அரசின் முகத்தில் கரி

அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாத நிலைமையில், இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு கிளம்பியிருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று சொன்ன அதே தலைமை தணிக்கைக் குழுதான் இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.10.67 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

இந்த அறிக்கை இன்னும் முறைப்படி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனாலும், இந்தக் கூட்டத்தொடரில் நிச்சயமாக தாக்கல் செய்யப்படவுள்ள அறிக்கை என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த அறிக்கையின் உள்ளடக்கம் எப்படியோ பத்திரிகைகளில் வெளியாகி, தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளிதுமளிபட்டுக்கொண்டிருக்கின்றன.
தலைமை பொதுத் தணிக்கைக் குழு குறிப்பிட்டுள்ள குறைபாடு இதுதான்: ஏலத்தின் மூலமாக நிலக்கரி சுரங்கம் வெட்டும் நிலப்பரப்பை ஒதுக்கீடு செய்யாததால், 2004-முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.10.67 லட்சம் கோடி. 155 நிலக்கரிச் சுரங்க வயல் சுமார் 100 தனியார் நிறுவனங்களுக்கு எந்தவித முன்யோசனையும் இல்லாமல், அன்றைய நிலக்கரியின் விலையை கருத்தில் கொள்ளாமல், குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அரசுக்கு இந்த பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக, மதிய வேளையிலேயே தலைமை பொதுக்கணக்குத் துறை இதற்கான விளக்கம் அளித்து, அது பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. "இது வெறும் வரைவு அறிக்கைதான். இறுதி அறிக்கை இன்னும் தயாராகவில்லை' என்று விளக்கமளித்திருக்கிறது. பிரதமரின் பொறுப்பில்தான் நிலக்கரி நிர்வாகம் உள்ளது என்றாலும் இதுதொடர்பாக அவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கமளித்தார். இந்த வரைவு அறிக்கை அமைச்சர்களின் பார்வைக்கு வந்து அவர்களது விளக்கத்தைப் பெற்ற பிறகுதான் இறுதி அறிக்கை தருவார்கள் என்று கூறியுள்ளார்.
இது வரைவு அறிக்கையாகவே இருந்தாலும்கூட, இத்தகைய ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சில லட்சம் கோடி குறையலாமே தவிர, ஏலம் விடாமல் ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு இழப்பு ஏதுமே கிடையாது என்று நிச்சயமாகச் சொல்லிவிடப்போவதில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த ஒதுக்கீட்டுக்கு அவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும், பொறுப்பேற்கவும் வேண்டும்.
தலைமை கணக்குத்தணிக்கைக் குழு இந்த இழப்பைக் கணக்கிடும்போது, விலை உயரும் வாய்ப்புகளைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல் அன்றைய தேதியில் இருந்த நிலக்கரி விலையை மட்டுமே கணக்கில்கொண்டு இழப்பை மதிப்பிட்டாலும் ரூ.6.31 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று கூறுகிறது.
இந்திய மின் உற்பத்தியில் 55% நிலக்கரியைச் சார்ந்துள்ளது. இந்திய நிலக்கரியில் எரிசக்தியைக் காட்டிலும் சாம்பல் அதிகமாக இருப்பதால், இந்தோனேசியாவிலிருந்து நம் தேவையில் 30% நிலக்கரியை இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் உள்ள அனல் மின்நிலையங்களில் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக, இந்தோனேசிய நிலக்கரி, இந்திய நிலக்கரி இரண்டையும் கலந்து எரிபொருளாக்கி, சமாளிக்கிறார்கள்.
இந்நிலையில் நிலக்கரி அதன் எரிசக்தி அளவைப் பொருத்து 17 வகைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு தரமான, எரிதிறன் அதிகமுள்ள நிலக்கரி விலை மேலதிகமாகக் கூடிவிட்டது. நிலக்கரியைப் பொருத்தவரை தேவை பெருகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், மிகப்பெரும் அளவுக்கு நிலக்கரி வெட்டி எடுக்கவும், அதற்கான விலையைக் குறைவாக நிர்ணயிக்கவும், ஏலம் இல்லாமல் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசுக்கு எப்படி மனம் வந்தது?
நிலக்கரி விலை உயர்வைச் சமாளிக்க முடியாமல் பல அனல் மின்நிலையங்கள் தங்கள் மின் உற்பத்தி அளவைக் குறைத்துக்கொண்டுள்ளன. பல அனல் மின்நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் இதற்காகக் கடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்தி வைத்துள்ளன.
மின்கட்டண உயர்வுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று- நிலக்கரி விலை உயர்வு. இந்தோனேசிய நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர்கள். இந்த நிலையில், இந்திய நிலக்கரியில் எரிதிறனைக் காட்டிலும் சாம்பல் அதிகமாக இருந்தாலும்கூட, அதன் தேவை மிகமிக இன்றியமையாதது. அப்படியிருக்கும்போது இத்தனைப் பெரும் பரப்பை தனியாருக்கு மத்திய அரசு தனது விருப்பப்படி ஒதுக்கீடு செய்யும் என்றால், இதனை என்னவென்று சொல்வது?
ஒதுக்கீடு செய்யப்பட்ட 155 நிலக்கரிச் சுரங்க வயல் களில் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்கூட இந்திய நிலக்கரி நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. தனியார்தான் இந்த தேசத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு தனியார் மின் உற்பத்தியாளர் கூறுகிறார் என்றால் இந்தக் கூற்று நியாயமானதுதானா?
அரசுத்துறை நிறுவனங்கள் நிர்வாகச் சீர்கேடுகளாலும், தொழிற்சங்கங்களின் ஆதரவில் தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் மெத்தனத்தாலும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பது உண்மைதான். அதற்குத் தீர்வு நிர்வாகத்தைச் சீர்படுத்துவதும், தொழிற்சங்கங்களின் உதவியுடன் உற்பத்தித் திறனை அதிகரிப்பதும்தானே தவிர, கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து அவர்கள் கொள்ளை லாபம் அடைய வழிகோலுவதல்ல. மக்களை வஞ்சித்து, தேசத்தின் கனிம வளங்களைச் சூறையாட அனுமதிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தேவையில்லை.
தோண்டத் தோண்ட ஊழல்... முதலில் காற்றில் ஊழல். இப்போது கரியில் ஊழல். நமது ஊழ்வினை, வேறென்ன

Source : தலையங்கம்: அரசின் முகத்தில் கரி!

ஏப்ரல் முதல் உயரும் கைடுலைன் மதிப்பு

கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட சொத்துகளின் அரசு வழிகாட்டி மதிப்பு (கைடுலைன் வேல்யூ), வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக மாநிலத்தில் மனை மற்றும் சொத்தின் சந்தை மதிப்பு (மார்க்கெட் வேல்யூ) பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் கைடுலைன் வேல்யூ உயர்த்தப்படாமல் இருந்தது. அதனால், பல இடங்களில் கைடுலைன் மதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது.
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புபடிதான் மனை மற்றும் சொத்துகளை பதிவு செய்ய வேண்டும்.
திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு, கிட்டத்தட்ட சந்தை மதிப்புக்கு இனியாக இருப்பதால் சொத்து பதிவு செய்பவர்கள் இனி கையிலிருந்து போடும் தொகை அதிகமாக இருக்கும்.
இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளக்கும்.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் ஒரு சதுர அடி மனை சந்தை விலை 500 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இதன் அரசு வழிகாட்டி மதிப்பு தற்போது 250 ரூபாயாக இருக்கிறது. தற்போதைய நிலையில் அந்த மனையை ச.அடி. 500 ரூபாய்க்கு வாங்கினாலும், அரசு வழிகாட்டி மதிப்பான 250 ரூபாய்க்கு பதிவு செய்தால் போதும். ஏப்ரல் முதல் அப்படி செய்ய முடியாது; 500 ரூபாய்க்குதான் சொத்த பதிவு செய்ய வேண்டும். இந்த வழிகாட்டி மதிப்பு மூலம் மனை அல்லது சொத்து வாங்கும் போது செலவிடும் தொகை கணிசமாக அதிகரிக்கும்.
அதே நேரத்தில், பட்ஜெட்டில் ஒரு சலுகையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொது மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக முத்திரைத் தீர்வை (ஸ்டாம்ப் டூட்டி) 8 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. பதிவு கட்டணத்தில் (1%) மாற்றமில்லை. தற்போது அரசு வழிகாட்டி மதிப்பில் மொத்தம் 9% முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இனி 8% செலுத்தினால் போதும்.
உதாரணமாக ஒரு மனையின் அரசு வழிகாட்டி மதிப்பு 10 லட்ச ரூபாய் என்றால் தற்போது பத்திரச் செலவு, 9% என்பது 90,000 ரூபாய். இது ஏப்ரல் முதல் 8% என்பதால் 80,000 ரூபாய் பத்திரச் செலவாகும். அதே நேரத்தில், வழி காட்டி மதிப்பு உயர்த்தப்பட்டிருப்பதால் 10 லட்ச ரூபாய் ரூபாய் என்பது 20 லட்ச ரூபாயாக அதிகரித்திருந்தால், 8% என்றாலும் 1,60,000 ரூபாய் பத்திரச் செலவு ஆகும். அந்த வகையில் அரசுக்கு வருமானம் கூடும்.
வழிகாட்டி மதிப்பு உயர்வால், தமிழக அரசுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

Source : Vikatan.com