ஏழைகளின் ஆசான்... ஆனந்த் குமாரின் 'சூப்பர் 30'-க்கு டைம் இதழ் சிறப்பிடம்

பீகாரின் பாட்னாவில் உள்ள ஏழை மாணவர்களுக்கான இலவச ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு பயிற்சி மையமான 'சூப்பர் 30'-க்கு சிறப்பிடம் தந்து கெளரவித்திருக்கிறது, பிரபல 'டைம்' இதழ்.

டைம் இதழின் அண்மையப் பதிப்பில் வெளியாகியுள்ள 'லிஸ்த் ஆஃப் பெஸ்ட் ஆஃப் ஆசியா 2010' (Best of Asia 2010) பட்டியலின் பெஸ்ட் ஃபார் தி மைண்ட் பிரிவில் இடம்பெற்றிருக்கிறது, 38 வயது கணித வல்லுனரான ஆனந்த் குமாரின் 'சூப்பர் 30'

அதென்ன 'சூப்பர் 30'?

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள திறமை வாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக உரிய பயிற்சிகள் அளித்து, அவர்களை ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைய வித்திடுவதே 'சூப்பர் 30' திட்டத்தின் முதன்மை நோக்கம்.

பீகாரின் பாட்னாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை உருவாக்கி தனது 'ராமானுஜன் ஸ்கூல் ஆஃப் மேத்தமெடிக்ஸ்' மூலம் செயல்படுத்தி வருபவர் ஆனந்த் குமார்.

இந்த ஏழு ஆண்டுகளில், சூப்பர் 30 மூலம் பயிற்சி பெற்ற 210 மாணவர்களில் 183 பேர் ஐ.ஐ.டி. மையங்களில் சேர்ந்துள்ளனர். துவக்க ஆண்டில் 18 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலை படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டில் 30 மாணவர்களுமே தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி விகிதம் என்ற சாதனை நிகழ்ந்தது.

ஆனந்த் குமாரின் பயிற்சி மையத்தில் படித்து ஐ.ஐ.டி.க்களில் சேர்ந்தவர்கள், தொழில்நுட்ப வல்லுவனர்களாக வலம் வருபவர்கள் அனைவருமே துப்புரவு தொழிலாளி, ரிக்ஷா ஓட்டுநர், நிலமற்ற விவசாயத் தொழிலாளி என பொருளாதாரத்தில் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள பெற்றோரின் திறமைமிகு பிள்ளைகள்!

இளம் கணித வல்லுனரான ஆனந்த் குமார், கெம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயில விரும்பினார். ஆனால், அவருக்கு உரிய ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. அதன் தொடர்ச்சியாகவே தாயகத்தில் வறுமையால் முன்னேற முடியாத மாணவர்களுக்கு தனது உழைப்பை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இந்த மையத்தில் சேர்வதற்கே மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கென தனியாக ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் திறமையான மாணவர்களை தேர்வு செய்து இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேரும் மாணவர்கள் நாளொன்றுக்கு 16 மணி மணி நேரம் படிப்பதற்கு நேரத்தை செலவிட வேண்டும் என்பதுதான் ஒரே முக்கிய நிர்பந்தம். தேர்வு முடியும் வரை அவர்களுக்கு பயிற்சி, உணவு, இருப்பிடம் அனைத்தும் இலவசம்!

தற்போது தனது கல்விப் பணி முயற்சிக்கு டைம் இதழ் மூலம் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆனந்த் குமார், "இது மிகப் பெரிய கெளரவம். ஏழை மாணவர்களுக்கு மென்மேலும் உறுதுணைபுரிந்திட இந்த சர்வதேச அங்கீகாரம் மிகுந்த தூண்டுகோலாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.

ஆனந்த் குமாரின் உயரிய முயற்சிகளை இந்திய அரசும் கண்டுணர்ந்துள்ளது. ஐ.ஐ.டி.யில் சேர விழையும் ஏழை மாணவர்களுக்கு உதவும் 'சூப்பர் 30' திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட தமிழ்நாடு, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக, இம்மூன்று மாநில அரசுகளும் விடுத்த அழைப்பை ஏற்று உரிய வழிகாட்டுதல்களை நேரிலேயா வந்து வழங்கியிருக்கிறார், ஆனந்த் குமார்.
கடந்த பிப்ரவரியில் ஆனந்த் குமாரை அழைத்துச் சந்தித்திருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங். அப்போது, அவரது கல்விப் பணியைப் பாராட்டிய பிரதமரிடம், கூட்டு நுழைவுத் தேர்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி பரிந்துரைக்க தவறவில்லை.

உரிய அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களைக் கொண்டு, சூப்பர் 30 திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார், ஆனந்த் குமார். மிகக் குறைந்த கட்டணத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதன் மூலம் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டு இந்த இலவச பயிற்சி மையத்துக்கான நிதி ஆதாரத்தை வருகிறார்கள்.

"மாணவர்களுக்கு ஆடிப்படைக் கல்வியைக் கூட அளிப்பதற்கு போராடும் நாட்டில், மனித ஆற்றலால் எதுவும் சாத்தியமே என்று நிரூபிக்க 'சூப்பர் 30' - ஒரு சிறந்த எடுத்துக்காட்டு," என்ற டைம் இதழின் புகழாரத்துக்கு சாலப் பொருத்தமான ஆனந்த் குமாரே நிஜ கல்வித் தந்தை!

ஆனந்த் குமாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்... http://www.super30.org/

நன்றி : Vikatan

யார் நாத்திகன் - இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவனா?

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். கடவுள் இல்லைனு சொல்ற நம்ம பகுத்தறிவாதிகள் இந்து மதத்தை மட்டுமே இழிவாக பேசுகிறார்களே தவிர மற்ற மதங்களாகிய கிறித்துவ மதத்தையோ இஸ்லாம் மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையுமே குறித்து வாயே திறப்பதில்லை.

ராமரையும் மற்ற இந்து கடவுள்களையும் கிண்டலடிக்கும் கருணாநீதி கூட ரம்ஜான் சமயத்தில் அவர்கள் இடத்திற்கு சென்று கூழ் குடித்து நபிகள் நபிகளின் பெருமைகளை பேசி மகிழ்கிறார். கிறித்துவ பாதிரியார்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சென்று அவர்கள் செய்யும் சேவையை புகழ்ந்து பேசுகிறார்.இதேப்போல இவர் என்றாவது இந்து கோவிலுக்கு வந்து கும்பாபிஷேகத்தையோ இல்லை கொடியேற்றத்தையோ துவங்கி வைத்திருக்கிறாரா?

மூடநம்பிக்கையை எதிர்கிறேன் என்றால் அதுதான் எல்லா மதத்திலும் இருக்கிறதே.

சரி இந்த அரசியல்வாதிகள் சிறுபான்மையர் வாக்கிற்காகதான் இப்படி பேசுகிறார்கள் என்றால், அரசியலில் அல்லாத பகுத்தறிவாதிகள்(???) கூட இதெப்போல் தான் பேசுகிறார்கள். உதா: சத்தியராஜ். கடவுள் இல்லைனு சொல்ற இவர் இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்தையும் இழிவாக பேசியதில்லை. சரி இவர்கள் அனைவரும் மக்களின் அறியாமையை போக்க பாடு படுகிறேனு மேடையில் வாய் கிழிய பேசுகிறார்களே, அவர்கள் வீட்டிற்கு போய் பார்த்தால் அவர் மனைவி, பிள்ளைகள் அனைவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே.

முதல்ல உங்க வீட்டை திருத்திங்கள் அப்புறமா மக்களை திருத்தலாம்னு சொன்னா, நான் அவங்க சுதந்திரத்தில் தலையிடுவதில்லைனு ஒரு சப்பைகட்டு. உங்க பொண்டாட்டு புள்ளைகள் சாமி கும்பிட்டு புஜை பண்ணுனா அது அவங்க நம்பிக்கை, அதையே மக்கள் பண்ணுனா அது மூடநம்பிக்கை. இது என்னங்க நியாயம்?

Ok Coming back to the point... மற்ற மதத்தை பற்றி வாயே திறக்காமல் இந்து மதத்தை மட்டுமே கிண்டல் அடிப்பதற்க்கு காரணம் என்ன?

பயம்.

இந்து மதத்தை தவிற வேறு எந்த மதத்தை கிண்டல் செய்தாலும் அவர்கள் மறுநாள் நிம்மதியாக நடமாட முடியாது. ஏனெனில் அவர்களுக்கு அவர்கள் மதம் மீது அவ்வளவு பற்று, அதை யாரேனும் இழிவாக பேசினால் ஒன்று கூடி எதிர்பார்கள். ஆனால் இதை இந்து மதத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது. அப்படி யாராவது ஒன்று கூட எதிர்தால் அவர்கள் மதவாதிகள், பரதேசிகள் என முத்திரை விழும்.

எவன் ஒருவன் உலகில் எந்த கடவுளும் இல்லை, எல்லாம் மதங்களும் பொய், அவையெல்லாமே மூடநம்பிக்கை என்று சொல்கிறார்களோ அவர்கள் மட்டுமே நாத்திகன் என்று கூற அருகதை உள்ளது. மற்றவர்கள் எல்லாருமே தொடை நடுங்கிகளே.

நன்றி : http://bleachingpowder.blogspot.com/2008/07/blog-post_30.html

பூச்சி உலகில் மர்ம மரணங்கள் !

பள்ளி வயதில் காக்கை குருவி ஓணான்களும், ஹெலிகாப்டர் பூச்சிகளும்தான் எங்கள் தோழர்கள். கொட்டாங்கச்சியில் தண்ணீர் பிடித்துத் துவைக்கிற கல்லின் மேல் வைத்துவிட்டுக் காத்திருந்தால் சிட்டுக் குருவிகள் வந்து உட்காரும். சின்ன வாயால் அவை தண்ணீர் மொண்டு தலையைச் சாய்த்துக் குடிக்கிற அழகே அழகு. சில குருவிகள் அந்தக் கொட்டாங்கச்சித் தண்ணீரிலேயே சிக்கனமாகச் சென்னைவாசி போல் குளித்துவிட்டுப் போகும்.
இந்த 2010-ல் என் குருவிகள் எல்லாம் எங்கே ? சென்னையில் கண் பூக்கத் தேடினாலும் சிட்டுக் குருவி தட்டுப்பட மறுக்கிறது. அன்றைக்கு உலக சிட்டுக் குருவி தினம் என்று மீடியாவில் பார்த்துவிட்டு, எங்கள் வீட்டுப் பொடியன் மொட்டை மாடியில் அரிசி வைத்துவிட்டுக் காத்திருக்கிறான். மீதி இருக்கும் குருவிகள் எங்கிருந்தாலும் இதைத் தந்தி போல் பாவித்து உடனே வேளச்சேரிக்கு வரவும்.

சிட்டுக் குருவிகள் போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மற்றொரு ஜீவன், தேனீக்கள். இரண்டுமே மறைந்து போவதற்குக் காரணம், பேராசையை அடிப்படையாகக் கொண்ட நம் வாழ்க்கை முறை. அடுத்த ரெசிஷனுக்குள் முடிந்த வரை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அவசரம்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் உலகில் தேனீக்கள் வேகமாகக் குறைய ஆரம்பித்தன. (ஜோ க்ளார்க்). முதலில் இதன் காரணம் யாருக்கும் பிடிபடவில்லை…

இந்த மர்மக் கதையின் ஆரம்பம் நவம்பர் 12, 2006. ஃப்ளாரிடாவில் தொழில் முறையில் தேனீ வளர்க்கும் விவசாயியான டேவ், அன்று காலையில் தன் தேனீப் பெட்டிகளைக் கவனித்தார். வழக்கமாகப் பெட்டியைச் சுற்றித் தேனீக்கள் குற்றாலக் குறவஞ்சியில் வர்ணிப்பது போல முரலும். ஆனால் அன்றைக்குத் தேனீக்கள் ஏதும் கண்ணில் படவில்லை. சோம்பேறிப் பூச்சிகள், இன்னும் தூங்குகிறதோ என்று பெட்டியைத் திறந்து பார்த்தால், பகீரென்றது. கூட்டில் ராணித் தேனீ, குஞ்சுப் புழுக்கள், மற்றும் ஒரு சில எடுபிடி ஏவலாட்கள் மட்டும்தான் இருந்தார்கள். பதற்றத்துடன் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து திறந்து பார்த்தார். மிகச் சில தேனீக்களே மீதி இருக்க, மற்ற அத்தனையும் போன இடம் தெரியவில்லை.
விரைவிலேயே இது தொடர் கதையாக ஆயிற்று. அமெரிக்கா முழுவதும் தேனீக் கூட்டங்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போக ஆரம்பித்தன. 2007 பிப்ரவரிக்குள் கரை முதல் கரை வரை தேனீ மரணங்கள். சில விவசாயிகளுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை இழப்பு !

வருடா வருடம் ஒட்டுண்ணி, வைரஸ் போன்ற பிரச்னைகளால் சில தேன் கூடுகள் காலியாவது உண்டுதான். ஆனால் குறுகிய காலத்தில் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை தேன் கூடுகள் செத்துவிட்டதன் காரணம் புதிராகவே இருந்தது. என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியாததால் இதற்கு காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் (CCD) என்று சராசரி விவசாயியின் வாயில் நுழையாத பெயராக வைத்தார்கள்.

நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேனீக்களின் பங்கு பற்றிப் பார்க்க வேண்டும். அங்கே பயிர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதம் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை பெற்றுச் சூல் கொள்கின்றன.

தேனீக்கள் முதன் முதலில் அமெரிக்காவுக்குப் போன வருடம் 1622. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த இந்தப் புதிய பூச்சியைப் பார்த்த செவ்விந்தியப் பழங்குடியினர் அதற்கு ‘வெள்ளைக்காரன் ஈ’ என்று பெயர் வைத்தார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மெல்ல ஐரோப்பியக் குடியிருப்புகள் பரவ ஆரம்பித்தபோது அதற்குச் சற்று முந்திக்கொண்டு தேனீக்களும் அமெரிக்காவுக்குள் ஊடுருவின. எனவே தேனீக்கள்தான் நாகரிகம், நவீனத்துவத்திற்குக் கட்டியம் கூறியவை. அத்தோடு கூடவே பழங்குடியினரின் அழிவுக்கும் அவை கெட்ட சகுனமாக ஆகிவிட்டது வேறு கதை.

தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்துகொண்டார்கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது : சுறுசுறுப்பான தேனீக்கள் எல்லாம் சீக்கிரம் கொல்லப்பட்டு, உற்பத்தித் திறன் குறைந்த சோனித் தேனீக்கள் மட்டுமே பெருகி வளர்ந்தன. இது சிசிடி விடுகதைக்கு முதல் சாவி.

புதிய கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மற்றொரு தாவரம் ஆப்பிள். ஆப்பிள் போன்ற பயிர்களை மகரந்தச் சேர்க்கை செய்வதற்குத் தேனீக்கள் அவசியம். குறிப்பாக ஏக்கர் கணக்கில் ஒரே வகைப் பயிரை வளர்க்க வேண்டுமென்றால் தேனீக்களின் உதவி இல்லாமல் முடியாது. தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேனீயையும் கையோடு கொண்டு வந்தார்கள்.

கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மானோ கல்ச்சர் முறை, தொழிற் புரட்சி காலத்தில் டிராக்டரில் ஏறிச் சவாரி செய்தது. இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது கண்ட கண்ட நைட்ரஜன் உரங்கள், பூச்சி மருந்து, அறுவடையை நாலா புறமும் அனுப்ப, ரயில் பாதை என்று மேலும் மேலும் பெரிய பண்ணைகள் உருவாகத் தேவையான அனைத்தும் அமெரிக்காவுக்குக் கிடைத்துவிட்டன. ஃபோர்டு கார் தயாரிப்பது போலவே அவர்கள் விவசாயத்தையும் செய்ய முயற்சித்ததுதான் சிசிடியின் இரண்டாவது சாவி.
பண்ணைகள் அளவுக்கு மீறிப் பெரிதானபோது அத்தனை ஏக்கராவில் அத்தனை கோடிப் பூக்களுக்கு மகரந்தம் கொண்டு சேர்க்கத் தேனீக்கள் போதவில்லை. அப்போது பிறந்ததுதான் நடமாடும் தேனீப் பண்ணை ஐடியா. பெட்டி பெட்டியாகத் தேன் கூடுகளை லாரியில் ஏற்றி நாடு பூரா கொண்டு போவார்கள். இந்த சீசனுக்கு கலிபோர்னியாவில் பாதாம் தோட்டங்கள். அடுத்த சில மாதங்களில் சர்க்கஸ் கூடாரத்தைக் கிளம்பிக்கொண்டு போய் வாஷிங்டனில் ஆப்பிள்கள். அங்கிருந்து நேராக ஃப்ளோரிடா… இப்படி ஒரு வசதி கிடைத்துவிட்டதால் மானோ கல்ச்சர் என்பது அமெரிக்காவின் தலை விதியாகவே ஆகிவிட்டது.

இத்தனை கலாட்டாக்களையும் தாங்கிக்கொண்டு வருடம் முழுவதும் அவைகளை உயிருடன் வைத்திருப்பதற்காக, தேனீக்களுக்கு செயற்கையான உணவு கொடுத்து வளர்த்தார்கள். என்ன என்னவோ ஃப்ரக்டோஸ் சிரப்கள், மானோ சக்கரைடுகள் என்று சீப்பாக சாப்பாடு போட்டு சமாளித்தார்கள். டெண்டுல்கரை வைத்து விளம்பரம் செய்து நம் குழந்தைகளுக்கு அவர்கள் புட்டி புட்டியாக விற்கும் அதே வெற்று சர்க்கரைக் கரைசல்கள் ! தேனீக்கள் வசந்த காலப் பூச்சிகள். அமைதி விரும்பிகள். இப்போது அவைகள் எல்லாப் பருவங்களிலும் டிராவலிங் சேல்ஸ் மேன் மாதிரி டை கட்டிக்கொண்டு ஊர் ஊராக அலைந்து கிடைத்ததைத் தின்று வாழ நேர்ந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வயல்கள் மூர்க்கமாக இயந்திர மயமாயின. ஆயிரக் கணக்கான சிறு விவசாயிகள் ‘ஏரின் உழாஅர் உழவர்’ என்று மனம் உடைந்துபோய், வயிற்றுப் பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார்கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது.

இது எப்படி சிசிடிக்கு இட்டுச் சென்றது என்பதற்கு வருவோம். மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின்றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது என்பதற்கும் பல ஆராய்ச்சி முடிவுகள் சாட்சி இருக்கின்றன.
அதுவும், பற்பல ஆபத்தான பூச்சி மருந்துகளில் சொட்டச் சொட்ட நனைந்த மகரந்தம்.

இது வரை நாம் தயாரித்த பூச்சி மருந்துகள் 19 வகைகளில் அடங்கும். அதில் DDT போன்ற சில மருந்துகளைத் தடை செய்து 25 வருடம் ஆகிறது. இருந்தும் ஆயிரக் கணக்கான மகரந்தத் துகள்கள், தேன் மெழுகு சாம்பிள்களை சோதித்துப் பார்த்தபோது டிடிடி உள்பட எல்லா மருந்துகளின் மிச்சங்களும் அதில் காணக் கிடைத்தன. அதாவது, பூச்சி மருந்துகள் ஜாடி பூதம் மாதிரி. ஒரு முறை திறந்துவிட்ட பிறகு அவை உலகத்தை விட்டுப் போவதே இல்லை !
மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான். ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத்தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.