18 பெண்களின் கற்பு... 19 வருட வழக்கு!

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்​காவில் இருக்கும் மலை அடிவாரக் கிராமம் வாச்சாத்தி. இந்தக் கிராமம் தொடர்பான வழக்கு ஒன்று, தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது... நடக்கிறது... நடந்து​கொண்டே இருக்கிறது!

முதலில், அந்த பயங்கர வழக்கைப் பற்றிய ஃப்ளாஷ் பேக்...
வாச்சாத்தி கிராமத்தில் சுமார் 300 வீடுகள். கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதியில், மனித உரிமையை மல்லாக்கப் புரட்டிப்போட்ட மிகப் பெரிய அத்துமீறல் அங்கு நடந்தது. இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில் அப்போது சந்தன மரங்கள் ஏராளம். இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர். சில தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் அம்பலப்பட... அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். 'சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்...’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.
அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று... வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல் கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இந்த விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மூலம் வெளிச்சத்துக்கு வர... தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, இந்த வழக்கை தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நடத்தி வருகிறது. 19 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த வழக்கின் விசாரணை, ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட நிலை​யில், தீர்ப்புக்கான நாட்கள் எண்ணப்​படுகின்றன.
வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்துகிறது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்​பட்டவர்​களில் ஏழு அரசு அதிகாரிகள், 'சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய தர்மபுரி கலெக்டர் தசரதன், எஸ்.பி-யான ராமானுஜம், ஆர்.டி.ஓ-வான தெய்வ சிகாமணி ஆகிய மூவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் ஒரு முறை அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அது சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
உடனே அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்​துக்குப் போனார்கள். கடந்த வாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி பாஷா, 'சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்த ஒரே காரணத்துக்காக, குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை வழக்கில் சேர்க்கக் கோருவது வினோதம். வழக்கை மேலும் தாமதப்படுத்த இதுபோன்ற குறுக்கு வழிகளைக் கையாள்வது கண்டிப்புக்கு உரியது. இந்தக் குற்றத்துக்காக மனுச் செய்த ஏழு பேரும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு, தலா 10,000 அபராதமாகக் கட்டவும்’ என்று 'ஷாக்’ கொடுத்ததோடு வழக்கு விசாரணையை துரிதமாக்கும்படி தர்மபுரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

கிராமத்தைச் சேர்ந்த பரந்தாயியிடம் விசாரித்தபோது, கதறிக் கண்ணீர்விட்டு அழுதார். ''என் மகள் உட்பட 18 கன்னிப் பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசமாக்கினாங்க. ஊர் சனங்களையும் சொல்லவே வாய் கூசுற அளவுக்கு அசிங்கப்படுத்தி உதைச்சாங்க. நீதிமன்றம் மேல் நம்பிக்கைவெச்சு 19 வருஷமா உறுதியாப் போராடுறோம். இப்போ, மேலும் வாய்தாவை அதிகரிக்க இப்படி ஒரு புது தந்திரம் பண்ணப் பார்த்தாங்க. அதை அந்த நீதிபதியாலயே பொறுக்க முடியலை. இதே மாதிரி அந்த அக்கிரம அதிகாரிகளுக்கு விரைவிலேயே தண்டனை கொடுத்து எங்க மனக் காயத்துக்கு நீதிமன்றம் மருந்து தடவணும்!'' என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.
பாதிக்கப்பட்ட முருகன், ''எங்களை ஒரு ஜீவராசியாவே அன்னிக்கு அவங்க நினைக்கலை. பொண்ணுங்களை சூறை​யாடினாங்க... வீடுகளை அடிச்சு நொறுக்கினாங்க. கிணத்துல டீசல், ஆயிலை ஊத்துனாங்க. எங்க ஆடுகளையும் அடிச்சுத் தின்னாங்க. அதுகளோட குடலையும் எலும்புகளையும் கிணத்துல கொட்டினாங்க. அப்பப்பா... இப்போ நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது சார்!'' என்றார்.
மனித உரிமைக்கான 'குடிமக்கள் இயக்க’த்தின் சேலம் மண்டல பொறுப்​பாளரான செந்தில் ராஜா, ''எத்தனையோ குழுக்களின் விசாரணைகளில், வாச்சாத்​தியில் நடந்த மாபெரும் மனித உரிமை மீறல்களும் கொடுமைகளும் நிரூபணம் ஆகி இருக்கு. கோயில்களைவிட உயர்வானதா மக்கள் கருதுவது நீதிமன்றங்களைத்தான். அங்கேயும் இப்படித் தாமதம் என்றால், மக்களிடம் நம்பிக்கை குறைந்துவிடும். அதனால், விரைவாகத் தீர்ப்பையும் நிவாரணத்தையும் நீதித் துறை வழங்க வேண்டும்!'' என்றார்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள்!

source Vikatan

சமம் இல்லாத கல்வி சமச்சீர்க் கல்வி ஆகுமா?

சமச்சீர் கல்வி பற்றிய சர்ச்சைகள் தமிழகத்தில் தூள் பறக்கிறது! 'அது தேவையா, இல்லையா... நடைமுறைப்படுத்தப்படுமா, படாதா... புத்தகங்கள் அச்ச​டிக்கச் செலவான 200 கோடிக்கு யார் பொறுப்பு...அந்தப் பாடத் திட்டம் உண்மை​யாகவே சமச்சீர் கல்விக்கு உத்தரவாதமானதா... சென்ற அரசின் திட்டங்களில் ஒன்றான இதை, இந்த அரசைத் தொடரச் சொல்லி வற்புறுத்துவது நியாயமா?'' - இப்படி ஏகப்பட்ட கேள்விகள்!


ஆனால், இந்த மேலோட்டமான விவாதங்களில் எல்லாம் உண்மையான சமச்சீர் கல்வி அமிழ்ந்து, ஆழப் போய்விட்டதே நிஜம்! எது சமச்சீர் கல்வி? அது எந்த வகையில் தேவை?


முதலில், பள்ளிகள். அடிப்படை வசதிகள் இல்லாத, எட்டாம் வகுப்பிலும் எழுத்துக் கூட்டிப் படிக்கிற நிலையில் மாணவர்களை வைத்திருக்கிற, சரியான கழிப்பறைகளோ, விளையாட்டு மைதானங்களோ இல்லாத, அதன் அவசியத்தைக்கூட உணராத, 'வேறு கதியற்ற கடைக்கோடி மக்களின் கனவுகளுக்கு ஒரே புகலிடம்’ என்ற அளவில் மட்டுமே உயிர்த்திருக்கும் அரசுப் பள்ளிகள் ஒரு புறம்...
எவ்வித விதிகளுக்கும் உட்படாமல் அலட்சியப்​படுத்தி, முறையான கட்டடங்களோ, தகுதியான ஆசிரியர்களோ இல்லாத, அப்படி இருந்தாலும் அவர்களை ஈவிரக்கம் இல்லாமல் சுரண்டுகிற, புற்றீசல்போல் பெருகும் ஆங்கிலப் பள்ளிகள் மறு புறம்!
பள்ளி வளாகத்தில் தாய்மொழியில் பேசினாலே அபராதம் விதிக்கிற, 10, 12-ம் வகுப்புப் பாடங்களை 8-ம் வகுப்பில் இருந்தே சொல்லித்தருகிற அதீதப் பொறுப்பு உணர்வு மிகுந்த, அதற்கு விலையாகப் பெற்றோர்களின் ரத்தத்தையே உறிஞ்சுகிற ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்னொரு புறம்!


இதுதான் இன்றைய தமிழகம்!
கல்வி பற்றிய ஏராளமான கனவுகளோடு நம்​முடைய குழந்தைகள் வளர்கிறார்கள். அந்தக் கனவுகள்தான் நாளை நம் தேசத்தை வழிநடத்தப்​போகிறது. அவர்களுக்குப் பள்ளிகளின் இன்றைய நிலை பெரும் ஏமாற்றமே. உண்மை இப்படி இருக்க, 'பாடத் திட்டத்தை மாற்றுவதால் மட்டுமே சமச்சீரான கல்வியைக் கொண்டுவந்துவிட முடியுமா?’ என்பதுதான் இன்று தலைதூக்கும் அடிப்​படையான கேள்வி.
தரமான, தொலைநோக்குப் பார்வைகொண்ட, வேகமாக மாறி வரும் காலத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய, அறிவியல்பூர்வமான, நமது தாய்மொழி - பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்ட, அனை​வருக்கும் சம வாய்ப்பு வழங்குகிற ஒரு கல்விக் கொள்கைதான் இன்றைய முதல் தேவை. அதுதான் முழுமையான சமச்சீர்க் கல்வியாக இருக்க முடியும். அப்படிப்பட்ட கல்வியைக் கொண்டுவந்தார்களா என்றால் இல்லை!
கல்வி, சமூக முன்னேற்றத்தின் முக்கியஅங்கம். தலித்துகள், பெண்கள், மலை சாதியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினரின் முன்னேற்​றமும், தரமான கல்வியின் மூலம்தான் சாத்தியம். அதை இலவசமாகப் பெறுவது, அனைவரது உரிமை. அதைத் தருவதுதான் அரசின் கடமை!
பெருந்தலைவர் காமராஜர் இதை நன்கு உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையோடு இலவசக் கல்விக்கு அடிப்படையான ஆரம்பப் பள்ளிகளைத் திறந்தார். கல்விக்கு வறுமையும் பசியும்கூட தடைஎன்பதை உணர்ந்து, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு​வந்தார்.
அன்றும் தனியார் பள்ளிகள் இருந்தன. ஆனால், கல்வியை வியாபாரமாக மாற அனுமதிக்கவில்லை. பணப் புழக்கம் அதிகம் இல்லாத அன்றைய சூழலில், தரமான கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. அன்றைய தனியார் பள்ளிகளும் சமூகத்துக்கான அறப் பணியாகவே திகழ்ந்தன.
துரதிர்ஷ்டவசமாக, அடுத்தடுத்து வந்த அரசுகள் கல்வி வியாபாரமாக மாறியதைத் தடுக்கத் தவறி​விட்டன, நியாயமான கட்டுப்பாடுகளையும் விதிக்க​வில்லை. மேலும், அரசுப் பள்ளிகளில் கவனம் செலுத்தாமல், அதன் தரம் நாளுக்கு நாள் குறைந்து வந்ததையும் தடுக்கவில்லை. அதனால்தான் இன்று, எப்பாடு பட்டாவது தன் குழந்தைகளை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற பெற்றோர், இரக்கமற்ற தனியார் பள்ளிகளிடம் சிக்கிக் கண்ணீர் சிந்துகின்றனர்!
அதற்கும் வழி இல்லாத பெற்றோர்கள்தான் அரசுப் பள்ளியை அண்டுகிறார்கள். இப்படி, வசதியானவர்கள் மட்டுமே தரமான கல்வியையும், நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும் என்பது அநீதியானது, ஆபத்தானது!
இந்த நிலையை மாற்ற, உடனடி முயற்சி எடுத்தே ஆக வேண்டும். இப்போதைக்கு பாடத் திட்டத்தையாவது மாற்றுவோம் என்கிற சமாதானம், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது ஆகும். மற்ற சீரழிவுகளை எப்போது மாற்றுவது? முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்​டுள்ள மற்ற சீர்திருத்தங்களையும் உடனடியாகப் பரிசீலித்து அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு எதிராகச் சொல்லப்படுகிற எந்த சமாதானமும் ஏற்கக்கூடியது அல்ல.
கல்வி, தனி மனித வாழ்விலும் சமூகத்தின் முன்னேற்றத்திலும் மிக முக்கியமான ஒரு காரணி. அதில் அரசியல் மாச்சரியங்களுக்கு எந்த இடமும் இருக்கக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசும் அனைத்துக் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து, ஒரு புதிய கல்விக் கொள்கையை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உருவாக்குவதும், செயல்​படுத்துவதும் இந்தத் தருணத்தில் மிகவும் முக்கியம். இதில் மேலும் ஏற்படுகிற தாமதம், மக்களுக்குக் கஷ்டத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் மோசமான பின்விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.
நல்லோர் எல்லோர் கவனத்துக்கும்!


Source : Vikatan.com

யாருடைய எலிகள் நாம்?

கடந்த வாரம் பலராலும் கண்டுகொள்ளப்படாத செய்திகளில் ஒன்று... நாட்டின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் சுரேந்தர் சிங் மருந்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள 9 மருந்து நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பி உள்ள கடிதம்!
ஜனநாதன் இயக்கத்தில், மனிதர்களை எலி களைப்போல மருத்துவப் பரிசோதனையில்பயன் படுத்தும் 'ஈ’ படம் பார்த்திருப்பீர்களே? அதே மாதிரி கடந்த ஆண்டு இந்தியாவில் மனிதர்களைப் பயன்படுத்தி நடந்த மருத்துவப் பரிசோதனைகளில் (உடல்கூறு) ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளில், 670 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்களில், இழப்பீட்டுத் தொகை வெறும் 8 பேருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதேபோல், மருந்துகளுக்காக நடந்த பரிசோதனையில் இறந்த 25 பேரில் 5 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. 'எப்போது மற்றவர்களுக்கான இழப் பீட்டுத் தொகையை வழங்குவீர்கள்?’ என்பதுதான் சுரேந்தர் சிங்கின் கடிதம். இந்தக் கடித விவரம் பத்திரிகைகளில் வெளியாகிவிட்டதால், பாதிக்கப்பட்டோருக்கான தொகையை விரைவில் அளித்துவிடுவதாக அறிவித்து இருக்கின்றன மருந்து நிறுவனங்கள்!


கோடிகள் புரளும் துறை!
 ஒரு புதிய மருந்து, சந்தையை வந்தடைய சராசரியாக .3,600 கோடி வரை செலவா கிறது. இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம், மனிதர்கள் மீதான பரிசோதனை. புதிதாக உருவாக்கப்படும் மருந்து, மனிதர்கள் மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று சோதிக்க வேண்டும்.


வளர்ந்த நாடுகளில், இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குக் கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு. தவிர, நோயாளிகளின் பாதுகாப்புக்கான செலவும் அதிகம். மூன்றாம் உலக நாடுகளில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது, செலவில் 60 சத விகிதம் வரை குறையும். மேலும், ஏழை மக்களின் அறியாமை, எளிதில் வளையக் கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பு இன்மை ஆகியவற்றின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பரிசோதனையை நடத்த ஆரம்பித்தன மருந்து கம்பெனிகள்.


அபாயத்தின் வளர்ச்சி!
இந்தியாவில் மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு தொடங்கும் உயிர்த் தொழில்நுட்பவியல் பூங்காக்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சாவி. 2005-ல் 100 பரிசோதனைகள் நடந்த நிலை மாறி, இப்போது குறைந்தபட்சம் இந்தியா வில் 1,000 பரிசோதனைகள் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தப் பரிசோதனைகளில் இறந்தவர்கள் 132 பேர். இப்போது 670 பேர்.


அறியாமையும் சுய லாபமும்!
இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமை யையும் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகள் தொடர்பான விதிகள் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம், நோயாளிகளுக்கு நோயாளி மாறுபடுகின்றன. இதனால் மருந்து நிறுவனங்களால் சட்டத் தில் இருந்து எளிதாகத் தப்ப முடிகிறது. ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப் பரிசோதனையின் ஒரு கட்டமாக மேற்கொள்ளப் பட்ட மருந்து ஆராய்ச்சியில், 14 ஆயிரம் சிறுமி கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தச் சிறுமிகளில் பெரும்பான்மையினர் பழங்குடியினர். அவர் களுக்கோ, அவர்களுடைய பெற்றோருக்கோ இப்படி ஒரு பரிசோதனை மேற்கொள்ளப் படுவதே தெரியாது. இந்தக் குழந்தைகளில் 6 குழந்தைகள் உயிர் இழந்ததைத் தொடர்ந்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.


நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இப்படி நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் 49 குழந்தைகள் உயிர் இழந்தது கடந்த ஆண்டு தெரியவந்தது. சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 4,142 குழந்தைகளில் 2,728 குழந்தைகள் ஒரு வயதுக்கும் உட்பட்டவர்கள்!
புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனை கள் நடத்த அனுமதி அளித்துள்ளது அமெரிக்க அரசு. இனி, இந்தியாவில் உள்ள குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் களம் இறங்கப்போகின்றன என்பதே இதன் நேரடியான பொருள்!


எத்தகைய அற உணர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சியாளர்களையும் வழிநடத்துகிறது! யாருடைய எலிகள் நாம்?


Source : Vikatan.com
 
More details :http://www.cchr.org/videos/marketing-of-madness.html