளின் மிகப் பெரும் ஆயுதக் கிடங்கு அண்மையில் ஒடிசாவின் தெற்கே, ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் ராணுவத்தால் கண்டறியப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டது. இந்திய ராணுவத்துடன்கூட இல்லாத அதிநவீன ஆயுதங்கள் மாவோயிஸ்டுகளுக்கு எங்கிருந்து, எப்படி, யாரால் வழங்கப்பட்டது என்கிற புதிருக்கு இன்றுவரை விடை காணப்படவில்லை. இந்த ஆயுதங்களைத் தயாரிக்க, விலைக்கு வாங்க மாவோயிஸ்டுகள் பல கோடி ரூபாய் செலவிட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் எங்கேயிருந்து இவர்களுக்குக் கிடைக்கிறது?
சீனா நிதியுதவி செய்யவில்லை என்று மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். சீனாவும் இவர்கள் தங்களை மாவோயிஸ்ட் என்று அழைத்துக் கொள்வதே அபத்தம் என்று கருதுவதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவிக்கிறார். இதற்கான பணத்தை நிச்சயமாக, மாவோயிஸ்டுகள் ஆளுகைக்கு உள்பட்ட, பழங்குடி மக்கள் கொடுத்திருக்க முடியாது. அப்படியானால் இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?
ஒன்று, இந்தியாவின் சான்றாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிரான ஏதோ ஓர் அன்னிய சக்தி மாவோயிஸ்டுகளை ஊக்குவிக்கிறது அல்லது மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதிகளில் கனிமங்களை வெட்டியெடுக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களுடன் தொழில்போட்டியில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதாவது இதன் பின்னணியில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மாவோயிஸ்டுகள் இந்த அளவுக்கு, ராணுவத்துக்கு இணையாக ஆயுதங்களை வாங்கவும் சேமித்து வைக்கவும் இயலாது.
பழங்குடியினரிடையே சால்வா ஜுடும் (மக்கள் காவல்படை) அமைத்த நடவடிக்கையை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததால் அரசு அதனைக் கைவிட்டது. ஆனால், பழங்குடியினர் அரசுக்கு ஆதரவாகப் பேசினாலும், அரசின் நலத்திட்டங்களைப் பெற முயன்றாலும் மாவோயிஸ்டுகளின் கட்டப்பஞ்சாயத்தில் கடும் தண்டனை கிடைக்கிறது என்கிறார்களே, அது ஏன்? பழங்குடியினருக்கு எந்தவித நன்மையும் செய்து தரப்படக் கூடாது என்று தடையாக நிற்பது என்ன நியாயம்? மாவோயிஸ்டுகளின் நோக்கம் பழங்குடியினரின் உரிமைகளைக் காப்பாற்றுவதா இல்லை, இந்திய அரசின் மேலாண்மையை எதிர்த்து அரசுக்கு எதிரான போரை மறைமுகமாகத் தொடுப்பதா என்கிற சந்தேகத்தை மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகின்றன.
எச்சரிக்கைகளை மீறி மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதியில் நுழைந்த இத்தாலிய சுற்றுப்பயணிகளுக்காக இந்திய அரசு மாவோயிஸ்டுகளின் முன்னால் மண்டியிட்டு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. முதுகெலும்பில்லாதவர்களுக்கு வாக்களித்து அரியணை ஏற்றியதற்கான தண்டனையை நாம் அனுபவித்துத்தானே தீர வேண்டும், என் செய்ய?
 
Source "

ஊழலே ஆட்சியானால்...

இந்திய ராணுவத் தளவாடங்கள் கொள்முதலில் முறைகேடு என்பது 1948-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. 1948-ம் ஆண்டில், வழக்கமான நடைமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, அப்போது இங்கிலாந்தில் இந்திய ஹை-கமிஷனராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் இந்திய ராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்குவதற்கு ரூ. 80 லட்சம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்தத் தொகைக்கு ஏற்ப ஜீப்புகள் பெறப்படவில்லை என்று அப்போது நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்னை எழுப்பப்பட்டது.
இந்திரா காந்தி ஆட்சியில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கிய முறைகேடு, ராஜீவ் காந்தி அரசில் போஃபர்ஸ் ஊழல் பிரச்னை, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கார்கில் போருக்காக ஷூக்கள் வாங்கியது மற்றும் மரணமடைந்த வீரர்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் என்று ராணுவத்தில் தொடர்ந்து ஏதாவது ஓர் ஊழல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
இப்போது, இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் ஒரு புகாரை எழுப்பியுள்ளார். தரம் குறைவான 600 வாகனங்களை வாங்குவதற்கு ரூ. 14 கோடி லஞ்சம் தர ஒருவர் முன்வந்ததாக ஒரு பேட்டியில் அவர் கூறியதும், இதுகுறித்து ஏற்கெனவே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்குத் தெரிவித்தது மற்றும் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் ஆகியன ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் நாடாளுமன்றம் அல்லோலகல்லோலப்படுகிறது.
இத்தகைய தரம் குறைவான வாகனங்கள் ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் 7,000 உள்ளன என்றும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைக்கான வசதிகள் இல்லாத நிறுவனத்தின் இந்த வாகனங்களுக்கு மிகமிக அதிக விலை தரப்பட்டுள்ளது என்றும் தளபதி வி.கே. சிங் கூறியிருக்கிறார். 600 வாகனங்களுக்கே ரூ. 14 கோடி லஞ்சம் தர முன்வந்தார்கள் என்றால், 7,000 வாகனங்களுக்கு நிச்சயம் பத்து மடங்கு அதிகமாக லஞ்சம் பேரமாகப் பேசப்பட்டிருக்கும். இதைப் பற்றிய விசாரணைக்கு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்காதபோதிலும், அரசே முன்வந்து உத்தரவிட வேண்டும்.
ஆனால், தளபதி தம்மிடம் கூறியதை மக்களவையில் ஒப்புக்கொண்ட அமைச்சர் அந்தோனி, தவறுக்குத் தானே பொறுப்பு என்கிறார். அதே நேரத்தில் தளபதி எழுத்துமூலமாகப் புகார் தெரிவிக்காததால் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்பது அவரது வாதம். அதிகாரியாக இருந்திருக்க வேண்டியவர் அமைச்சராக்கப்பட்டிருக்கும் அவலம், வேறென்ன?
2012-13-ம் ஆண்டில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடமிருந்து வாங்க இருக்கின்றோம். 197 ஹெலிகாப்டர்கள் வாங்கப் போகிறோம். இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்நிலையில், இந்த விற்பனையில் எத்தகைய பேரம் முடிந்துள்ளது, நாம் பேசியிருக்கும் விலை சரியானதா, இல்லை நியாயமான விலையைக் காட்டிலும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளதா? என்கிற சந்தேகங்கள் இப்போது முன்னெப்போதையும்விட கூடுதலாக எழுகின்றன.
இந்திய விமானப் படைக்கு வாங்கப்படவுள்ள 126 ரஃபேல் போர் விமானங்களின் விலை ரூ. 70,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 2012-13 பட்ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. இதேபோன்று ஹெலிகாப்டர் கொள்முதலிலும் 10 சதவீதம் அல்லது 15 சதவீதம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மீதித் தொகையை ஒவ்வோராண்டும் செலுத்தியாக வேண்டும்.
ஒரு பொருள் தரமானதாக இருந்தாலும், தரம் குறைவாக இருந்தாலும், லஞ்சம் கொடுத்து விற்பதுதான் சாத்தியம் என்ற நிலைமை வந்த பிறகு, எந்த நிறுவனமும் தனது உற்பத்திச் செலவு அல்லது லாபத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை. கொடுக்கப்படும் லஞ்சத்தை விற்பனை விலையில் ஏற்றி வைத்து விடுகிறார்கள். இந்திய அரசு நியாயமான விலையில் கொள்முதல் செய்யவில்லை என்றால், கூடுதல் விலையைக் கொடுத்தாக வேண்டும். இந்தக் கூடுதல் விலை என்பது இந்திய மக்களின் பணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
2012-13 நிதிநிலை அறிக்கையில் வழக்கத்தைவிட கூடுதலாக 15 சதவீதம் அதிகமான தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. சென்ற நிதியாண்டில் ரூ. 1,64,415 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 1,93,407 கோடி ஒதுக்கீடு! இதற்குக் காரணம் இந்த ஆண்டு நிறைய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட- குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியதிருக்கிறது. பேரம் தொடங்கிய நாளில் இருந்த டாலரின் மதிப்பைக் காட்டிலும் தற்போது டாலர் மதிப்பு கூடியுள்ளதால், ராணுவத்துக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 28,992 கோடியால் பெரும் நன்மை விளையாது என்றும் கருதப்படுகிறது.
இந்திய விமானப் படையில் பல விமானங்கள் மிகவும் பழைமையானவை என்பதும், அதிநவீன ரக போர் விமானங்கள் தேவையாக இருக்கின்றன என்பதும் உண்மை. அதே போன்று, கடற்படையில் நிறைய நீர்மூழ்கிக் கப்பல்களின் தேவை இருக்கிறது. இவற்றை நவீனப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ராணுவத்துக்கு இருக்கிறது. நிறைய நிதிஒதுக்கீடும், கொள்முதலும் அவசியமாக இருக்கின்றன.
இந்நிலையில், ஊழல் இல்லாத ராணுவத் தளவாடக் கொள்முதல் உறுதிப்படுத்தப்படாவிட்டால், கொள்ளை போவது இந்திய மக்களின் வரிப்பணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். நமது அரசியல்வாதிகளும், ராணுவ உயர் அதிகாரிகளும் தளவாடங்களை வாங்குவதில் முறைகேடு செய்கிறார்கள் என்பது தெரிந்தால், தனது உயிரைப் பணயம் வைத்துப் போர்முனையில் எதிரிகளை நேரிடும் சிப்பாயின் மனநிலை என்னவாக இருக்கும்? தரக்குறைவான தளவாடங்களைக் கையூட்டுப் பெற்று நமது தலையில் கட்டிப் போர்முனைக்கு அனுப்புகிறார்களோ என்கிற சந்தேகம் ஒரு போர் வீரனுக்கு ஏற்படுமானால், அவன் எப்படி எதிரிகளை தைரியமாகவும் வீரத்துடனும் எதிர்கொள்ளத் துணிவான்?
எதில் எதிலெல்லாம் ஊழல் செய்வது என்பதில் நமது ஆட்சியாளர்களுக்கு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. தளவாட ஊழல் என்பது தேசியத் தலைகுனிவு

Source :