காலை எழுந்தவுடன் தானம்... பசி போக்கும் பாண்டி மனிதர்!

-நா.இள.அறவாழி



''அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.’ - அதாவது பிறரால் பழிக்கப்படாத இல்வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை ஆகும். வள்ளுவர் சொல்லும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் என் லட்சியம்'' என்று, குறள்மொழியையே குரல்மொழி யாகப் பகிர்கிறார் எஸ்.ராஜேந்திரன்.



யார் இந்த ராஜேந்திரன்?


''சார், புதுவை அரசு மருத்துவமனைக்குப் பக்கத்துல பல வருஷங்களாத் தினமும் காலையில ஒருத்தர் வந்து அங்கு இருக்கும் ஏழைகளுக்கு இலவசமா உணவுகொடுக்கிறார்'' என்று விகடன் வாசகர் கல்யாணசுந்தரம் நம் வாசகர் வாய்ஸில் பதிவுசெய்து இருந்தார். புதுவை - அரசு மருத்துவமனைக்குச் சென்றால் ஒரு கூட்டமே சுற்றிச் சூழ, எல்லோருக்கும் உணவுப்பொட்டலங்களை விநியோகித்துக் கொண்டு இருந்தார் ராஜேந்திரன்.


'இதை என்னோட ஆத்ம திருப்திக்காகத்தான் பண்றேன். அதனால்தான் இதை விளம்பரப்படுத்த நான் விரும்பலை. இருந்தும் இதைப் படிச்சிட்டு பல பேர் ஏழைகளுக்கு உதவ முன் வரலாம். அதுக்காகத் தான் இதைப் பற்றிப் பேசறேன் தம்பி.


புதுவை- சிமென்ட் வொர்க்ஸ்ங்கிற கடைவெச்சு இருக்கேன். அதிகமா இல் லைனாலும் தேவைகளைப் பூர்த்தி செய் கிற அளவு வருமானம் வருது. எனக்குப் புத்தகங்கள் படிக்கிற பழக்கம் அதிகம். அதிலும் திருக்குறள் மீது எனக்கு அளவு கடந்த ஆர்வம். திருக்குறள் படிச்சுட்டுதான் இந்தத் தானத்தின் மீது ஈடுபாடு வந்தது.



கடந்த 19 வருஷமா ஏழைகளுக்குக் உணவு கொடுத்துட்டு வர்றேன். ஆரம்பத் தில் காலையில் வீட்டில் இருந்து 7.30 மணிக்குக் கிளம்புவேன், புதுச்சேரியோட முக்கிய வீதிகளில் சுற்றி வந்து யாராவது ஏழைகள் இருக்காங்களானு பார்த்து அங் கேயே இட்லி வாங்கிக்கொடுத்து, அவங்க பசியைப் போக்கறது வழக்கம். முதலில் 10 ஏழைகளுக்கு உணவு கொடுத்துட்டு இருந்தேன். இப்போ அந்த எண்ணிக்கை நூறா மாறிடுச்சு. தினமும் காலையில் 70 இட்லி பொட்டலங்களுடன் கிளம்பிடுவேன். சில நேரங்களில் வைத்திருக்கும் பொட்டலங்களுக்கு மேல் நிறையப் பேர் வந்துடுவாங்க. பொட்டலங்கள் தீர்ந்துப்போச்சுன்னா மத்தவங்களுக்குக் கடையில் இட்லி வாங்கித் தருவேன். புதுச்சேரியோட முக்கிய இடங்களான பீச் ரோடு, பாரதி வீதி, மகாத்மா காந்தி சாலைனு ஒரு ரவுண்ட் அடிச்சுக் கடைசியா இந்த அரசு மருத்துவமனைக்கு வந்துடுவேன்.


தினசரி இல்லைனாலும் மதிய ஓய்வு நேரம் கிடைக்கும்போது வில்லியனூரில் இருக்கும் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குப் போய் அங்கே இருக்கும் முதியவர்கள், மாற்றுத் திறனா ளிகளுக்கு மதியச் சாப்பாடு வாங்கிக் கொடுப் பேன். என்கிட்ட பசினு வந்தவங்க எல்லாருக்கும் பசியைப் போக்கி அனுப்பிஇருக்கேன்.


இந்த உலகில் வாழறவங்களை மூணு வகை யாப் பிரிக்குது திருக்குறள். மாக்கள், மக்கள், சான்றோர். மிருகங்களைப் போல வாழ்கிற மனிதர்களை மாக்கள்னும்; சராசரி வாழ்க்கை வாழறவங்களை மக்கள்னும்; லட்சியத்தோடுவாழ் பவர்களைச் சான்றோர்கள்னும் பிரிக்கிறாங்க. நான் லட்சியவாதி, நம்மால் ஒருத்தன் பசியைக் கூட போக்க முடியலைன்னா வாழுற வாழ்க் கைக்கு அர்த்தமே இல்லை. ஒரு மனிதனைக் கொல்லக் கூடிய, கொலை செய்யத் தூண்டக் கூடிய பசியைக் கொல்றதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் பெரிய விஷயம்'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இன்னும் சிலர் அவரைச் சூழ, சட்டைப்பையைத் தடவியபடியே நகர்கிறார் ராஜேந்திரன்!


 
Source : Vikatan